Quantcast
Channel: இலைகள், மலர்கள், மரங்கள்
Viewing all 175 articles
Browse latest View live

மந்திரம் –இணைவு –மண்டலம்

$
0
0

“அடிப்படையான, உள்ளார்ந்த மனதின் தெளிவான ஒளியே உன்  இயல்பு என்பதை நீ உணரும் வரை, நீ புறப்பொருள் நிலையுணரும் ஜீவனாய் இருக்கிறாய் ; ஆனால் உன்னுடைய கடையியல்பை உணர்ந்த பின்னரோ, நீ புத்தனாகிறாய்”

                                                                                                             – தலாய் லாமா     

தாந்த்ரீக பௌத்தத்தின் வடிவம் வஜ்ரயானம் ; வஜ்ரம் என்றால் சமஸ்கிருதத்தில் “மின்னல்” அல்லது “வைரம்” என்று பொருள். பௌத்த வரலாற்றில், மகாயான ஊக சிந்தனைகளிலிருந்து பௌத்த உயர் இலக்குகளை தனிப்பட்ட வாழ்க்கையில் அரங்கேற்றுதலை நோக்கிய நகர்வை வஜ்ரயானம் வலியுறுத்துகிறது. “வஜ்ரம்” எனும் சொல் ஒரு மனிதனுள் இருக்கும் முற்றிலும் உண்மையான, அழியாததுமாகிய ஒன்றை குறிக்கும் ; அது தன்னைப் பற்றியும் தன்னியல்பைப்  பற்றியும் அம்மனிதன் எண்ணும் புனைவுகளுக்கு எதிரானது.

வஜ்ரயானத்தை  மந்த்ரயானம் என்றும் அழைப்பர் ; ஏனெனில் மந்திரங்கள் வஜ்ரயானத்தின் முக்கியமான அம்சம். மந்திரங்களின் உச்சரிப்பு மனம் கட்டுப்பாட்டை இழந்து தன்னைப் பற்றிய புனைவுலகத்துக்குள்  வழி தவறி அலைவதிலிருந்து கிளைக்கும் சொல்லாட்சியை தடுப்பதற்கு உதவுகிறது. “குஹ்ய மந்த்ர யானம்” என்றும் இப்பௌத்தப் பிரிவு அழைக்கப்படுகிறது. “குஹ்ய” என்றால் “மறைந்திருப்பது”. யதார்த்தத்தை அறியும் செயல் முறையின் உணர்ந்தறிய முடியாத்தன்மையை விவரிக்கும் சொல் இது.

தத்துவார்த்தமாக, மனத்தின் இறுதித்தன்மையை பேசும் யோகசார பௌத்தத்தின் கருத்து மற்றும் சார்பியல் வாத கொள்கைகளை உண்மை என்று ஏற்றுக்கொள்வதற்கு எதிரான மத்யமிகா தத்துவம் – இரண்டையும் உருவடிவமாக வஜ்ரயானம் திகழ்கிறது. அக அனுபவங்களை கையாளும் வஜ்ரயான நூல்கள் அடையாள, சங்கேத மொழியை உள்ளடக்கியவையாய் இருக்கின்றன. இந்த அடையாளங்களும் சங்கேதங்களும் வஜ்ரயானத்தை பின்பற்றுவோரின் சொந்த அக அனுபவங்களுக்கு தூண்டுதலாக இருக்கும் வண்ணம் படைக்கப்பட்டிருக்கின்றன.  இதன் வாயிலாக வரலாற்றுப் புத்தரின் அறிவொளி அனுபவங்களை மீட்டுப்பெறுதலே வஜ்ரயானத்தின் குறிக்கோள்.

மேல்பூச்சான வேறுபாடுடைய  இரண்டு எதிர் கொள்கைகள் உண்மையில் ஒன்றே என்பதை உணர்தலின் மூலமே அறிவொளி எழுகிறது என்பது வஜ்ரயானத்தின் கருதுகோள். செயலற்ற கருத்தியல்கள் எல்லாம் உரிய செயல்கள் வாயிலாக தீர்க்கப்படல் வேண்டும். உதாரணமாக, ஷுன்யதா (வெறுமை) மற்றும் பிரக்ஞா (மெய்ஞ்ஞானம்) எனும் கருத்தியல்கள் கருணா (கருணை) மற்றும் உபாயம் (Skillful Means) போன்ற செயல்களினாலேயே அர்த்தம் பெறும். இந்த அடைப்படை இருமையும் அதன் தீர்வும் பாலியல் சின்னங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன. உதாரணம் : யப்-யும் ( Yab-Yum )

Yab-Yum

இந்தியா, நேபாளம் மற்றும் திபெத்தின் பௌத்த கலைச்சித்தரிப்பு யப்-யும் ; ஆண் தெய்வம் ஒன்று தன் பெண் துணையுடனான பாலியல் அணைப்பின் உருவமைப்பே யப்-யும். செயல் சக்தி அல்லது வழிமுறையானது  (உபாயம் – ஆணாக உருவகிக்கப்பட்டது) ஞானத்துடனான (பிரக்ஞா – பெண்ணாக உருவகிக்கப்பட்டது) மறைபொருள்-கூடலை சித்தரிப்பதாக இது பொதுவாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆன்மீக அறிவொளியைத் தேடும் முயற்சியில் தோற்றவுலகின் பொய் இருமைகளை முறியடிப்பதில் யப்-யும் இணைவின் புரிதல் அவசியம். பாலியல் கூடலின் பயன்பாடு இந்து தாந்த்ரீக மரபில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  சீன – ஜப்பானிய பௌத்தர்கள் யப் – யும்  சித்தரிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. திபெத்திலும் கூட மறைபொருள் முக்கியத்துவம் அறிந்து  முறையாக போதனை பெற்றவர்களுக்கு மட்டுமே யப்-யும் சித்திரங்கள் மீதான தியானம் அனுமதிக்கப்படுகிறது. பெண்-துணையுடன் இருக்கும் தெய்வங்களின் மீதான பிராத்தனைகள் மட்டுமே பயன் தரும் என்னும் நம்பிக்கையும் திபெத்தில் உண்டு. பிக்குகளாலும் சாதுக்களாலும் வழிபாட்டுக்காக ஏற்கப்படும் காவல் தெய்வங்களும் (yi-dam) மாறுபாடில்லாமல் யப்-யும் அணுகுமுறையை ஏற்பதாகவே திபெத்தில்  சித்தரிக்கப்படும்.

யோகசார பௌத்தம் வளர்ச்சி பெற்ற காலத்தில் அதனுடன் இயைந்து வளர்ந்தது என்பதைத் தவிர, வஜ்ரயானத்தின் வரலாற்று மூலம் பற்றிய தெளிவான தகவல் ஏதும் அறியக் கிடைக்கவில்லை ; ஆறாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை தழைத்தோங்கிய வஜ்ரயானம் இந்தியாவை சுற்றியிருக்கும் நாடுகளில் நீடித்த செல்வாக்கை இன்றளவும் செலுத்தி  வருகிறது.   

vairo

வைரோசனரின் மண்டலம்

வஜ்ரயானத்தின் வளமான சித்திரக் கலைகள் புனித மண்டலத்தில் உச்சக்கட்டத்தை எட்டின. மண்டலம் எனப்படுவது பிரபஞ்சத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தரிப்பு ; வஜ்ரயான பௌத்தத்தில் மண்டலங்கள் தியான ஊக்கிகள். ஆன்மீகச்சசடங்குகளை நிகழ்த்துவதற்காகவும் இந்த குறியீட்டு வரைபடங்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. பரிசுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் பிரபஞ்சத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மண்டலங்கள் வரையப்பட்டு கடவுளர்களைத்  தாங்கிக் கொள்ளும்  வாங்கியாகவும், பிரபஞ்ச சக்திகளைக் குவிக்கும் புள்ளியாகவும் மணடலத்தை கருதும் ஐதீகம் இன்றும் தொடர்கிறது. நுண்ணுயிரான மனிதன் மானசீகமாக மண்டலத்துக்குள் “நுழைந்து” அதன் மையம் நோக்கி “நகர்தல்”  சிதைவு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு என்னும் பிரபஞ்ச செயல் முறைகளின் ஒப்புமை தியானமாக வஜ்ரயானத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பௌத்த மண்டலங்கள் இரு வகைப்படுவன ; ஒன்று, கர்ப்ப-தாது ; இம்மண்டலம் ஒன்றிலிருந்து பலவாக நகர்தலைக் குறிக்கும். இன்னொன்று வஜ்ர-தாது – பலவற்றிலிருந்து ஒன்று.

மண்டலங்கள் காகிதத்தில் அச்சிடப்பட்டதாக இருக்கலாம் ; துணியில் வரையப்பட்டதாக இருக்கலாம் ; சுத்தம் செய்யப்பட தரையில் வெள்ளை மற்றும் பலவித நிற கயிறுகளால் வரையப்படலாம் ; கோலங்களாக இருக்கலாம் ; பித்தளையில் வடிவமைத்ததாக இருக்கலாம் ; கற்களில் கட்டப்பட்டதாக இருக்கலாம். கற்களில் கட்டப்பட்ட மண்டலத்துக்கான மிகச் சிறந்த உதாரணம் – இந்தோனேசியாவில் இருக்கும் போரோபுதூர் நினைவுக் சின்னம் ; அங்கு ஸ்தூபத்தை வலம் வருதல் மையத்தை நோக்கிய சடங்குமுறையை அனுஷ்டிப்பதற்கு ஒப்பாகும்.

indo-boro-aerial_3030577c

போரோபுதூர் ஆலயம் – இந்தோனேசியா – எட்டாம் நூற்றாண்டு

 

 



விடியல் சாட்சி

$
0
0

இன்னும் சிறிது விழித்திருந்தால்

விடியலைச் சந்திக்கலாம்

இதுவரை வாராத தூக்கம்

இப்போது வருமெனின்

முதல் துண்டு வெளிச்சம்

இருளுடன் கலந்து

விடியல் பூக்கும் சித்திரத்தைக் காண முடியாது

இரவெல்லாம் விழித்திருந்தமைக்கு

இந்த ஆறுதல் கிடைக்கட்டும்

உறக்கமின்மை ஒரு பரிசு

புற அமைதியை அனுபவிக்கும் சந்தர்ப்பம்

அக அமைதியை இழந்து

ஒரே தன்மையான

பல்வேறு சிந்தனைகள்

குறுக்கும் நெடுக்குமாக ஓடி

தூக்கத்தை தூர நிறுத்தி

விதிக்கப்பட்ட தண்டனைக்கு சிறு ஊதியம்

தலையோ தலைப்பாகையோ

உருளப்போவது எதுவாயினும் சரி

விடியல் காட்சியைக்

கண்டு களிக்கத் தயாராகிவிட்டேன்


சில துணுக்குகள்

$
0
0

மகாயானத்தின் எழுச்சிக்குப் பின்னால் வைதீக சமயத்தின் தாக்கமோ செல்வாக்கோ இருந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் சந்தேகித்திருக்கிறார்கள். உ-ம் கெர்ன், மேக்ஸ் முல்லர், கீத், ஷெர்பாட்ஸ்கி முதலானோர். கடவுள் என்னும் கருத்துரு, புத்தபக்தி, மாறும் நிகழ்வுகளின் மைதானமாக இருக்கும் அழியா முழுமை ஆகிய கருப்பொருட்கள் ஒரு வேளை வைதீக சிந்தனைகளின் தாக்கத்தால் உள்ளே நுழைந்திருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. ஆனால் இது பற்றி அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் இதற்கான நேரடி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. வைதீக மதத்திடமிருந்து அப்படி ஏதாவது பெறப்பட்டிருந்தால், அவை மறைமுகமானதாகவோ அல்லது தற்செயலானதாகவோதான் இருந்திருக்க முடியும். முழுமைவாத மெய்யியலை நோக்கியும் இறைநிறைவாத சமயவியலை நோக்கியும் உள்ளார்ந்த பௌத்த சிந்தனை இயல்பாக நகர்ந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறே மிக அதிகம்.

(Source : the central philosophy of Buddhism – a study of Madhyamika System — T R V Murti)

+++++

golden-leaf

தாய்லாந்து மற்றும் இதர தென்கிழக்காசிய நாடுகளில் அஞ்சலி செலுத்துவதற்கு மிகவும் ஏற்றதான தனிமமாக தங்கம் கருதப்படுகிறது. அந்த நாட்டு மரபுகளில் தங்கத்தை புத்த கோயில்களுக்கு கொடையளிப்பது பக்தியின் உச்ச வெளிப்பாடு. சாரநாத், கயா போன்ற இடங்களுக்குச்  சென்ற போதெல்லாம் தென்கிழக்காசியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்க இலைத் தாள்களை அங்குள்ள புத்தர் சிலைகளின் மேல் ஓட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். இது  ஒரு புண்ணியச் செயல் என்று  தென்கிழக்காசியர்கள் நம்புகிறார்கள். தங்க ஒளி வீசும் வாழும் புத்தரை நினைவு கூறும் விதமாக இந்த மரபு பின்பற்றப்படுகிறது.

+++++

திரிபிடகத்துக்கு மறுவிளக்கம் தந்து தொகுக்கும் பணியில் ஈடுபட்ட புத்தகோசர் (ஐந்தாம் நூற்றாண்டு) புத்தரின் மொழி என்று சொல்லப்படும் மகதி அல்லது பாலி மொழியைத் தேர்ந்தெடுக்காமல்  தமிழைத் தேர்ந்தெடுத்திருந்தால் தமிழ்ப்பௌத்தத்தின் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்? பௌத்த மையமான காஞ்சியில் வாழ்ந்து பின்னர் இலங்கை சென்ற புத்தகோசர் தம்மத்தை தமிழில் ஏன் எழுதவில்லை என்பது ஒரு விதத்தில் புதிர்தான். வினய-பிடகத்தில்  (Culavagga, V 33) சாக்கியமுனி சொல்வார் : “சாதுக்களே! புத்தர்களின் வாக்குகளை அவரவர் மொழிகளில் வாசித்துக்கொள்ள நான் அனுமதிக்கிறேன்”  சாக்கியமுனியின் வாக்கை மீறி தமிழ் மொழியை ஒதுக்கிவிட்டு புத்தகோசர் பாலியைத் தேர்ந்தெடுத்தது தொகுப்புக்கு ஒரு  சர்வதேச அங்கீகாரத்தை  பெற்றுத்தரும் முயற்சியாய் இருந்திருக்குமா? இன்றளவும் இலங்கையிலும் பிற தேரவாத தென்கிழக்காசிய நாடுகளிலும் புத்தவசனமாக போற்றி வாசிக்கப்படுவது புத்தகோசர் திரிபிடகத்துக்கு எழுதிய உரைகள்தாம். விசுத்திமக்கா (Path of Purity) புத்தகோசரின் முக்கியமான நூலாகும்.

+++++

அசோகரின் கொசம்பி (இன்றைய அலகாபாத்) தூண் அரசாணையில் புத்தசங்கத்தில் எழுந்த பேதங்கள் பற்றியும் அந்த பேதங்கள் சங்கத்தை துண்டாடுமளவுக்கு வளர்ந்தது பற்றியும் குறிப்புகள் வருகின்றன. சங்கத்தைப் பிரிக்க யத்தனிப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிக்கு என்னும் தகுதியை இழப்பார்கள் என்னும் மெலிதான எச்சரிக்கையும் அந்த அரசாணையில் உள்ளது. உண்மையான பௌத்தத்தை ஸ்தாவிர வாதிகளே (பின்னாளைய தேரவாதத்தின் மூலம்) போதிக்கின்றனர் என்றும் சங்கிகர்கள் என்றழைக்கப்பட்ட சங்கத்தில் பேதத்தை எழுப்பினவர்கள் பேசியது பௌத்தமே அல்ல என்று அசோகரின் தமையனாரும் பௌத்த தேரராகவும் விளங்கிய திஸ்ஸர் தீர்ப்பு வழங்கி சங்கத்தில் தோன்றிய கலகத்துக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டதாகவும் அசோகர் மறைந்து ஏறக்குறைய 700 வருடங்களுக்குப்பிறகு எழுதப்பட்ட மகாவம்சம் சொல்லுகிறது. அசோகர் தனிப்பட்ட முறையில் பௌத்தத்தின் எந்த பிரிவையும் ஆதரித்ததாக அவரின் அரசாணைகள் எதிலிருந்தும் நமக்கு தெரியவரவில்லை. அசோகாவதானா-விலும் அசோகர் ஒரு குறிப்பிட்ட பௌத்தப் பிரிவுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் இல்லை. மகாவம்சமும் ஏனைய இலங்கை நூல்கள் மட்டும் இலங்கையில் பின்பற்றப்பட்ட தேரவாதத்துக்கு நெருக்கமான பௌத்தப்பிரிவை மட்டும் அசோகர் ஆதரித்தார் என்று சொல்வது தத்தம் பிரிவுகளை முன்னிலை படுத்த வரலாற்று நாயகர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளல் என்னும் அரதப்பழைய பழக்கத்திற்கோர் உதாரணம். பொதுவாக, சமயவரலாற்று நூல்களுக்கும் துல்லியத் தன்மைக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. இந்த உலகளாவிய பழக்கத்திற்கு இன்று வரை அழிவில்லை. துல்லியமான தகவல்கள் அவசியமற்றவை எனும் போக்கு அறிவியல் யுகத்திலும் மாறாது தொடர்கிறது.

+++++

மணிமேகலையின் ஆறாம் காதை சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை. ஒரு சூனியக்காரியின் ஆவி உள்புகுந்து அதன் விளைவாய் மரணமுறும் மகன் சங்களனுடைய உடலைச் சுமந்து கொண்டு சம்பாபதி தெய்வத்திடம் முறையிடுகிறாள் கண்பார்வையற்ற கோதமி. அவளின் அரற்றல் கேட்கப் பொறுக்காமல் அவள் முன் தோன்றுகிறது சம்பாபதி தெய்வம். சிறுவன் ஊழ்வினை காரணமாகவே இறந்தான் என்றும் அவனை உயிர்ப்பிக்க யாராலும் முடியாது என்றும் கூறுகிறது. கோதமி அதை நம்ப மறுத்து மகன் மீண்டும் உயிர்பெறாவிடில் தானும் உயிர் நீப்பதை தவிர வேறு வழியில்லை என்கிறாள். தன் சக்தியால் ஆனதைச் செய்வதாக சொல்லும் சம்பாபதி கீழ்க்கண்டவர்களை கோதமி முன்னிறுத்தியது.

நால்வகை மரபி னரூபப் பிரமரும்

நானால் வகையி னுரூபப் பிரமரும்

இருவகைச் சுடரு மிருமூ வகையிற்

பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும்

பல்வகை யசுரரும் படுதுய ருறூஉம்

எண்வகை நரகரு மிருவிசும் பியங்கும்

பன்மீ னீட்டமு நாளுங் கோளும்

தன்னகத் தடக்கிய சக்கர வாளத்து.....

அரூபப்பிரமர்கள், உரூபப்பிரமர்கள், சூரிய சந்திரர்கள், அறுவகைத் தெய்வங்கள், மனிதர்கள், நட்சத்திரங்கள் முதலான அனைத்தும் அங்கு குழுமின. சம்பாபதி ஏற்கெனவே சொன்னதை அவைகள் உறுதி செய்தன. கோதமியும் மனதைத் தேற்றிக்கொண்டு மகனின் மரணத்தை ஏற்றுக்கொண்டவளாய் அவன் உடலத்தை சிதைத்தீக்கு படைக்கிறாள்.

பௌத்த மரபில் அங்கு குழுமிய கடவுளர் எல்லாம் உறையுமிடம் சக்கரவாளம் என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்த சுடுகாட்டில் அவர்கள் குழுமிய இடம் சக்கரவாளக் கோட்டம் என்றழைக்கப்படலானது. தேவதச்சனாகிய மயன் அவ்விடத்தில் சக்கரவாளக் கோட்டத்தை பின்னாளில் எழுப்புகிறான். நடுநாயகமாக மேருமலையும் அதனைச்சுற்றி எட்டு மலைத்தொடர்களும், நான்கு கண்டங்களும், ஈராயிரம் தீவுகளையும் சமைத்தான்.

இந்த விவரிப்பை பௌத்த cosmologyயின் கூறுகளின் குறியீட்டுச் சித்தரிப்பாக காணலாம். முழுக்கோட்டமும் ஓர் யந்த்ரமாகக் கொள்ளலாம். வழிபாட்டுக்கும் தியானத்துக்குமான ஒரு மண்டலம். கதைக்குள் வரும் நிகழ்வின் வாயிலாக பௌத்த அண்டவியலின் சிறு கண்ணோட்டத்தை நமக்கு காட்டிவிடுகிறது மணிமேகலை காப்பியம்.


குறுங்கதைகள்

$
0
0

பழக்கம் எனும் மகாசக்தி

பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன்.

+++++

நட்பு

நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து அதை சீர் செய்யும் நடவடிக்கையை எடுக்க நெடுநேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பனும் என் நினைவில் வரவில்லை. அவர்கள் நினைவிலும் நான் வராமல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் அளித்த ஆறுதலில் குற்றவுணர்வு கரைந்து போனது.

+++++

பூனைக்கு வந்த காலம்

சில உயர்அதிகாரிகளின் நிலை பாவமாய் இருக்கும். நன்கு அதிகாரம் பண்ணி நம்மை கட்டுக்குள் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கும் மேலான ஓர் அதிகாரி நம்மை அழைத்து நம் வேலையைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது அருகில் இருக்கும் நம் அதிகாரியின் முகம் ரசிக்கத் தக்க ஹாஸ்யக்காரனின் பாவத்தில் காணப்படும். போன வாரம் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. பாவ்லா காட்டியவாறே இத்தனை மாதங்களாக அவர் செய்து வந்த ஒரு பணி எதிர்பாராதவிதமாக கைமாறி எனக்களிக்கப்பட்டது. “இனிமேல் நீயும் சீனியர் மேனேஜ்மென்டின் ஒர் அங்கம்” என்று சொல்லி அவர் கைகுலுக்குகையில் “தயவுசெய்து என்னை மேலே போட்டுக் கொடுத்துவிடாதே” என்று சொன்னது அவர் உடல்மொழி.

+++++

திருப்தி

என் நண்பர் ஒருவரிடம் ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்துவிட்டு அதைப் பற்றிச் சொன்னால் உடனே தானும் அதைப் பார்த்துவிட்டதாகச் சொல்லுவார். அதில் நடித்த நடிகர் பெயரைச்சொல்லி அவரின் நடிப்பை குறை சொன்னால் உடனே மறுப்பு சொல்வார் நண்பர். தேர்ந்த விமர்சகர் போல “அப்படியெல்லாம் சொல்லிவிட முடியாது ;  கொடுக்கப்பட்ட ‘ரோலை’ திருப்தியா செஞ்சுருக்காரு” என்பார். நடிகர் பண்ணிய ‘ரோல்’ என்ன என்று நானும் அவரைக் கேட்பதில்லை ; அவரும் சொல்வதில்லை.

——-

பாத்திரத்தில் நிலைத்திருத்தல்

பெரிய பொய்களை அழகிய வார்த்தைகளுக்குள் அடக்கி கண்களை உருட்டியபடி பேசிக் கொண்டிருந்த அதிகாரியை விரலை லேசாக உயர்த்தி தடுத்து நிறுத்திய வாடிக்கையாளரின் பிரதிநிதி – நல்லா பேசுறிங்க ஆனா என்னால் நம்ப முடியல – என்றார். பொய்களுக்கு எந்த வடிவம் கொடுப்பது என்று புரியாமல் விழித்த அதிகாரி என்னை நோக்கினார். உண்மையை மறைமுகமாக பாதி மறைத்துச் சொல்லும் முயற்சியில் நான் பேசத் தொடங்குவதற்குள் பிரதிநிதி இடைமறித்து – மேல சொல்லுங்க உங்க பொய்ய வச்சு உங்க நிறுவனத்தை எடை போடமாட்டேன் – என்றார். அதிகாரி தப்பித்தோம் பிழைத்தோம் என விடுவிடென்று மின்னல் வேகத்தில் பிரசன்டேஷனை ஓட்டிமுடித்து மடிக்கணினியை மூடினார். வாடிக்கையாளரின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவுடன்  – இது மாதிரி மூஞ்சி முன்னால பேசுறவங்களே பெட்டர் – என்று அதிகாரி என்னிடம் சொன்னபோது – மீட்டிங் முடிஞ்சிருச்சி, இன்னும் எதுக்கு ஸேல்ஸ் பிட்ச் மோட்லயே இருக்கீங்க – என்று கேட்கத் தோன்றிற்று. ஆனால் அப்படிச் சொல்லாமல் – சரியாச் சொன்னீங்க – என்று சொல்லி நானும் பாத்திரத்திலேயே தொடர்ந்து இருந்தேன்.


—–

சிலேடை

போராடும் ஒரு நடிகர் எந்த வேடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார் ; பழுத்த அனுபவஸ்தர்களான மூத்த கார்ப்பரேட் அதிகாரிகளும் எந்த பணியையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இயக்குனர்களின் வழிநடத்தலின்படி பூணும் கோமாளி வேடமும் இதில் அடக்கம்.

—–

எழுதிப்பார்த்த போது…

அனுபவப் பகிர்வு எளிது. படித்துப் புரிந்து கொண்டதையும் அறிந்துகொண்டதையும் பகிர்தலும் எளிது. புரியாததையும் அறியாததையும் பகிர்தல் அவசியமில்லாதது. தொடர்புறுத்தல் வாயிலாக பெறப்படும் இணைவுகள், வாசிப்பின் நினைவு கூறல்கள், உரிய வடிவம் குறித்த பிரக்ஞை, நிகழ்வுகள் குறித்த தனிப்பட்ட பார்வைகள், கூரிய கவனிப்பு ஆகிய கூறுகள் மனப்பயிற்சியினால் அடையக்கூடியவை. சரியான புரிந்துணர்வை எய்துங்காலை சொற்கள் தம்மைத்தாமே உருப்பெருக்கிக் கொள்ளும். தமக்கான உண்மைகளை எழுதுதலோ பிறருக்கான உண்மைகளை எழுதுதலோ இரண்டுமே அடிப்படையில் ஒன்று என்ற தெளிதல் கைவந்துவிட்டால்  எல்லைகளற்ற எங்கும் பரந்த மைதானத்தில்  எழுத்தோட்டம் நிரந்தரமாய் நிகழ்ந்தவாறிருக்கும். (ஒரு ஃப்லோல வந்தது ; சீரியஸா எடுத்துக்கப்படாது)


புத்தருக்கு ஒரு கடிதம்

$
0
0

நண்பர் Swami Nathan Ganesan மறைந்தவர்கள் யாருக்கேனும் கடிதம் எழுதினால் யாருக்கு எழுதுவீர்கள் என்று கேட்டார். அதிகம் யோசிக்காமல் புத்தருக்கு என்று சொல்லிவிட்டேன். அளவில் சின்ன மடலாக இருக்க வேண்டும் ; ஓரிரு செய்திகளை மட்டும் சொல்வதாக இருக்க வேண்டும்; பத்து நிமிடங்களுக்குள் எழுதியதாக இருக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனைகள் வேறு. எனக்கு பத்து மடங்கு அதிக நேரம் எடுத்தது பின்வரும் கடிதத்தை எழுதி முடிப்பதற்கு.

——

உங்களுக்கு சிறுமடலொன்று எழுத வேண்டுமாய் ஓர் எண்ணம் எழுந்தது. சம்சாரத்தின் தம்மங்கள் போன்று இந்த எண்ணமும் தனித்துவத்துடன் எழுந்திருக்க முடியாது என்ற அறிதல் எனக்குண்டு. முழுநிலவு பூத்த ஓர்இரவில் நீர் கண்டுணர்ந்து எங்களுக்கு போதித்த பிரதீத்ய சமுத்பாதம் – ஒன்றைச் சார்ந்து ஒன்றாக எழும் தம்மங்கள் பற்றிய கோட்பாடு – விரித்துரைப்பது போல மடல் எழுதும் எண்ணம் மட்டுமல்ல சம்சாரவுலகின் எந்த நிகழ்வும் அந்தரத்திலிருந்து தன்னந்தனியாக வந்து விழுந்தவையாக இருக்க முடியாது. கண்டுணர முடியாத மூல காரணங்களும் கிளைக் காரணங்களும் அவற்றின் பின்னால் இருக்கும். உம்மை, உமது தம்மத்தை சிந்திப்பதற்காக என்றோ விதைக்கப்பட்ட கரும விதையின் விளைவுதான் இம்மடலெழுத என்னைத் தூண்டியது எனும் சிந்தனை என்னுள் ஆனந்தத்தை அள்ளி இரைக்கிறது. பழகிப்போன பக்தியுணர்வில்லை இது என்று மட்டும் சொல்லிக்கோள்ள விரும்புகிறேன். இது ஒரு வியப்பு நிலை என்றுதான் சொல்ல முடியும். வியப்புணர்வு என்னைச் விவரிக்கவொண்ணா அமைதியிலாழ்த்துகிறது. சிக்கலான நூல் பந்துக்குள் கிடக்கும் ஒரு முடிச்சு நான் என்பதான உருவகத்தில் மனதைக் குவிக்குமுன் நேற்று கண்டுணரப்பட்ட தம்மம் போல இன்றளவும் புதுமை மாறாது விளங்கும் நிரந்தர உண்மையை அறிவுறுத்திய உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

——


இடைத்தங்கல் மையங்கள்

$
0
0

“எங்கள் பல்கலைக்கழகங்களுக்கு வந்து படியுங்கள்” என்று ஆஸ்திரேலிய பல்கலைகழகங்கள் கூவியழைக்கின்றன. “எங்கள் நாட்டுக்கு சுற்றுலா வாருங்கள்” என்று இஸ்ரேல் அழைக்கிறது. இத்தகைய விளம்பர சுருதியை யிஜின் என்ற சீனப்பயணியின் குறிப்பில் நமக்கு படிக்கக் கிடைக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு விஜயம் செய்தவர் யிஜின். இந்தியா – சீனா இரண்டுக்குமிடையிலான வர்த்தக, கலாசார பரிவர்த்தனையின் முக்கிய இணைப்பாக தென்கிழக்காசிய அரசுகள் பங்காற்றிவந்தன. தெற்கு சுமத்ராவிலிருக்கும் பாலெம்பாங்-கை தரைநகராகக்கொண்டு ஆண்ட ஶ்ரீவிஜயர்களின் காலத்தில் இந்தியா செல்லுமுன்னர் பாலெம்பாங்-கில் ஆறு மாதம் தங்கி சமஸ்கிருத இலக்கணத்தை பயின்றாராம் யிஜின். சீனா திரும்பும் வழியிலும் பாலெம்பாங்கில் சிறிது காலம் தங்கியிருந்து சில பௌத்த நூல்களின் மொழிபெயர்ப்புகளை செய்து முடித்தாராம். அவர் சொல்கிறார் : “முழுக்க முழுக்க பௌத்த வாசிப்பில் மூழ்கியிருந்த ஏறக்குறைய ஆயிரம் பௌத்த பிக்குகள் அங்கு வசித்தனர். பௌத்தம் மட்டுமல்லாமல் அனைத்து வகை அறிவியல்களையும் அவர்கள் கற்று வந்தனர்.மூல ஆகமங்களை படித்தறிவதற்காக மேற்கு திசைக்கு பயணஞ்செய்ய விழையும் சீன சாது ஒருவர், ஓரிரு வருடங்கள் இங்கு தங்கியிருந்து (பாலெம்பாங், ஶ்ரீவிஜய பேரரசு) இந்திய பயணத்துக்கு தயார் செய்து கொள்ளலாம்.” கிழக்கு திசைப் பயணத்தின் போது தங்கள் விமான நிலையங்கள் வழியாக “transit” செய்யலாம் எனும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் தேசிய விமான நிறுவனங்களின் விளம்பர வாசகங்களை நினைவுபடுத்தும் யிஜினின் இந்த குறிப்பு.

——

அதினா பூர் என்று புராதன காலத்தில் வழங்கப்பட்ட,  பௌத்தம் தழைத்த, பாஹியான், யுவான் சுவாங் போன்ற சீன யாத்திரிகர்கள் விஜயம் செய்த, அலெக்ஸாண்டர் கைக்குள் இருந்து அவரின் மறைவுக்குப் பிறகு அவரின் தளபதிகளுள் ஒருவரான செலியூக்கஸ் என்பவரிடம் வந்து, சந்திரகுப்த மௌரியர்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, கிரேக்க-பௌத்த பேரரசு, குஷானப் பேரரசு, அராபிய முஸ்லிம்கள், கஜினி, கோரி, தைமூர், முகலாய வம்சங்கள் கீழ் வந்து, பெருத்த உயிரிழப்புகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கைக்கு வந்து…..அந்த நகரத்தில் இன்னும் போர் முடிந்தபாடில்லை….புராதன பட்டுச் சாலைக்கு அருகில் இருந்த காரணத்தால் வணிகமுக்கியத்துவமும் மத்திய ஆசியாவிலிருந்து இந்திய நிலப்பரப்புக்குள் ஊடுருவிய ஹூணர்கள், மங்கோலியர்கள் போன்றோரின் முதல் நிறுத்தமாக  கைபர் கணவாய்க்கு அருகில் இருந்தமையால் பூகோள-அரசியல் முக்கியத்துவமும் அந்நகருக்கு பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது.  தன் பேரன் அந்நகரைப் பெரிதாகக் காட்டுவானென்ற முகலாய மன்னன் பாபரின் கனவை பூர்த்தி செய்தான் பேரன்….ஜலாலுத்தின் முகமது அக்பர் என்ற பேரனின் பெயரிலேயே அந்த நகரம் இன்று வழங்கப்படுகிறது….கிழக்கு ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் – ஜலாலாபாத்!

Tapari Kalan சிதிலங்கள் ஜலாலாபாதிலிருந்து பத்து கி மீ தொலைவில் இருக்கின்றன. அங்கு அகழ்வாராய்ச்சி நடந்த நாட்களில் (1923) எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் பாரிஸ் மியூசியத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. தலையற்ற முண்டமாக புத்தரின் சிலை  காந்தாரக் கலையின் எழில் மிளிர நின்றுகொண்டிருக்க, தரையில் சிலையின் தலை விழுந்து கிடக்கிறது.

tapari-kalan-excavation

Tapari Kalan என்ற புராதன பௌத்த மடாலயத்தின் சிதிலங்கள் 1920-30களில் பிரெஞ்சு தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்பட்டன. ஜலாலாபாத்திற்கு தெற்கே ஹட்டா என்ற இடத்தில் Tapari Kalan உள்ளது. அகழவாராய்ச்சியில் கிடைத்த முக்கியமான சிற்பங்கள் இன்று பாரிஸ் அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப்போரில் பாமியான் புத்தர்கள் போல Tapari Kalan-னும் சேதமுற்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். Tapari Kalan-இன் இன்றைய கால புகைப்படத்தை பார்க்கலாம் என்று கூகிளில் தேடினேன். கிடைக்கவில்லை. தேடலின் முடிவுகள் உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களை வரிசைப்படுத்தின. Tapari Kalan, Jalalabad, Hadda என்று பல ஆப்கன் ஊர்களின் பெயர்களைக் கொண்ட ஊர்களும் சஹாரன்பூர் மாவட்டத்தில் இருக்கின்றன. அங்கிருப்பவர்களின் மூதாதையர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்கள் போலும். மனிதர்கள் போன்று சின்னங்களும் நகர்ந்திருந்தால்…..

——

நவீன காலத்தில் சீனர்கள் அந்நகரை காசி என்றழைக்கிறார்கள். பெரும்பான்மை உய்கர் இன முஸ்லிம்கள் வாழும் அந்த ஊர் – காஷ்கார் . சீனாவின் மேற்கோரத்தில் இருக்கும் ஷீன்ஜாங் (Xinjiang) பிராந்தியத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரம்.

வரலாற்றுக் காலந்தொட்டு மத்திய ஆசியாவின் முக்கியமான வணிக நகரங்களில் ஒன்று காஷ்கார் . தெற்கு பட்டுச்சாலையில் அமைந்திருக்கும் ஊர். கிருத்துவ யுகத்தின் துவக்கத்தில் ஹான்-சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. உள்ளூர் மன்னரின் ஆட்சியை மேற்பார்வை செய்ய ஹான் – சீனாவின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் நூற்றாண்டின் போது அண்டைய ராஜ்யமான குஷானப்பேரரசின் மீது காஷ்காருக்கு பயம். அவர்கள் தம்மைத் தாக்கக்கூடாது என்பதால் தம் குடும்பத்தின் வாரிசொன்றை பணயமாக குஷான அரசிடம் ஒப்படைத்திருந்தது காஷ்கார் அரசகுடும்பம். இதற்கு நடுவில் ஹான் – சீனப் பிரதிநிதியுடன் ஏற்பட்ட ஒரு பூசல் காரணமாக சீனப்பிரதிநிதி கொலை செய்யப்பட்டுவிட ஹான்-சீனா காஷ்கார் மீது படையெடுத்தது. குஷானப் பேரரசின் உதவி நாடப்படுகிறது. அதுவரை அவர்களிடம் பணயமாக இருந்த இளவரசனுக்கு முடிசூட்டுகிறார்கள் குஷானர்கள். காஷ்கார் இப்போது குஷானர்களின் பாதுகாப்பில் இருப்பதால் ஹான்-சீனா படை பின் வாங்குகிறது. இது நடந்தது கிபி 170 இல். காஷ்காரில் பௌத்தம் தழைக்கத் தொடங்கியது இந்த சமயத்தில்தான். கிட்டத்தட்ட பத்தாம் நூற்றாண்டு வரை பௌத்தம் காஷ்கார் மக்களின் முக்கிய சமயமாகத் திகழ்ந்தது. பௌத்தம் சீனாவில் பரவித் தழைத்தற்கு குஷானர்களின் கட்டுப்பாட்டில் காஷ்கார் வந்தது ஒரு முக்கியக் காரணம்.

குஷானர்கள் காலத்தில் இரானிய மக்கள் குழுக்களின் கிளைகளில் ஒன்றான சாகா மக்களும், இந்தோ- ஐரோப்பிய மொழி பேசிய டொகாரிய இன மக்களும் காஷ்காரில் வசித்தனர். எட்டாம் நூற்றாண்டில் பௌத்தம் மறைந்து இஸ்லாம் கோலோச்சத்தொடங்கியபோது இவர்கள் புறந்தள்ளப்பட்டு துருக்கிய பழங்குடிகளான உய்கர் குடியேறினர். எட்டு நூற்றாண்டு காலம் பிரசித்தமாயிருந்தும், குறிப்பிடத்தக்க பௌத்த அடையாளங்கள் ஏதும் இன்று காஷ்காரில் மிஞ்சியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

—–

பாலெம்பாங் (இந்தோனேசியா), ஜலாலாபாத் (ஆப்கானிஸ்தான்). காஷ்கார் (சீனா) என்னும் மூன்று முக்கியமான இடைத்தங்கல் மையங்களில் இன்று பௌத்தம் காணாமல் போய்விட்டது. உலகின் நான்காவது பெரிய சமய நம்பிக்கையாக பௌத்தம் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு இந்த வரலாற்றுக்காலத்து இடைத்தங்கும் இடங்கள் முக்கியப்பங்காற்றின.

 


கிரியின் கட்டுரை

$
0
0

டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் – சிறுகதை தொகுப்பிற்கு சொல்வனம் (2/12/2016) இதழில் ஒரு விரிவான விமர்சனக்கட்டுரையை எழுதியிருக்கிறார் நண்பர் கிரிதரன். இங்கிலாந்தில் தகவல் தொழில்நுட்பப் பணியில் இருக்கும் கிரிதரன் சொல்வனம் இணைய இதழ் தயாரிப்பில் தொடர்ந்து தன் பங்களிப்பை வழங்கிவருகிறார். பிரதிகளை எடிட் செய்வதில் அவரிடம் இருக்கும் தனித்திறமையை நானறிவேன். சில வருடம் முன்னர் சொல்வனத்தில் வெளிவந்த என்னுடைய ஓரிரு கதைகளின் வடிவம் குறித்து அவருடன் நிகழ்த்திய  கருத்துப்பரிமாற்றம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த விமர்சனக் கட்டுரையிலும்  அவர் சொல்லும் கருத்துக்கள் புனைவிலக்கியம் எழுத விழையும் எவருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கட்டுரைகள் மட்டுமல்ல ; சில அருமையான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார் கிரி. அவர் சிறுகதைகளில் “நந்தா தேவி” எனக்கு மிகப்படித்தமானது.  ஜெயமோகன் தளத்திலும் அவர் சிறுகதையொன்று ஓரிரு வருடங்கள் முன்னர் வெளியானது.    

கிரிதரன் என் நூலுக்கான விமர்சனம் ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நண்பர் நட்பாஸ்-ஸிடம் ஒருமுறை சொன்ன போது, அவர்தான் கிரிதரனிடம் இது குறித்துப் பேசினார். எனவே இந்த விமர்சனக்கட்டுரை உருவாவதற்கு நட்பாஸும் ஒரு காரணம். கிரிக்கும் நட்பாஸுக்கும் மீண்டும் எனது நன்றிகள்.

சொல்வனம் கட்டுரைக்கான சுட்டி :

‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்’ சிறுகதைத் தொகுப்பு மதிப்புரை

     


ஒரு கொலைகாரனின் புனிதத்துவம் நோக்கிய பயணம்

$
0
0

தட்சசீலத்தில் படிப்பை முடித்து சாவத்தி திரும்ப தயாராகிக் கொண்டிருந்த அஹிம்ஸகனின் குரு கேட்ட தட்சிணை ஆயிரம் சுண்டு விரல்கள். மகாபாரதத்தின் துரோணர் போலவே அஹிம்சகனின் ஆசிரியரும் தன் மாணவனின் முன்னேற்றத்தைக் காண சகியாதவராய் தனக்கு ஆயிரம் மனிதர்களின் வலது கையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சுண்டு விரல்கள் வேண்டும் என்றார்.      கட்டை விரலை தட்சிணையாகக் கேட்ட துரோணரிடம் தன் விரலை சமர்ப்பித்துவிட்டுச் சென்ற ஏகலைவன் பின்னாளில் என்ன ஆனான் என்பது தெரியவில்லை. ஆனால் அஹிம்சகன் ஆயிரம் விரல்கள் சேர்க்கும் முயற்சியில் இறங்கி தொடர் கொலைகாரனாகி விரல்களை மாலையாக பூண்டு அங்குலிமாலா எனும் பெயரில் ஜாலினி வனத்தில் திரிந்து கொண்டிருந்தான். 999 விரல்கள் சேர்த்துவிட்டன. ஒரு விரல் மட்டும் பாக்கி. அங்குலிமாலா என்ற பெயர் கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிப்பவன் தன் மகன் அஹிம்ஸகனாக இருக்கலாம் என்று தாய் மந்தானிக்கு உள்ளுணர்வு தோன்றியது. மகனைத் தேடி காட்டுக்குள் நுழைந்துவிட்டாள். அங்குலிமாலா தன் ஆயிரமாவது விரலைப் பெற தன் அன்னையையே தேர்ந்தெடுத்துவிடுவானோ?   பகவானுக்குள் அங்குலிமாலா பற்றிய பிரக்ஞை. நடப்பது என்ன என்ற ஞானவுணர்ச்சி அவருள் ஊற்றெடுத்தது. போதி சத்துவராய் தான் பிறப்பெடுத்திருந்த முந்தைய பிறவிகளில் பெரும் உடலும் பலமும் பொருந்தியவனாய் பிறந்த அவனைத் தன் மனபலத்தால் முறியடித்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார். தாயைக் கொல்லல் பெரும் பாவம். உடனடி நரக உலகிற்குள் தள்ளும் பாவம்.  புத்தர் உடன் காட்டை நோக்கி நடக்கலானார்.

அன்னையை அடையாளம் கண்டு விட்டான் அங்குலிமாலா. கோடரி சகிதம் அவன் தாய் வரும் திசையை நோக்கி நடந்தான். இடைவெளி குறுகிக் கொண்டே வந்தது. சமீபித்துவிடுவான் போலிருக்கும் சமயத்தில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் புத்தர் நின்றார். அங்குலிமாலாவின் கவனம் சிதறி அம்மாவை விட்டுவிடுவோம், இந்த துறவியை வெட்டுவோம் என்று புத்தரை அணுகினான். ஆனால் என்ன மாயம்! எத்துணை வேகத்தில் நடந்தாலும் அவனால் புத்தரை நெருங்க முடியவில்லை. புத்தரோ நிதானமாக நடந்து கொண்டிருந்தார். வியர்வை கொட்டியது. மூச்சு இரைந்தது. களைத்துப் போய் நின்றான் அங்குலிமாலா. திரௌபதியை துகிலுரியும் முயற்சியில் களைத்து வீழ்ந்த துச்சாதனன் ஞாபகம் வருகிறானல்லவா?

பெற்ற மகன் மீதான பாசத்தினால் ஆபத்தை அறியாமல் மரணத்தை நோக்கி நடந்த தாய்! தாயின் விரல் வெட்டப்போய் பின்னர் கவனம் சிதறி சாக்கிய முனியைக் கொல்ல நோக்கி நடந்த அங்குலிமாலா! தாயின் உயிர் காத்து, நிகழவிருக்கும் பெரும்பாவச் செயலை நிகழாது நிறுத்துவதற்கு நடந்த புத்தர்!

புத்தரை நோக்கி கூவினான். “ஏ, சந்நியாசி, நில்லு”

“நான் நிறுத்திவிட்டேன் அங்குலிமாலா. நீ நிறுத்து் இப்போது”

இவர் நடக்கிறார். நாம் நடையை நிறுத்தியாயிற்று. ஆனால் இவரோ என்னை நிற்கச் சொல்கிறாரே? இது என்ன குழப்பம்?  அங்குலிமாலா கேள்வியாக அவரிடம் கேட்கவும் செய்கிறான். புத்தர் உரைக்கிறார் :

“நான் என்றென்றைக்குமாக நிறுத்திக்கொண்டுவிட்டேன்,
உயிர்களின் மீதான வன்முறையை நான் தவிர்க்கிறேன்;
ஆனால் உனக்கோ சுவாசிக்கும் உயிர்களின் மேல் ஒரு கட்டுப்பாடும் இல்லை:
அதனால் நான் நிறுத்திவிட்டேன் ஆனால் நீ நிறுத்தவில்லை”

இச்சொற்களை அங்குலிமாலா கேட்டபோது அவன் இதயம் பெரும் மாறுதலுக்குள்ளானது. கெட்டித்துப் போன குரூரத்தன்மையை உடைத்துக்கொண்டு தூய விழைவுகள் ஊற்றெடுத்தன. தன் முன்னால் நிற்பது சாதாரண பிக்குவல்ல; சாட்சாத் புத்த பகவானே என்று புரிந்து கொண்டான். தன்னிச்சையாக தன்னைத் தேடி இவ்வனத்தினுள் அவர் நுழைந்திருக்கிறார் என்பதை உணர்ந்தான். முடிவில்லா துக்கக் குப்பைக்குள்ளிருந்து தன்னை பிடித்திழுப்பதற்காகவே வந்திருக்கிறார். பெரும்பாபக் குழியினுள் விழ இருந்த என்னை அவர் காப்பாற்றியிருக்கிறார். தன் இருப்பின் ஆழமான வேருக்குள் நகர்ந்தவனாய், ஆயுதங்களை தூக்கியெறிந்து முழுக்கவும் ஒரு புது வாழும் வழி முறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் உறுதி மேற்கொண்டான்.

அங்குலிமாலாவை அழிப்பதற்கு ஒரு சிறப்புப்படை திரட்டப்பட்டது.  கோசல மன்னன் பாஸநாடியே அதன் தலைமை தாங்கினான். காட்டை நோக்கிப் போகும் வழியில் ஜெதாவனம் வந்தது. புத்தர் அங்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டு அவரை சந்திப்பதற்காக உள்ளே சென்றான். எந்த நாட்டு மன்னனுடன் போர் என்று வினவினார் புத்தர். அங்குலிமாலா எனும் கொலைகாரனை தேடிக் கண்டுபிடிப்பதற்காக போய்க்கொண்டிருப்பதாக மன்னன் சொன்னான். “அங்குலிமாலா காட்டில் இல்லாமல் என்னுடன் இங்கிருந்தால்?” என்று புத்தர் கேட்டபோது மன்னன் “அங்குலிமாலாவாவது ஜெதாவனத்திலாவது?” என்று உதட்டை பிதுக்கினான். “உங்கள் பின்னால் வலப்புறத்தில் நின்று கொண்டிருக்கிறாரே அவர் தான் பிக்கு அங்குலிமாலா” என்று புத்தர் சொன்னார். மன்னனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. காவி நிற உடையணிந்து, முக கேசத்தை மழித்து மொட்டைத் தலையுடன் தோற்றமளித்த இவரா அங்குலிமாலா? அவரை அணுகி “நீங்கள் எந்த ஊர்?” என்று கேட்டான் பாஸநாடி.

“சாவத்தி”

“தாய்-தந்தை”

“பாக்கவர் – மந்தானி”

பாக்கவர் மன்னனின் பண்டிதர்.

ஆச்சரியம் அகலாதவனாய் புத்தரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான் பாஸநாடி.

அங்குலிமாலா அருகனானாலும் சாவத்தியின் மக்கள் அவனை அன்புடன் ஏற்கவில்லை. பெரும்பாலானோர் பாசநீடியின் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக புத்தரை அவன் சரணடைந்திருக்கிறான் என்பதாகவே அவர்கள் எண்ணினார்கள். வெகு சிலரே அங்குலிமாலாவுக்கு சோறிட்டனர். பல நாட்கள் அவன் பசியாறாமல் இருக்க வேண்டியதாயிற்று. பசி வயிற்றுடன் தியான சாதனைகளில் அங்குலிமாலாவால் அதிக முன்னேற்றம் காண முடியவில்லை. ஒரு நாள் சாவத்தி நகர வீதிகளின் வீடுகளில் சோறு எதுவும் இடப்படாமல் அலைந்து கொண்டிருந்தபோது ஒரு வீட்டின் வாசலில் ஒரு நிறை மாத கர்ப்பிணியின் அலறும் குரல் கேட்கிறது. பிரசவம் பார்க்கும் வைத்தியச்சி குழந்தை வெளிவருவதில் சிக்கல் என்று யாரிடமோ சொல்வதும் அவன் காதில் விழுகிறது. கர்ப்பிணியின் அலறல் பிக்கு அங்குலிமாலாவினுள் மெத்தா என்னும் அன்பெண்ணத்தை எழுப்புவிக்கிறது. நான்கு பிரம்ம விகாரங்களில் ஒன்று மெத்தா. விடுவிடுவேன ஜெத்தாவனத்துக்கு திரும்பி பகவானிடம் தான் கண்டதை கேட்டதை சொல்கிறான்.

“பிக்குவே, ஒன்று செய்யுங்கள். அந்த பெண்ணிடம் சென்று – நான் பிறந்ததிலிருந்து என் மனமறிந்து ஓர் உயிரையும் அதன் உடலிலிருந்து நீக்கும் தீய காரியத்தைச் செய்ததில்லை. இது உண்மையெனில், சகோதரி, நீங்கள் நலத்துடன் உங்கள் மகவை பெற்றெடுப்பீராக என்று சொல்லுங்கள்” என புத்தர் அறிவுறுத்தினார்.

அங்குலிமாலா பணிவுடன் “அது உண்மையில்லையே ஐயனே, என் மனமறிந்து பல உயிர்களை நான் கொன்றிருக்கிறேனே. நீங்கள் சொல்வது போல சொன்னேன் என்றால் அது பொய்யாகிவிடுமே” என்றான்.

“அப்படியானால் இப்படிச் சொல் – நான் புது பிறப்பு எடுத்ததிலிருந்து என் மனமறிந்து ஓர் உயிரையும் அதன் உடலிலிருந்து நீக்கும் தீய காரியத்தைச் செய்ததில்லை. இது உண்மையெனில், சகோதரி, நீங்கள் நலத்துடன் உங்கள் மகவை பெற்றெடுப்பீராக”

கர்ப்பிணியின் வீட்டை அடைந்து வாசலில் முன்னர் போடப்பட்டிருந்த திரைச்சீலைக்கு வெளிப்புறம் நின்று புத்தர் சொல்லச்சொன்ன வார்த்தைகளை பிக்கு அங்குலிமாலா அன்பெண்ணத்துடன் சொல்லவும் சில நிமிடங்களில் சிக்கல் தணிந்து சுகப்பிரசவம் ஆனது.

இறந்தவர்களை உயிர்ப்பித்தல் மற்றும் நோய்களை தணித்தல் போன்ற அதிசயங்களை நிகழ்த்துதலில் புத்தர் ஆர்வம் காட்டியதில்லை. அப்படி நோயிலிருந்து மீண்டவர் என்றாவது ஒரு நாள் இறந்து போவார் என்பதை அவர் அறிவார். உண்மையான மரணமின்மை நிலை பற்றியும் அதை அடையும் வழி பற்றியும் அவர் போதிக்கையில்  அவரின் பெருங்கருணை வெளிப்படும். அவர் அங்குலிமாலாவுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளித்தார்? கர்ப்பிணியின் சிகிச்சையின் பொருட்டு அங்குலிமாலா உண்மையின் வலிமையை அதிசயச் செயலாக வெளிப்படுத்த அங்குலிமாலாவுக்கு ஏன் அறிவுறுத்த வேண்டும்?

அங்குலிமாலா சுத்தம் பற்றிய உரையில்,  பௌத்த சான்றோரின் சிந்தனைப்படி இது புத்தர் செய்த மந்திரமன்று. உண்மையின் வலிமை மருத்துவச் செயலன்று. ஒருவனுடைய சுய சீலத்தை மையப்படுத்தி எழுவது. பிச்சை பெறுவதில் அங்குலிமாலா படும் கஷ்டத்தை புத்தர் அறிந்தேயிருந்தார். பிக்குவான பழைய கொலைகாரன் பற்றிய பயம் பெரும்பாலோருக்கு இன்னும் இருந்தது. அவன் வீட்டு வாசலுக்கு வந்து இரங்கும் போது அவனைப் பார்த்து பயந்து ஓடுவது வழக்கமாயிருந்தது. இத்தகைய சூழலில் இருந்து அவனை மீட்கவே அங்குலிமாலாவை அதிசயம் நிகழ்த்த வைத்தார். அதைப் பார்த்த, கேள்விப்பட்ட மக்கள் “அன்பெண்ணத்தை எழுப்பியதன் வாயிலாக பிக்கு அங்குலிமாலா மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும்” என்று நினைப்பார்கள். அவனைக் கண்டு இனி பயப்படமாட்டார்கள். பிச்சை உணவு குறைவு படாமல் சாதுவின் பணிகளை அங்குலிமாலா திறம்படச் செய்ய ஏதுவாகும்.

அதுவரை அடிப்படை தியானப் படிகளில் அங்குலிமாலாவால் மனங்குவிக்க முடியவில்லை. இரவு பகலெல்லாம் பயிற்சி செய்தாலும் அவன் கொன்ற மனிதர்கள் தம்மை விட்டுவிடுமாறு இறைஞ்சிய குரல்கள் அவன் நினைவில் ஒலித்தவாறிருந்தன;  அவனால் மரணமுற்றோர் மரிக்கும் முன்னர் நடுநடுங்கி கை-கால்கள் உதறலெடுக்கும் காட்சிகளும் அவன் மனக்கண்ணில் ஓடியவாறிருந்தன. அந்த நினைவுகள் அவனுள் குற்றவுணர்ச்சியை மிகுதியாக்கின. இத்தகைய நினைவுகளுடன் தியான இருக்கையில் அவனால் வசதியாக அமரமுடியவில்லை. ஆகையால் பகவான் அவனுடைய புதுப்பிறப்பு பற்றிய உண்மைக் கூற்று அதிசயத்தை நிகழ்த்த வைத்தார். பிக்குவாக அவனுடைய “புதுப்பிறப்பை” சிறப்பான ஓன்று என அவன் எண்ணும் போது அவன் அடைந்த நுண்ணறிவு இன்னும் வலுப்பெறும் என்றெண்ணினார்.

சங்கத்தில் சேர்ந்து விட்டாலும் அங்குலிமாலாவை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டவர்கள் குறைவே என்று ஏற்கனவே பார்த்தோம். அவனுடைய இறந்த காலம் கடைசி வரை அவனை துரத்திக் கொண்டிருந்தது.  “சாக்கிய முனியின் சாதுக்கள் எப்படி ஒரு கொடியவனை பிக்குவாக நியமித்தார்கள்?” என்று பொதுமக்கள் பகீரங்கமாகப் பேசிக்கொண்டதைக் கேட்ட மூத்த பிக்குகள் சிலர் புத்தரிடம் இதைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு புது வினய விதிமுறையை உடனுக்குடன் அறிவித்தார் புத்தர். “சாதுக்களே, பேர்போன குற்றவாளி எவரையும் சாதுவாக நியமிக்கக் கூடாது. அவ்வாறு நியமிப்பவர் கடுந்தவறைப் புரிந்தவராவர்” ஒரு குற்றவாளிக்குள் இருக்கும் நற்குணத்தின் சாத்தியத்தை ஒரு புத்தராக அவர் உணரக்கூடியவராக இருந்தாலும், அவருக்குப் பின் வருவோருக்கு அத்திறமை இல்லாமற் போகலாம் ; அத்திறமை இருந்தாலும் தன் இஷ்டப்படி அந்த குற்றவாளியை வழிநடத்தும் அதிகாரம் இல்லாமல் போகலாம். மேலும், முன்னாள் குற்றவாளிகளை சங்கத்தில் அனுமதிக்கும் பழக்கம் ஒரு மரபாக ஏற்றுக்கொள்ளபட்டால், திருந்தாத குற்றவாளிகள் கைதையும் தண்டனையையும் தவிர்க்கும் சரணாலயமாக பௌத்த சங்கத்தை பயன்படுத்திக்கொள்ளக் கூடும்.

அங்குலிமாலாவின் பிற்கால வாழ்க்கை பற்றி பௌத்த இலக்கியங்களில் குறிப்பேதும் இல்லை,  அங்குலிமாலாவே எழுதி தேராகதாவில் வரும் செய்யுளைத் தவிர.

“குருதி படிந்த கரத்தினனாக முன்னரொருமுறை
விரல்-மாலை எனும் பெயரோடு இருந்திருந்தாலும்
எனக்குக் கிடைத்த அடைக்கலத்தைப் பார்
இருத்தலின் தளை வெட்டப்பட்டுவிட்டது.”



மகாசித்தர்கள்

$
0
0

சித்தர்கள் யார்? வேத காலத்து ரிஷிகள் இல்லை அவர்கள் ; பௌத்த சங்கத்தின் பிக்குகளும் இல்லை. மடங்களில் வசித்தவர்களில்லை. ஊக சிந்தனைகளிலோ வாக்குவாதங்களிலோ ஈடுபடாதவர்கள். அவர்களின் தேடல்கள் அமைப்புகள்  சாராதவையாக இருந்தன. அவர்கள் உதாரணர்களாக இருந்தனர். மக்களுக்கு நடுவில் மக்களாக இருந்தனர். மரபு ஒழுங்கிற்கு மாறான சடங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர். கோரக்கர், போக நாதர் போன்ற சித்தர்களை இந்து மரபில் நாமறிவோம். இவர்கள் வரலாற்றில் இருந்த ஆளுமைகளா என்று அறுதியிட்டு சொல்லுதல் மிகக் கடினம். ஆனால் இவர்கள் பற்றிய எண்ணற்ற கதைகள் செவி வழியாக பல நூற்றாண்டுகளாக உலவி வருகின்றன. திருத்தொண்டர் வாழ்க்கை வரலாற்றியல் (Hagiography) சார்ந்த வரலாறுகளாக முழுக்க நம்பகத்தன்மை இல்லாதவையாக இருந்தாலும் மத்திய கால சமூகத்தின் வாழ்க்கை பற்றியும் நிலவி வந்த தத்துவங்கள் பற்றியும் வளமான செய்திகளை அவைகள் கொண்டிருக்கின்றன.

சைவ இந்து மரபைப்  போல பௌத்தர்களும் 84 மகா  சித்தர் மரபை போற்றுகின்றனர்  ; இரு மரபிலும் வழங்கப்படும் 84 மகா சித்தர்களின் பெயர்களில் நிறைய பொதுத் தன்மைகள்  உள்ளன. கி பி ஐந்தாம் நூற்றண்டுக்கும்  கி பி 11ம் நூற்றாண்டுக்கும்  இடையிலான காலத்தின் சமூக, வரலாற்று யதார்த்த நிலைகளில்  சமுகத்தை வழி நடத்தும் உதாரணர்களாக மகா சித்தர்கள் செயல் பட்டிருக்கிறார்கள்.

சித்திகளை உள்ளடக்கியவர்களாகவும் பண்படுத்தியவர்களாகவும் திகழ்ந்தவர்கள் சித்தர்கள். யோகிகளாகவும் யோகினிகளாகவும் இன்றும் வஜ்ராயன பௌத்த மரபில் பெரிதும் போற்றப்படுகிறார்கள்.

சித்தர்கள் மரபு உருவானதற்கு வரலாற்று அறிஞர்கள் பல்வேறு கருத்தாக்கங்களை சொல்கின்றனர் ; அவற்றுள் மிகவும் அதிகமாக வலியுறுத்தப்படுவது குப்தப் பேரரசுக்குப் பிறகு வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் நிலவிய அமைதியின்மை ; 7ம் நூற்றாண்டுக்குப் பிறகு வட இந்தியாவில் பேரரசுகள் எதுவும் உருவாகாத நிலை, சிற்றரசர்களுக்கிடையான போர்களினாலும்  பூசல்களினாலும்  சாதாரணர்களுக்கேற்பட்ட   பாதிப்பு, அதன் காரணமாக மக்களிடையே காணப்பட்ட மன்னர்களின் மீதான வெறுப்பு மற்றும்  பாதுகாப்பின்மை முதலானவை. ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு மக்களை நம்பிக்கை, சரணாகதி போன்ற பண்புகளை நாடச் செய்தன. Grassroot level-இல் இயங்கிய சித்தர்கள் தமது சித்திகளின் துணையுடன் நம்பிக்கையுணர்வை பாதுகாப்புணர்வை மக்கள் உள்ளீர்த்துக் கொள்ளும்படி வழிநடத்தினார்கள்.

84 மகாசித்தர்களும் தாந்த்ரீகமும் என்னும் கட்டுரையில் Keith Dowman இவ்வாறு கூறுகிறார் : “தாந்த்ரீக மதம்  இந்தியர்களின் ஆன்மீக வாழ்க்கையின் முக்கிய சக்தியாக பரிணாம வளர்ச்சி பெற்ற காலத்தில் இந்தியாவின் வடமேற்கே கொடூரமான, பேரழிவை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள் பெருக ஆரம்பித்திருந்தன. அராபியர்கள் மொராக்கோவிலிருந்து சிந்து வரை பரவியிருந்த நிலப்பரப்பை தம் குடைக்கீழ் கொண்டு வந்திருந்தார்கள். துணைக்கண்டத்தில் குப்தப் பேரரசின் மகத்துவத்தை வாரிசுரிமையாய் பெற்ற வெவ்வேறு வம்சங்களின்  அரசர்களும் உட்பூசலிலும் கோரமான யுத்தங்களிலும் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார்கள். பழைய வகுப்பீடுகள் சிதைந்திருந்தன ; சமூகம் இறுகிய சாதீய விதிமுறைகளில் வழிமுறைகளில் சரணடைந்திருந்தது ; சடங்குகள் மேலோங்கிய சமயங்கள் புழக்கத்தில் இருந்தன. வலுவற்று ஒருங்கிணையாமல்  கிடந்த சமூகம் புது எதிரிகளான மதவெறி மிக்க இஸ்லாமிய படைகளை எதிர்க்க முடியாமல்  பலவீனப் பட்டுப் போயிருந்தது. பௌத்த மத்திய ஆசியாவின் அழிவு பற்றிய கதைகளோடு பௌத்த அகதிகள் துணைக்கண்டத்துள் நுழைந்த போது தாந்த்ரீகத்தின் செல்வாக்கு அதிகரித்திருந்தது, குறிப்பாக, முண்ணனிக் களமான ஒட்டியாணாவில் (இன்றைய பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு). புது பௌத்த சாம்ராஜ்யமாக எழுச்சி கொண்ட பால் வம்சம் ஆண்டு கொண்டிருந்த கிழக்குப் பிராந்தியங்களிலும் (ஒரிஸா மற்றும் வங்காளம்). சமரசம் செய்து கொள்ளாத அத்வைத மெய்யியல், தன்னிச்சையான விடுதலையில் மாறா நம்பிக்கை, மாமிசம் தின்னும், குருதி குடிக்கும் தெய்வங்கள் – இவைகளைக் கூறுகளாக கொண்டிருந்த தாந்த்ரீக மதத்தில் தொடங்கப்போகும் ஊழுக்கு முன்னதாக இந்தியா சரணடைந்தது தற்செயலா? தாந்திரீகத்தை மறுத்து வந்த மேற்கில் இன்று தாந்த்ரீகத்துக்கு அதிகரிக்கும் வரவேற்பும் மனிதகுலம் அழிந்து போகலாம் என்னும் கருத்து நம்பகத்தன்மையை பெறுதலும் தற்செயலா?”                                  

மகாசித்தர்களில் முக்கால் வாசி சித்தர்கள் கிழக்கிந்தியாவை பிறப்பிடமாகவோ இருப்பிடமாகவோ கொண்டவர்கள். பால் வம்சம் ஆண்ட காலத்தில் சித்தர் மரபுக்கு நல்ல ஆதரவு இருந்தது. விக்ரமஷீலா மற்றும் சோமபுரி பௌத்த பல்கலை கழகங்கள் துவக்கப்பட்டன. இப்பல்கலைக்கழகங்களில் தாந்த்ரீக பௌத்த சாதனைகள் கற்பிக்கப்பட்டன ; நாளந்தாவும் விரிவுபடுத்தப்பட்டு தாந்த்ரீக பௌத்தத்தின் மையமானது. தாந்த்ரீகத்தின் மனப்பான்மைகளும் தத்துவங்களும் சித்தர்களின் காலத்துக்குப் பிறகே சமுதாய ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டன. ஆரம்ப கால சித்தர்கள் போலித்தனம், வெற்றுச் சடங்குகள், கற்பனைத் தத்துவங்கள், பண்டித மேதாவித்தனம், சாதி வித்தியாசங்கள், பாசாங்குத்தனம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தார்கள். மந்திரம் – இணைவு சடங்குகள் – மண்டலங்கள் – இவற்றை வலியுறுத்தும் வழிமுறைகளை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் வெறும் செயல் முறைகளாக இல்லாமல் மறைபொருள் ஞானத்துடன் இணைந்து சடங்குகளைக் கடந்த மனநிலையை அடையும் இலக்கிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

குளிக்காத சுத்தமில்லா  தோற்றம், முரட்டுத்தனமான பேச்சு, சில சமயம் பித்து நிலை மிகுத்து ஏறுமாறான நடத்தைகள் என்று சித்தர்கள் வலம் வந்தனர். தர்க்க ஒழுங்கு மாறாத அணுகுமுறையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட பௌத்தத்தில் சித்தர்கள இயக்கம் ஒரு முரண் போலத் தோன்றலாம். ஆனால் சமூக பரிவர்த்தனைகளின் விளைவாக இயல்பாக எழுந்ததே சித்தர் இயக்கம் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர். பல பௌத்த சித்தர்களும் துவக்கத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த மடாலய பௌத்தர்களாகவே இருந்தனர். வெறும் சூத்திரங்களின் அடிப்படையில் இருந்த சாதனைகள் அவர்களுக்கு அனுபவரீதியாக முன்னேற்றத்தை எதிர்பார்த்த வேகத்தில் தராததால் அந்தப் பாதையிலிருந்து விலகி, சிறு வனங்களிலோ அல்லது ஆற்றங்கரைப் பகுதிகளிலோ தங்கிக்கொண்டு   மது, உடலுறவு, மாமிசம் என்னும் மூன்று அம்சங்களை உட்படுத்திய தாந்த்ரீக சாதனைகளில் ஈடுபட்டனர்.

ஆன்மீக அராஜகம் அவர்களின் லட்சியமாயிருந்தது. சமய வடிவங்களில் அதிகம் மனம் லயிக்காத குணமும் அவர்களிடம் காணப்பட்டது. தீட்சை பெற்றவர்களுக்கு மட்டுமே சித்தர்-குருவின் சாதனையை  பயிற்சி செய்யும் உரிமை வழங்கப்பட்டது. எந்த வித நிறுவனத்துவமும் சித்தர்களினுடைய இருத்தலியல் சுதந்திரவுணர்வை மட்டுப்படுத்தவில்லை.

சித்தன் தாந்த்ரீக சாதகன் ; தியானத்தின் இலக்கை வெற்றிகரமாக அடைந்தவன். அவனுடைய சாதனை சித்தி. சித்தி இரு வகைப்படும் ; ஒன்று சாதாரண மந்திர சக்தி (Mundane) ; இன்னொன்று புத்தரின் நிர்வாண நிலை (Ultimate). எனவே சித்தன் என்பவன் ஞானி, மந்திரவாதி அல்லது அருட்தொண்டன். ஆனால் இச்சொற்கள் சித்தனின் தாந்த்ரீக வாழ்க்கை முறையை நம் மனதுக்குள் கொண்டுவருவதில் தோல்வியுறுகின்றன. பொதுவாக சித்தன்  என்றால் மந்திர சக்தி கொண்டவன் ; ஒரு யோகி சுவர்களை ஊடுருவி செல்கிறான் என்றாலோ அல்லது விண்ணில் பறந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டவர்களை சுகப்படுத்தினாலோ அல்லது நீரை மதுவாக்கினாலோ அல்லது காற்றில் மிதந்தாலோ  அவனுக்கு சித்தன் என்ற பெயர் பொருந்தும். அதே யோகியின் கண்களில் பைத்தியக்காரத்தனம் பளபளத்தாலோ, உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டாலோ, தனக்கும் அடுத்தவர்க்கு கண்ணீர் வரும்படி பாடினாலோ, குரைக்கும் தெருநாய்களை தன்னுடைய பிரசன்னத்தினால் அமைதிப்படுத்தினாலோ, வலுக்கட்டாயமாக ஒரு குடும்பப்பெண்ணை தன்னோடு கவர்ந்திழுத்து வந்தாலோ, ஓரடி நீளமான சடா முடியில் வஜ்ரத்தை (உபாயம் அல்லது அசையாத்தன்மையின் குறியீடு) குத்தியிருந்தாலோ, பறவைகளுடன் பேசினாலோ, தொழுநோயாளிகளுடன் தூங்கினாலோ, தார்மீக விரக்தியுடன் வாயவீச்சாளர்களை ஏசினாலோ, உறுதியான எண்ணத்தோடு மரபுக்கு மாறான ஒரு காரியத்தை செய்யும் அதே வேளை தன்னுடைய “உயரிய யதார்த்த நிலையை” நிரூபித்த வண்ணம் இருப்பவன் நிச்சயம் சித்தனே. தோற்றத்தினால் ஈர்க்கப்படும் சாதாரண மக்கள் சித்தனின் அசாதாரண நோக்கத்தை – மஹாமுத்ரா (வஜ்ராயன பௌத்தக் கலைச்சொல்) –  அறியாமல் இருப்பார்கள். மேலும், சித்தன் என்பவன் அடையாளமற்ற விவசாயியாக இருக்கலாம் ; அலுவலகத்தில் பணி புரிபவராக இருக்கலாம் ; அரசனாக இருக்கலாம் ; பிக்குவாக இருக்கலாம் ; வேலைக்காரனாக இருக்கலாம் ; நாடோடியாக இருக்கலாம் என்பதையெல்லாமும்  அவர்களால் அறிய முடியாது.

சாதாரண மந்திர சக்திகளை அஷ்டமா சித்திகள் என்கிறார்கள் ; ஆனால் வஜ்ராயனத்தின் இலக்கு மஹாமுத்ரசித்தி. மஹாமுத்ரசித்தி பெற்றவர்களுக்கு மந்திர சித்தியும் தன்னிச்சையின்றி கிட்டும் ; ஆனால் மந்திர சித்தி கிட்டியவர்களுக்கெல்லாம் மஹாமுத்ர சித்தி கிடைக்கும் என்று நிச்சயம் கிடையாது.

நிர்வாணத்தின் போது புத்தர் அடைந்த நிலை. பூரண ஒருமை ; சுயத்தின் அழிப்பு ; ஞான விழிப்புணர்வு ; இறுதி யதார்த்தத்தை இருமைகளற்று நோக்குதல். சம்ஸ்கிருதத்தில் இது  பௌத்த கலைச்சொல் தததா (thatata) என்று குறிக்கப்படுகிறது.  ஆங்கிலத்தில் that-ness அல்லது such-ness என்று பொருள். இதுவே பௌத்தர்களின் இலக்கு.

ஸ்ராவகர்கள் (புத்தரின் குரல் வழி தம்மத்தை கேட்டவர்கள்) அருகராகி இறந்த காலக் கருமங்களை தொலைத்துவிட்டாலும் புதிதாக கருமங்கள் ஏதும் சேராமல் வாழ்ந்து பின்னர் நிர்வாணத்தை அடைதல் ஆதி பௌத்தத்தின் வழிமுறை ; பல ஜென்மங்களாக போதிசத்துவ வாழ்க்கை வாழ்ந்து புத்த நிலையை அடைதல் மகாயானத்தின் வழிமுறை ; தன்  வாழ்நாளிலேயே வஜ்ரத்தினால் குறுக்காக வெட்டுவது போன்று  கர்மயதார்த்தங்களை அரிந்து கருத்தியல்களை துறந்து மஹாமுத்ரசித்தியை அடைதல் வஜ்ராயனத்தின் வழிமுறை.

Maha Siddhas


About Elly –சில குறிப்புகள்

$
0
0

About Elly – பார்ப்பதற்கு முன்

சில வருடம் முன்னர் ஒரு டி வி டி கடையில் முதன்முறையாக பார்சி மொழிப்படம் ஒன்றை வாங்கினேன். அதற்கு முன்னர் தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் தவிர வேறு மொழிப்படங்களை தேடிப்போய் பார்க்கும் வழக்கம் கிடையாது. டி வி டியின் அட்டைப்படமா, அப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது என்ற தகவலா எது என்னை அந்த டி வி டியை வாங்கத் தூண்டியது என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்து டி வி டியை உடன் play செய்தேன். “என்னென்னமோ படங்களை வாங்கறே” என்று முதலில் முணுமுணுத்த மனைவியையும் சுண்டி இழுத்தது படத்தின் ஆரம்பம். இரண்டு மணி நேரம் ஓடிய படம் புரிந்து கொள்ள முடியாத மொழியில். உபதலைப்புகளே துணை. விறுவிறுப்பு ஓர் இடத்திலும் குறையாத காட்சி நகர்வுகள். மிகையற்ற நடிப்பு. யதார்த்தமான சித்தரிப்பு. சம காலத்திய இரானின் நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அருமைப்பதிவு. பழைய மரபார்ந்த விழுமியங்களுக்கும் நவீனத்தன்மைக்கும் இடையில் நடக்கும் சுவாரசியமான மல்யுத்தம். பொருளாதார வர்க்கங்களுக்கிடையேயான மௌனப்போர். A Separation (2011) – க்கு விருது கிடைத்ததில் அதிசயமே இல்லை.

Separation

A Separation

இந்திய கலாச்சாரத்துக்கு மிக அருகில் இருக்கும் இரான் கலாச்சாரப் பின்னணியில் தத்ரூபமான, கலையுணர்வு மிக்க, சற்றே hard-hitting படங்களை உலக திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்களித்து வருகிறார்கள் இரானிய திரைப்படக் கலைஞர்கள். இரானின் முத்தான இயக்குனர்களில் முதன்மையானவர் Asghar Farhadi. ஆர்ட் படங்கள் என்ற பெயரில் சாதாரண திரைப்பட ரசிகர்களை தூரம் தள்ளும் படங்களில்லை இவை. நகர வாழ்க்கை வாழும் எந்த பார்வையாளனும் எளிதில் அடையாளப்படுத்திக் கொள்ளத்தக்க படங்கள். கொஞ்சம் யோசித்தாலும் இத்தகைய படங்கள் நம்மூர் சூழலிலும் எடுக்கப்பட முடியும். ஆனால் எடுக்கப்படுவதில்லை என்பது தான் நிதர்சனம். எண்பதுகளின் மலையாள திரையுலகு இத்தகைய மென்மையான சுவையுடனான படங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த ஆரோக்கியமான போக்கு தொன்னூறுகளின் துவக்கத்தில நின்று போனது நம் துரதிர்ஷ்டம்.

The Salesman

The Salesman

சென்ற வாரம் அமேசான் ப்ரைம் வீடியோவில் 2016க்கான சிறந்த அயல் நாட்டுப்படத்திற்கான விருதை மீண்டுமொருமுறை Asghar Farhadi-க்கு பெற்றுத்தந்த The Sales Man படத்தை ஸ்ட்ரீம் பண்ணினார்கள். ஆர்தர் மில்லரின் Death of a Sales Man நாடகத்தின் பார்சி மொழியில் அரங்கேற்றும் முயற்சியில் இருக்கும் குழுவின் நடிகர்கள் கதையின் நாயகன் – நாயகி ; நிஜ வாழ்க்கையில் இருவரும் தம்பதிகள். அவர்கள் வசிக்கும் வீட்டின் சுவர்கள் விரிசல் விடுகின்றன. குறிப்பாக படுக்கையறைச் சுவரில் பெரும் விரிசல். வேறு வீடு தேடுகிறார்கள். சக-நடிகரின் உதவியில் ஓர் வீடு கிடைக்கிறது. அந்த வீட்டின் முன்னாள் குடியாளரின் சாமான்கள் அங்கு இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் வீட்டு பால்கனியில் குவித்து வைத்துவிட்டு குடி புகுகிறார்கள் இமாதும் ராணாவும்! இமாத் கணவன் ; ராணா மனைவி. முன்னாள் குடியிருப்பாளரின் நிழல் அந்த வீட்டிலிருந்து வெளியேறாமல் இருக்கிறது. அதன் விளைவாக நிகழும் ஒரு சம்பவம் கணவன் – மனைவி இருவருக்கிடையிலான உறவை புரட்டிப் போட்டு விடுகிறது. Family Thriller என்னும் ஜனரஞ்சக feel good படமில்லை. இருவரின் உறவும் அவர்களுக்கே தெரியாதவாறு எப்படி transform ஆகிறது என்பதை சொல்லிச் செல்லும் படம். கதாநாயகன் இமாத் பாத்திரத்தில் நம்மூர் நாயக நடிகர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்னும் வாதம் எனக்கும் என் மனைவிக்குமிடையே ஒரு வாரமாகியும் ஓய்ந்தபாடில்லை. இன்று காலை அலுவலகத்துக்கு கிளம்பும் முன்னர் கவனத்துடன் வீட்டுச்சுவர்களை நோக்கினேன். ஒரு விரிசலும் காணப்படவில்லை!

இதே இயக்குனர் About Elly-யை 2009இல் எடுத்திருக்கிறார் ; படத்தின் ட்ரைலரை யூ-ட்யூபில் பார்த்தேன். மேற்சொன்ன இரண்டு படங்கள் போலவே இதுவும் சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கிறது. The Sales Man இல் நாயகியாக நடித்த Taraneh Alidoosti பிரதான பாத்திரமாக வருகிறார். என் கைக்கு கிடைத்திருக்கிற டி வி டியின் அட்டைப்படத்தில் “இது பற்றி எவ்வளவு குறைவாக முன்னரே அறிகிறோமோ அதுவே சிறந்தது” என்று விமர்சகர் ஒருவரின் மேற்கோள் காணப்படுகிறது. ரிவ்யூ படிக்காமல் படங்களுக்குச் செல்லும் தைரியத்தை இழந்து பல வருடங்களாகிவிட்டன. Asghar Farhadi என்ற பெயர் என் விரதத்தை முறிக்கும் தைரியத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது. இன்றிரவு “About Elly” படத்தை பார்த்து முடிக்கும் வரை இணையத்தில் அதன் ரிவ்யூக்களை படிக்கப் போவதில்லை.

About Elly

About Elly

About Elly – பார்த்த பின் சில குறிப்புகள்

“முடிவில்லாத கசப்புத்தன்மையை விட மேலானது கசப்பான முடிவு” என்று எதிர்பாராமல் சீக்கிரமே முறிந்து போன தன் முதல் திருமணத்தைப் பற்றி அஹ்மத் எல்லியிடம் சொன்னவுடன் அர்த்தமான மௌனத்துடன் உரையாடல் நிறைவு பெறுகிறது. கடற்கரை மணலில் பட்டம் விட முயலும் சிறு குழந்தைகளுக்காக பட்டத்தை மேலே செலுத்தி எல்லி பறக்க வைக்கும் காட்சியின் போது ஏதோ நிகழப்போகிறது என்ற அச்சமூட்டும் உணர்வு பற்றிக் கொள்கிறது. அதற்கடுத்த காட்சிகளில் வேகமும் பதற்றமும் மிகுத்து ஒரு பாத்திரமாக படம் நெடுக வரும் காஸ்பியன் கடலின் அலைகள் மூர்க்கமடைகின்றன.

எல்லி ஏன் காணாமல் போனாள்? என்னும் கேள்விக்கான தேடலாக கதை விரிந்தாலும் கதையின் ஒவ்வொரு பாத்திரமும் சொல்லும் சிறு பொய்கள் தாம் கருப்பொருள்கள். எல்லியின் நண்பியான செபிடேவுக்கு எல்லியின் முழுப்பெயர் என்ன என்று கூட தெரியாது. ஆனால் செபிடே எல்லியை தன் நண்பர் ஒருவருக்கு மணம் முடிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறாள். எல்லியின் புகைப்படம் ஏற்கெனவே அஹ்மதுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. புகைப்படத்திலேயே அவனுக்கு எல்லியை பிடித்துப்போய் விடுகிறது. ஆனால் அவனுடன் வரும் நண்பர்களுக்கு அஹ்மத் எல்லியை சந்திப்பது ஓர் எதேச்சையான நிகழ்ச்சி என்பது மாதிரியான எண்ணத்தை தோற்றுவிக்கிறான். தங்கும் விடுதி கிடைக்கவில்லை என்பதற்காக அஹ்மதும் எல்லியும் கல்யாணமானவர்கள் என்று செபிடே சொல்லும் பொய்யும் கூட எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. சிறு சிறு பொய்கள் ; ஆபத்தற்ற பொய்கள் ; வஞ்சகமிலாப் பொய்கள் ; வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் பொய்கள் சுவாசம் மாதிரி சதா நம்மை சூழ்ந்த வண்ணம் இருக்கின்றன ; இழுத்த சுவாசத்தை விடுவது மாதிரி நாமும் சிறு பொய்களை கக்கிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காட்சியிலும் காஸ்பியன் கடலுக்கு மேல் தெரியும் வானம் கறுத்துக் கொண்டே வருவது போன்ற காட்சியமைப்பு சவுகரியமான பொய்களில் மூழ்கி மேலும் மேலும் சரிந்து கொண்டிருக்கும் சமூகத்தின் படிமம்.

நமக்கு நடுவில் வரும் ஓர் அந்நியர் திடீரென மறைந்து விடுகிறார் எனில் அந்நியர் மீதான கரிசனத்தை விட அந்த மறைவு நமக்கேற்படுத்தப் போகும் அசவுகர்யம் தான் பெரிதாகப் படும். அப்போது அந்த அந்நியர் பற்றி தெரிந்த மிகக் குறைந்த தகவல்களின் மேல் நம் கற்பனை வர்ணத்தைப் பூசி அந்த அந்நியரை அடையாளம் காண முயற்சிப்பது நம் பொது இயல்பு. எல்லி மறைந்து விட்டாள். எல்லி யார் என்ற கேள்விக்கு முதலில் பதில் தேட வேண்டும். அவள் யார்? நாயகியா? வில்லியா? துரோகியா? பயந்தவளா? கிடைக்கும் விடையைத் பொறுத்து அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிய வரலாம். எல்லியை முழுதாகத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிகிறது. அவளை அழைத்து வந்த செபிடேவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவளுக்குத் தெரிந்த விவரங்கள் மிகவும் குறைவு போலத் தெரிகிறது. பின் தன் நண்பனுக்கு நிச்சயம் செய்யும் முடிவுடன் எல்லியை பிக்னிக்குக்கு செபிடே ஏன் கூட்டிக்கொண்டு வரவேண்டும்? மேலோட்டமான சில விவரங்கள் மட்டும் தெரியும். பிறவற்றை செபிடே யூகம் செய்து கொண்டு பொறுப்பற்ற நிச்சயதார்த்த முயற்சியில் ஈடுபடுகிறாள என்று தானே அர்த்தம். நம்மை சுற்றியிருப்போர் பற்றி நாம் எப்படி தெரிந்து கொள்கிறோம்? முக்கால்வாசி யூகம் கலந்த கற்பனை வாயிலாகத்தான். அந்த கற்பனை கலாச்சார எதிர்பார்ப்புக்குள்ளும் சாதாரண மனித இயல்புக்குள்ளும் அடங்கியதாகவே இருக்கும். எல்லியின் காணாமல் போதல் ஒரு விபத்து எனில் அவள் யார் என்ற கேள்விக்கான பதில் நம்முடைய கற்பனையில் என்னவாக இருக்கும்? அது விபத்தில்லை ; பிரக்ஞை பூர்வ நிகழ்வு எனில் நம்முடைய கற்பனையில் எல்லி யார்?

மூலக்கருவைத் தவிர இன்னொரு  விஷயமும் கவனிக்கத் தக்கது. நவீனத்துவப் பட்டை பொருத்தப்பட்டு ஜொலிப்பது போலத் தோன்றினாலும் சிறு கீரலில் ஆணாதிக்கத்தின் முகம் எளிதில் வெளித்தெரியும் செபிடே – அமிர் உறவு முறையில் செபிடேவின் கள்ளத்தனம் ஓர் எதிர்ப்புச் செயல் என்றே கருதத் தோன்றுகிறது. எல்லியைப்பற்றி செபிடேவுக்கு எவ்வளவு தெரியும் என்பது பற்றிய ஊகம் நம் எண்ணத்தில் ஊறி படத்தின் ட்யூரேஷனை ஒரு மணி நேரம் ஐம்பத்தொன்பது நிமிடத்துக்கும் அதிகமாக நீட்டி விடுகிறது. படத்தை பார்த்து முடித்து பதினைந்து மணி நேரங்கள் ஆகிவிட்டன. சிந்தனையில் படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.

About Elly – க்கு அடுத்து….

Asghar Farhadi-யின் இயக்கத்தில் 2013இல் வெளிவந்த The Past அநேகமாக நான் பார்க்கப்போகிற அடுத்த படமாக இருக்கும். இந்த படத்தின் நல்ல ப்ரின்டை உப-தலைப்புகளுடன் ஸ்ட்ரீம் செய்கிற நல்ல இணைய தளத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.


ஆப்பிள் தோட்டம்

$
0
0

பீம்தாலிலிருந்து நைனிடால் நகருக்குள் நுழையாமல் பவாலி என்னும் ஊர் வழியாக ராணிகேத்-தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு கோயிலுக்கருகே ஓட்டுநர் வண்டியை நிறுத்துகிறார். இந்தியில் ஏதோ ஒரு பெயரை சொல்கிறார். அவர் என்ன பெயரைச் சொன்னார் என்பதை சிரத்தையுடன் கவனிக்கவில்லை. ஓட்டுநர் வண்டியை நிறுத்தியது பிடிக்கவில்லை. சீக்கிரமே ராணிகேத் சென்றடைய வேண்டும் என்றிருந்தது எனக்கு. அங்கு ஒரு ரிஸார்ட்டில் ஒரு suite புக் செய்திருந்தேன். “எனக்கு தேநீர் குடிக்க வேண்டும்” என்றார் ஓட்டுநர். வேண்டா வெறுப்பாக காரிலிருந்து இறங்கினேன். மனைவியும் என் இளைய மகளும் கூட இறங்கினார்கள். பெரியவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அது ஒரு ஆசிரமம். துர்கா தேவி சந்நிதியும், அனுமார் சந்நிதியும் இருந்தன. சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிந்தனர். கோயிலின் பின்புறம் ஒரு சுவாமிஜியின் சிலை இருந்தது. சுவாமிஜிக்களுக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனக்கு அதிகம் ரசிக்கவில்லை. ஆனால் ஒன்று கவனித்தேன். கோயில் செல்வச் செழிப்புடன் இருந்தது. புத்தம்புதுக் கோயிலைப் போல் இருந்தது. கோயிலை விட்டு வெளியேறுவதற்கு முன் சுண்டல் பிரசாதத்தை பெற்றுக் கொண்டோம்.

கோயிலையொட்டி சிற்றோடை இருந்தது. அதை அசுத்தப்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலில் அது நதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மழைக்காலத்தில் அது நதியாக உருமாறலாம். நதியில் அதிக நீர் மட்டம் இல்லை. பூச்சிகளைப் போல் சின்னஞ்சிறு மீன்கள் கூட்டமாய் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு சிறுவன் பிஸ்கட்டுத் துண்டின் பொடியை நீரில் வீசினான் ; நூற்றுக்கணக்கான மீன்கள் அப்பொடியைக் கவ்விக்கொள்ளும் போட்டியில் அழகாக ஒரு புள்ளியில் குவியும் காட்சி மிக ரம்மியமாய் இருந்தது. ஒரு கணந்தான். மீண்டும் மீன்கள் தத்தம் திசைகளில் பிரிந்து சென்றன.

நாங்கள் கோயிலுக்கு வெளியே வந்தோம். ஓட்டுனர் வண்டியைக் கிளப்பிய போது கோயிலின் பெயர் என்ன என்று கேட்டேன். kainchi dham என்றார். Kainchi என்றால் கத்திரிக்கோல் என்று அர்த்தம் ; dham என்றால் தலம்.

+++++

கைடுகளுடனான உரையாடல் பல விஷயங்களை அறியத் தூண்டியிருக்கின்றன. கைடுகள் மிஸ்-கைடு செயவது வாடிக்கையான விஷயம் என்றாலும் கைடுகள் அவசியம். வரலாற்றுச் சின்னங்களுக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்கும் செயல் முறை எளிமையாகுதல் கைடுகளினால் மட்டுமே சாத்தியம். அவர்கள் தரும் வரலாற்றுத்தகவல்கள் நம்மை உண்மைத்தகவல்களை நோக்கிய உந்துதலை ஏற்படுத்தும். சில வருடம் முன்னர் ஓர் ஆங்கிலேய நண்பருக்குத் துணையாக ஆக்ரா சென்றேன். நடுவில் ஒரு கைடை எங்கள் காரில் ஏற்றிக் கொண்டோம். அவர் பெயர் அன்வர். டிப்டப்பாக கருப்பு கோட், கருப்பு கண்ணாடி அணிந்து சினிமா ஸ்டார் போல தோற்றமளித்தார். வி ஐ பி கைடு என்ற அடையாள அட்டையை காண்பித்தார். நானும் நண்பன் அட்ரியனும் பெருமிதப்பட்டோம். அன்றைய ஒரு நாளைக்கு நாங்களிருவரும் அன்வரின் தயவில் வி ஐ பிக்கள் ஆனோம். வழக்கம் போல தாஜ்மகால் நுழைவுச்சீட்டை நீண்ட வரிசையில் நிற்காமலேயே வாங்கினோம். தாஜ்மகாலுக்குள் பல்வேறு விளக்கங்களை கொடுத்துக் கொண்டே ஒரு தகவலை எங்களிடம் சொன்னார் அன்வர். இஸ்தான்புல்லின் நீல மசூதியை கட்டிய ஆர்கிடெக்ட்தான் தாஜ்மகாலையும் கட்டினார். அந்த தகவல் எனக்கு பயங்கர ஆச்சரியத்தை தந்தது. அட்ரியன் இஸ்தான்புல் நீல மசூதியை பார்த்திருக்கிறான். நான் திரைப்படங்களில் நீல மசூதியை பார்த்திருக்கிறேன். கடைசியாக நான் பார்த்தது ஏக் தா டைகர் இந்திப்படத்தில். சல்மான் கானும் கட்ரினா கைஃபும் நீல மசூதியின் பின்னணியில் ரொமான்ஸ் செய்து கொண்டிருப்பார்கள். நீல மசூதிக்கும் தாஜ்மகாலுக்கும் ஒரு தொடர்பும் இல்லையென்பதை உரிய தரவுகள் வாயிலாக மறுத்துக் கூறும் அறிவு அன்வரின் உதவியால்தான் கிட்டியது. நீல மசூதி கட்டி முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகே தாஜ்மகால் கட்டும் பணி துவங்கியது. தாஜ்மகால் முழுமையாக கட்டி முடிக்கப்பட 21 வருடங்களானது. அன்வரை சந்தித்திருக்காவிட்டால் தாஜ்மகாலின் ஆர்க்கிடெக்ட் உஸ்தாத் அகமது லஹோரி என்பது எனக்கு தெரிய வாய்ப்பே இல்லை. அன்வர் கொடுத்த தகவல் ஏற்படுத்திய ஆச்சரியவுணர்ச்சி தாளாமல் அந்த தகவலை சரி பார்க்கும் உந்துதல் மேலிட நான் திரட்டிய மேலதிக தகவல்கள் முகலாய பேரரசு பற்றி நானறிய உதவியது. பொய்மையும் வாய்மையிடத்து என்பது இது தான் போல! அன்வருக்கு என் நன்றிகள்!

blue mosque

ராணிகேத் வந்தடைந்த அடுத்த நாள் குமாவோன் மலைச்சாலைகளில் நாற்பத்தியைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து துனகிரி வைஷ்ணோ தேவி கோயில் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது குகுசினா என்னும் இடம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் ட்ரெக்கிங் செய்து பாபாஜி குகையை அடைய வேண்டும். அது தான் எங்கள் இலக்கு. துனகிரி அம்மன் கோயிலின் சாலையோரத் திருப்பத்தில் நபினை சந்தித்தோம். நபு என்பது அவன் செல்லப்பெயர். நாற்பது வயதிருக்கும் அவனுக்கு. சராசரி குமாவோன் வாசிகளின் அச்சுஅசல் நபு. அவன் நெற்றியில் பொட்டு. செவ்வாய்க்கிழமையாதலால் வைஷ்ணோ தேவி கோவிலில் நல்ல கூட்டம்! வாடகை ஜீப்புகள் எல்லாம் பிஸி. குகுசினா வரை எங்கள் காரிலேயே போவது என முடிவு செய்தோம். முன்னிருக்கையில் நபு. பின்னிருக்கைகளில் எங்கள் குடும்பம்.

Kainchi Dham – சுவாமிஜியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் காடு தாண்டி மலை தாண்டி பாபாஜி குகைக்கு குடும்பத்துடன் வருகை தருவதன் பின் என்ன அர்த்தம்? இது முரணாகாதா? தயவு செய்து குழம்ப வேண்டாம். இது ஒரு காதல்! பல வருடம் முன்னர் – எந்த வருடம் என்று ஞாபகமில்லை – படித்த புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்னுள் ஏற்படுத்திய ரசாயன மாற்றம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் இது ஒரு சாரமில்லாத வெற்று ஆர்வமாகக்கூட இருக்கலாம். என்னை இதயபூர்வமாக அழைத்தால் நான் அங்கு தோன்றுவேன் என்று தன் பிரியப்பட்ட சீடனுக்கு உறுதி தந்த அந்த மரணமிலா குரு மகாவதார் என்ற அடைமொழியால் பக்தர்களால் போற்றப்படுகிறார். பாபாஜி பற்றிய வரலாற்று பூர்வ தகவல்கள் மிகச் சொற்பம். எனினும் Para Gliding, Apple Garden, Highest Golf Course முதலான ராணிகேத்தின் ஈர்ப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு புதல்விகளின் விருப்பமின்மையையும் புறக்கணித்துவிட்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு அதிகம் பேர் போகாத ஒரு குகைக்கு நான் போவதை பகுத்தறிவு கொண்டு எப்படி விளக்குவது? என் வாழ்க்கை என் விருப்பம் என்று சொல்வது எளிதாயிருக்கும்.

ஒரு புத்தகம் விவரிக்கும் சம்பவம் இத்தனை ஆர்வத்தையா ஏற்படுத்தும்? பொன்னியின் செல்வன் விவரிக்கும் அனுராதபுரம் நகரப்பகுதி வர்ணனைகள் படிக்கப் பிடித்தன. சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி நகர வர்ணனைகளுந்தான்! புத்தக வர்ணனைகளுக்காக மட்டும் அனுராதபுரத்துக்கோ வாதாபிக்கோ (இந்நாளைய பதாமி) டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. இந்த குகைக்கு வர வேண்டும் என்ற விழைவுக்கும் காரணகாரியமான ஒரு விடை இருக்குமென்று எனக்கு தோன்றவில்லை.

பழைய காதலியை மறக்க முடியாமல் அவளின் பழைய விலாசத்துக்கு கடிதம் எழுதுதலை உணர்ச்சி பூர்வ விஷயம் என்றில்லாமல் வேறு எப்படி புரிந்து கொள்வது? பழைய காதலி எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. அவளிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்ற தவிப்பேற்படும்போது அவள் இருந்த விலாசம் என்று நாம் கேள்விப்பட்ட இடத்துக்கு கடிதம் அனுப்புகிறோம். அது போலவே இது!

autobiography_yogi_book

பாபாஜி குகை ட்ரெக்கிங் கஷ்டமாக இருந்தது. ஃபிட்னெஸ் கொஞ்சம் கூட இல்லாமல் தஸ்புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டே ஏறினேன். என் குடும்பத்தினர் வேகமாக ஏறி எனக்கு முன்னால் சென்றுவிட்டனர். காவி ஜிப்பா போட்டுக் கொண்டு ஓர் இளைஞர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்டேன். பதினைந்து நிமிடங்கள் என்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று நான் அவரிடம் கேட்டதற்கு சிட்னி என்றார். ஏன் வந்தீர்கள் என்று கேட்டேன். ஒரு புத்தகத்தின் 34ம் அத்தியாயம் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேனே அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்.

பாபாஜி குகைக்கு சற்று முன்னர் ஒரு மண்டபம் கட்டியிருந்தார்கள். மகாவதார் பாபாஜி லாஹிரி மஹாஷயருக்காக தோற்றுவித்த மந்திர மாளிகையைக் குறிப்பதான இடத்தில் கட்டிய மண்டபம் இது என்பது நபுவின் தகவல்.

பாபாஜி குகையில் சற்று நேரம் அமைதியாக கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தோம். மூச்சு வாங்குதல் நின்றது. நபு குகையைப் பற்றி பேசலானான். அவன் சிறுவயதினனாக இருந்த போது பாபாஜி குகை திறந்திருந்ததாகவும் அதற்குள் இறங்கி உள்ளே சென்றால் இருட்போர்வையில் இனிய சுகந்தங்களின் வாசனை மூக்கை துளைக்குமாம். ஆனந்த உணர்வு மேலிடுமாம். குகைக்குள் டார்ச் லைட்டுகள் வேலை செய்யாதாம். அமெரிக்கர் ஒருவர் ஆர்வமிகுதியில் ஆய்வு செய்கிறேன் என்று குகைக்குள் புகுந்து வெகுநேரமாக வெளியே வராமல் யோகதா ஆசிரமக்காரர்கள் அவரை குகையிலிருந்து வெளிக்கொணர்ந்த போது சித்தம் கலங்கிய நிலையில் இருந்ததாகவும் இதன் காரணமாக குகை வாசல் அடைக்கப்பட்டது எனவும் நபு சொன்னான். நபு சொன்னது விறுவிறுப்பைக் கூட்டிற்று எனினும் அது எத்தனை உண்மையாக இருக்கும் என்ற ஐயம் எழாமலில்லை. உத்தராகண்ட் மாநிலத்தில் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்கிறேன். கைடுகள் இது போன்ற மந்திரம் மாய விஷயங்களை அதிகம் கலந்து பேசுவார்கள். மாநில சுற்றுலா துறையின் வரவேற்பு வளைவுகளும் போர்டுகளும் “தேவ்பூமி” என்னும் உரிச்சொல்லுடன் உத்தராகண்டை விவரித்துக் கொள்வது போலத்தான் இது!

நாங்கள் குகையிலிருந்து இறங்கத் தொடங்குகையில் வெளிநாட்டு ஜோடி ஒன்று குகையை நோக்கி ஏறி வந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். இத்தாலியின் மிலானோ நகரத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களும் அந்த புத்தகத்தின் பெயரைச் சொன்னார்கள்.

நபுவுக்கும் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கும் இடையில் என்ன வித்தியாசம்? எழுத்தாற்றல் என்பதைத் தவிர வேறென்ன? எழுதப்பட்ட சொற்கள் சக்தி படைத்தவையாக ஆகின்றன என்பதற்கு ஒரு ஆதாரம் என்றால் இந்த புத்தகத்தைச் சொல்லலாம் என்பது என் கருத்து. மனிதசக்தி உடல்-மனம் என்னும் இருமையின் எல்லைகளை தகர்த்துவிடக் கூடியது என்பதன் சிறு துளி சொற்களின் துணை கொண்டு நமக்கு விவரிக்கப்பட்டிருக்கும்.

நபு என்னுடனும் என் மனைவியுடனும் பேசிக் கொண்டே வந்தான். அவனுடைய குடும்ப வாழ்க்கை, அவனுடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு மறுமணம் செத்துக்கொள்ளாதிருந்தது, சுவாமி சத்யேஸ்வரானந்தா-வுடனான அவனுடைய தொடர்பு (அவனுக்கு நபின் என்று பெயரிட்டது அவர்தானாம் – குமோவோன்காரனுக்கு வங்காள மொழிப்பெயர் வந்ததன் ரகசியம் இவ்வாறு துலங்கியது), குக்குசினாவில் இருக்கும் ஒரே ஓட்டலின் சொந்தக்காரர் ஜோஷியுடன் அவனுடைய மனஸ்தாபம் என்று பல தகவல்களைப் பகிர்ந்தான். நடிகர் ரஜினிகாந்த் பாபாஜியிடமிருந்து பெற்ற மூன்று மந்திரங்கள், அசைவ உணவு சாப்பிடும் போது அவற்றை ரஜினிகாந்த் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று பாபாஜி அறிவுறுத்தியது என்று அவன் ஒன்றன்பின் ஒன்றாக தகவல்களை பகிரும் போது நானும் பாபா திரைப்படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாமா என யோசித்தேன். ஆனால் சொல்லவில்லை. நபுவுக்கு சென்னை எக்ஸ்பிரஸ் என்றொரு செல்லப்பெயர் உண்டாம். பாபாஜி குகைக்கு வருவோரில் 60% தென்னிந்தியர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தந்தான். அவர்களுக்கெல்லாம் நபுவே கைடாக இருப்பதால் இந்த பெயர் வழங்குகிறதாம். நபுவுக்கும் பிற வடஇந்தியர்கள் போல தென்னிந்திய மாநிலத்தவர்களை மாநில வாரியாக பாகுபடுத்த தெரியவில்லை. எனவே அவன் சொன்ன கணக்குப்படி 60% முழுக்க தமிழர்களாக இருப்பார்கள் என்று சொல்வது கடினம். அதிகமாக தென்னிந்தியர்கள் பாபாஜி குகைக்கு வருவதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று நபு நம்புகிறான்.

வழியில் ஒரு குடிசை வீடு. அங்கு சற்று நேரம் இளைப்பாறினோம். குடிசைக்காரர் குடிசையில் டீக்கடை நடத்துகிறார். கேட்டால் மேகியும் செய்து தருவார். உத்தராக்கண்ட் மலைப்பிரதேசங்களில் மேகி கிட்டத்தட்ட கோதுமை போல அரிசி போல staple food. டீ வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். நானும் என் மனைவியும் தமிழில் பேசுவதைக் கேட்ட குடிசைக்காரர் எனக்கு குடிசை வாசலில் தொங்கும் ஒரு புகைப்படத்தை காட்டினார். நடிகர் ரஜினிகாந்த் கையில் தடியுடனும் தலைப்பாகையுடனும் ஜிப்பா அணிந்து நிற்கும் புகைப்படம். நாங்கள் உட்கார்ந்திருந்த குடிசை வாசலில் எடுக்கப்பட்ட புகைப்படம். 2013 இல் எடுக்கப்பட்ட படம் என்றார். 2013க்குப் பிறகு அவர் வரவில்லை என்றும் சொன்னார். அந்த ஒற்றை குடிசையைத் தாண்டாமல் ரஜினிகாந்த்தால் கூட நிச்சயம் பாபாஜி குகைக்குச் சென்றிருக்க முடியாது. தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.

லாஹிரி மஹாஷயர் பாபாஜியை ரத்தமும் சதையுமாக சந்தித்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தர்க்கம் அணுவளவும் இல்லை எனினும் 400 கி மீ பயணம் செய்திருக்கிறேன் ; எதற்கும் மெனக்கெடாத நான் ஐந்து கி மீ டரெக்கிங் செய்து அந்த குகையை அடைந்திருக்கிறேன். நான் வந்த தூரத்தை விட அதிக தூரத்திலிருந்து வந்தவர்களை சந்தித்திருக்கிறேன். 1861லிருந்து 1935 வரை பாபாஜியை வெவ்வேறு கட்டத்தில் சந்தித்தவர்கள் பகிர்ந்த அனுபவங்களை பற்றி வாசித்திருக்கிறேன். அவற்றை வாசிக்கும் போது நம்பிக்கையின்மையை என்னால் தவிர்த்துவிட முடிகிறது. திறந்திருந்த பாபா குகையிலிருந்து வந்த சுகந்தம் பற்றி நபி சொல்லும் போது எனக்கு ஆதாரம் வேண்டியிருக்கிறது. முரண்கள் நிறைந்த மனித வாழ்க்கையின் அங்கமாகிய நானும் முரண்கள் நிரம்பியவனாகவே இருக்கிறேன். தர்க்கம் ஒரு வாள். அதை ஏந்தி நாம் விரும்பாதவற்றை வெட்டித் தள்ளுகிறோம். நமக்கு விருப்பமானவற்றின் திசையில் அந்த வாளை சுழற்றாமல் இருக்கிறோம்.

neemkaroli baba

Neem Karoli Baba

குகுசினா வந்த பிறகு குமாவோனில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. Kainchi Dham பார்த்தீர்களா என்று கேட்டான் நபு. நீம் கரோலி பாபா பற்றி சொன்னான். கத்திரிக்கோல் தலத்தில் நான் பார்த்த சிலை நீம் கரோலி பாபாவினுடையது. – “ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் கம்பெனி தொடங்குவதற்கு முன்னர் பல வியாபாரம் தொடங்கி நொடித்துப் போனார் ; இந்தியா வந்து நீம் கரோலி பாபாவிடம் வந்து தன் குறையை சொன்னார். பாபாவின் கையில் ஓர் ஆப்பிள் இருந்தது. ஆப்பிள் பாபாவுக்கு மிகவும் பிடித்தது. அந்த ஆப்பிளை சிறிது கடித்து சீடன் ஸ்டிவ்-க்கு தந்தார். இனிமேல் அனைத்தும் வெற்றியில் முடியும் என்று ஆசீர்வதித்தார். ஆப்பிள் உலகின் மிகப் பெரிய டெக்னாலஜி கம்பெனியானது. தன் நிறுவனத்துக்கு ஆப்பிள் என்று ஸ்டிவ் பெயரிட்டதற்கு காரணம் நீம் கரோலி பாபா மீது ஸ்டிவ்க்கு இருந்த பக்தி. ஸ்டீவ் வாயிலாக நீம் கரோலி பாபா பற்றி கேள்விப்பட்ட மார்க் ஸுக்கர்பர்க் (ஃபேஸ் புக்) 2015 இல் Kainchi Dham விஜயம் செய்தார்”

நபு சொன்ன தகவலை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஸ்டிவ் ஜாப்ஸுக்கு இந்திய குருவா? ஓர் ஹிப்பியாக ஸ்டீவ் ஜாப்ஸ் எழுபதுகளில் இந்தியா வந்திருப்பதை பற்றி படித்திருக்கிறேன். மகேஷ் யோகி, ரஜ்னீஷ் போன்றவர்கள் அமெரிக்க இளைஞர்களிடையே அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கிளப்பிய கிளர்ச்சியின் விளைவே ஸ்டிவின் இந்திய விஜயத்துக்கு காரணம் என்பதாகவே என் புரிதல்.

நபு சொன்ன விஷயங்களில் என்னை மிகவும் துண்டுதலை உண்டுபண்ணியது ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இந்த தகவல் தான். நீம் கரோலி பாபா யார்? எப்போது வாழ்ந்தார்? நபு சொன்ன விஷயம் உண்மையா? கைடுகள் வழக்கமாக அடித்து விடுவது போன்றதான பொய்த்தகவலா?

மலைப்பிரதேசத்தில் மொபைல் சிக்னல் சரியாக இல்லை. Data Roaming-உம் வேலை செய்யவில்லை. ராணிகேத் ஓட்டலிலும் இணையத் தொடர்பு கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை இணையத் தொடர்பு கிட்டியது. Did Steve Jobs visit Kainchi Dham? என்ற கேள்விக்கு விடை தேடினேன்.

steve_jobs-apple

Steve Jobs (Founder of Apple)

இரண்டு குறிப்புகள் கிடைத்தன. நீம் கரோலி பாபாவின் பக்தர் ஒருவர் கீர்த்தனை இசையமைப்பாளர். sacred music என்னும் இசை வகைமையின் முன்னோடி எனக் கருதப்படுபவர். அவர் பெயர் ஜெய் உத்தல். உத்தல் படித்த ரீட் கல்லூரியின் மாணவர் ஸ்டீவ் ஜாப்ஸ். மாணவர் ஸ்டீவை ஒரு முறை சந்திக்கும் போது உத்தல் நீம் கரோலி பாபாவுடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். ஸ்டீவ் அந்த உரையாடலில் கிடைத்த விவரங்களால் ஈர்க்கப்பட்டு தன் நண்பர் ஒருவருடன் இந்தியப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார். அக்டோபர் 1974இல் Kainchi Dham வருகிறார். துரதிர்ஷ்டவசமாக நீம் கரோலி பாபா 1973இலேயே பூதவுடலை துறந்துவிட்டிருக்கிறார். ஸடீவ் பாபாவை சந்திக்கவில்லை. உத்தலுடனான உரையாடலே தன்னை இந்தியா செல்லத் தூண்டியது என்று ஸ்டீவ் பல முறை குறிப்பிட்டுள்ளதாக ஸ்டீவுடன் சேர்ந்து இந்தியா பயணம் சென்ற நண்பர் பிற்காலத்தில் உத்தலுக்கனுப்பிய மின்னஞ்சலொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு குறிப்பு கிருஷ்ண தாஸ் என்று இன்று அறியப்படும் ஜெஃப்ரே கெகல் என்பவரைப் பற்றியது. இவர் நீம் கரோலி பாபாவின் நேரடி சீடர். பாபாவினுடைய தன் முதல் சந்திப்பை பற்றி இவ்வாறு விவரிக்கிறார் :-

“அவருக்கு ஆப்பிள் பழங்கள் பிடிக்கும் என்று கேள்விப்பட்டிருந்தோம். எனவே ஆப்பிள்களை எடுத்து வந்திருந்தோம். எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஆப்பிள்களை அவரிடம் கொடுத்தோம். அவற்றை வாங்கிக்கொண்டார். உடன் அந்த ஆப்பிள்களை அறையில் இருந்தவர்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டார். “இவருக்கு நான் கொடுத்த ஆப்பிள்கள் பிடிக்கவில்லை போலிருக்கிறது” என்று நினைத்தேன். என்னை நோக்கினார். ‘நான் என்ன செய்தேன்?’ என்று கேட்டார். நான் சொன்னேன் : ‘எனக்கு தெரியாது’. ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். நான் மீண்டும் ‘எனக்கு தெரியாது’ என்று சொன்னேன். அவர் திரும்பவும் ‘நான் செய்தது சரியா?’ என்று கேட்டார். ‘நீங்கள் செய்யும் எதுவும் சரி’ என்று பதில் சொன்னேன். அவர் சிரித்தார். பிறகு சொன்னார் “ஒருவனுக்கு கடவுள் இருப்பானாயின், அவனுக்கு எதுவும் தேவையில்லை. அவனிடம் ஆசைகள் இராது’ அவர் சொன்னதைக் கேட்டதும் நான் என்னைப் பற்றி யோசித்தேன். என்னிடம் எவ்வளவு ஆசைகள்! நான் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன். இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் அவர் என் எண்ணத்தை படித்திருந்ததை எனக்கு காட்டினார். என்னுள்ளில் நான் உணரத்தக்க வகையில் எனக்கு வழி காட்டினார்”

வானிலை சற்று மோசமடைந்திருந்ததால் ஓட்டலிலிருந்து கிளம்ப தாமதமானது. இதனால் தில்லிக்கு கிளம்புமுன் Apple Garden பார்க்கலாம் என்று போட்ட திட்டம் நிறைவேறவில்லை. மோசமான வானிலை காரணமாக Para Gliding spot அன்று மூடியிருந்தது. Golf Course மூடுபனியில் கவிந்திருந்தது. ஓட்டுனர் Kainchi Dham அருகே தேநீர் குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினார். நாங்கள் காரில் இருந்து வெளியே இறங்கவில்லை. அதே இடத்தில் இரண்டு நாட்கள் முன்னர் காருக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெரியவள் “அப்பா! இந்த கோவிலுக்கு போகவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு சின்னவள் “நாங்க அன்னிக்கே போயிட்டோம்… இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகணும்னா நீயும் போய் கும்பிட்டுட்டு வந்துடு” என்று பெரியவளைக் கேலி செய்தாள்.

  1. இதில் குறிப்பிடப்படும் புத்தகம் பரமஹம்ச யோகானந்தர் எழுதிய சுயசரிதம் – Autobiography of a Yogi. இந்நூலின் 34ம் அத்தியாயத்தை இணையத்தில் வாசிக்க → https://www.crystalclarity.com/yogananda/chap34.php
  2. நீம் கரோலி பாபா பற்றி → https://en.wikipedia.org/wiki/Neem_Karoli_Baba
  3. ஸ்டீவ் ஜாப்ஸ்-ஸின் இந்திய விஜயத்தின் பிண்ணனி குறித்து → http://www.abc.net.au/radionational/programs/rhythmdivine/jobs-holy-man-and-apple-logo/4609698

ஒரு நாவலுக்கு மதிப்புரை எழுதுதலில் என் முதல் முயற்சி

$
0
0


நன்றி : காலச்சுவடு


ஆகஸ்டு பத்து

$
0
0

தனிமனித வழிபாட்டை எதிர்க்கும் நவீனவாதி நான். ஆனாலும் இன்று ஒரு விஷயம் நடந்தது. சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் ஒருவர் உரையாற்றப்போகிறார் என்ற அந்த விளம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் பார்த்தோம். மனைவியும் இளையமகளும் செல்வதாக உடன் முடிவெடுத்தனர். எனக்கு இரண்டு மனமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் இல்லை. கடமையா ஆர்வமா எது முக்கியம் என்ற ஊசலாடலில் என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நேற்றிரவு ஒரு யோசனை தோன்றிற்று. வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதி பெற்றேன். காலை எட்டு மணிக்கே ஆட்டோவில் கிளம்பினோம். ஆடிட்டோரிய வாசலில் பெரும் வரிசை. அதிக கூட்டம் இராது என்று நினைத்துக்கொண்டு வந்த எனக்கு உரையாற்றப்போகிறவரின் பிரபலத்தன்மையை கண்ணால் காணும் சந்தர்ப்பம் இன்று கிட்டியது. அரசியல் பிரமுகர் இல்லை ; கலைத்துறையில் பணியாற்றுபவர் இல்லை ; எனினும் கூட்டம் குவிந்திருந்தது. பாதுகாப்பு பரிசோதனை சாவடிக்குள் நாங்கள் நுழைந்தவுடன் வாயிலை அடைத்துவிட்டார்கள். எங்களுக்குப் பின்னால் காத்திருந்தோர் ஏமாற்றத்துடன் திரும்பியிருப்பர். திரைப்படக் காட்சி துவங்கிய பிறகு அரங்கிற்குள் நுழைவது போல் ஆடிட்டோரியத்துக்குள் போனோம். உட்கார ஓர் இருக்கையும் காலி இல்லை. மூன்று மட்ட பால்கனிகளும் நிரம்பி வழிந்தன. இருக்கைகளின் வரிசைகளுக்கு நடுவே தரையில் உட்கார்ந்து கொண்டோம். அவர் மேடைக்குள் மெல்ல நடந்து வந்தார். மேடையில் வேண்டியவர் வேண்டாதவர் என்று நிறைய குமிந்திருந்தனர். மேடைக்கு வந்தவரின் காலைத் தொடுவதே அவர்கள் குறிக்கோள் போல விழா அமைப்பாளர்கள் எல்லோரும் மேடையை விட்டு கீழிறங்கவில்லை. அரங்கே அவரை பரவசத்துடன் பார்த்தது. சிரித்தார். கை கூப்பினார். மகிழ்ச்சியாய் இருப்பது பற்றி பேசினார். அவர் பேசியவை எதுவும் என் மனதில் பதியவில்லை. ஆடிட்டோரியத்தில் இருந்த எல்லோரை போன்றும் அவர் முகத்தை பார்த்து பரவசத்தில் ஆழ்ந்தேன். பேச்சு முடிந்து கேள்வி பதில்கள் பகுதி வந்தது ; நன்றியுரைக்கு முன்னம் “இங்கே வந்திருப்பவர்களில் எத்தனை பேர் திபெத் அகதிகள்?” என்று கேட்டார். பாதிக்கு மேற்பட்டோர் கை தூக்கினார்கள். அவர்களுக்காக சற்று நேரம் திபெத்திய மொழியில் பேசினார். திபெத்திய சகோதரர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் கை கூப்பிக்கொண்டு அவர் பேசியதைக் கேட்டார்கள். எனக்கு முன்னால் அமர்ந்திருந்த திபெத்திய சகோதரியின் கண்ணில் நீர் வழிந்தது. மேடையிலிருந்து கிளம்பும் முன் பல முறை நன்றி சொன்னார். புன்னகைத்தார். சுவர்க்கம் வேறெங்கும் இல்லை. கருணை ஒளியை தூவியவாறு புன்னகைக்கும் அவரின் பிரசன்னத்தில் தான் இருக்கிறது சுவர்க்கம். ஆகஸ்டு பத்து. இன்றுதான் நான் முதல் முறையாக டென்ஸின் க்யாட்ஸோவை ரத்தமும் சதையுமாக தரிசித்த நாள். அவலோகிதேஸ்வரரின் அவதாரம் என நம்பப்படுபவரே, நீர் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின் படி, இவ்வுலகின் ஏழு பில்லியன் மனித உயிர்களும் புத்த நிலையில் உய்யும் வரை உயிர் தரித்திருப்பீராக! பொய்யான தலாய் லாமாவை உற்பத்தி செய்யும் வல்லரசு சீனாவின் திட்டத்தில் மண்ணைப் போடுவீராக!


பாவங்களின் சங்கமம் – a fable

$
0
0


பாவங்கள் பல செய்துவிட்டு அவற்றை கரைக்க கங்கை நதி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை அணுகினார் நாரத முனி. விதவிதமாக அவன் பண்ணிய பாவங்கள் பற்றிய விவரங்கள் கேட்டு பதறிப்போனார். யாத்திரீகனோ அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ‘கங்கை நதி சென்று நீராடி என் பாவங்களைக் கழுவிக் கொள்வேன்: கவலைப் பட ஏதும் இல்லை’ என்று கூறினான் அவன்.

நாரதர் ஆகாய மார்க்கமாக விரைந்து கங்கா தேவி முன் சென்று நின்றார். ‘என்ன பதற்றம் முனிவரே? ஏன் இவ்வளவு மூச்சிறைக்கிறது உமக்கு?’ என்று பரிவுடன் வினவினாள்.

‘பாரத தேசத்தின் அனைத்துப் பாவிகளும் தம் பாவங்களை உன்னில் நீராடிக் களைகிறார்களாமே. உண்மையா?’

‘ஆம். இதிலென்ன சந்தேகம். பல யுகங்களாக நடப்பது தானேயிது?’

‘லோகத்தின் பாவங்கள் அனைத்தும் உம்மில் கரைந்தால் உங்கள் நிலை என்னாவது தாயே?’

‘எனக்கு என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது. நான் சென்று சமுத்திரத்தில் கலக்கும் போது எல்லா பாவங்களும் அங்கேயே கலந்து கொள்கின்றன’

நாரத முனியின் வியப்புணர்ச்சி அதிகமானது. எல்லா பாவங்களும் கடலில் சென்று தேங்கிவிடுகின்றனவா? விடை காணும் ஆர்வம் அவரை உந்த சமுத்திர ராஜனைக் காணச் சென்றார்.

நாரதரின் கேள்வியைக் கேட்டு வயிறு புடைக்க சிரித்தான் சமுத்திர ராஜன்.

‘முனிவரே, யாராலும் கற்க முடியாத பிரம்ம சூத்திரங்களையெல்லாம் தம் விரல் நுனிக்குள் வைத்திருக்கும் நீங்களா இத்தனை எளிமையான விஷயத்தைக் கேட்க என்னிடம் வந்தீர்கள்? என்னில் வந்து கலந்த நீரெல்லாம் சூரிய வெளிச்சத்தில் ஆவியாக மேகக் கூட்டத்துக்கு செல்லுமே, அவற்றோடு பாவக் கூட்டங்களும் சென்று விடாதா?’

நாரதர் சற்று வெட்கப்பட்டார். பின்னர் ராஜனின் தொடரும் சிரிப்பொலியுடன் தன் சிரிப்பொலியை இணைத்துக் கொண்டார்.

அவரின் அடுத்த பயணம் இந்திர சபை நோக்கி. இந்திரனின் சிரிப்பொலி சமுத்திர ராஜனின் சிரிப்பொலியை விட பலமாக இருக்கும் எனத் தெரிந்தும் தொடங்கிய கேள்வித் தேடலை அதன் தர்க்க பூர்வ முடிவுக்கு எடுத்துச் செல்வதில் உறுதியாய் இருந்தார் நாரதர்.

கேள்வியை கேட்டதும் மேகங்களின் அதிபதி இந்திரன் சமுத்திர ராஜன் போலச் சிரிக்கவில்லை. கேள்விக்கான முகாந்திரம் அறிந்தவுடன் தீவிரமான பார்வையுடன் நாரதருக்குச் சொன்னான் :

‘மேகங்கள் மழை பொழியும் போது நீர்த்தாரைகளுடன் பாவங்களும் ஒட்டிக்கொண்டு மீண்டும் பூமிக்கே சென்றுவிடுகின்றன. சொல்லப் போனால் ஒவ்வொரு பாவமும் அதை செய்தவரின் தலையிலேயே மழைத் துளிகளுடன் போய் விழுகின்றன’

நாரதர் முதலில் சந்தித்த மானிடன் கங்கை நதியில் நீராடிவிட்டு ஊர் திரும்பும் வழியில் பெருமழை பெய்தது. எங்கும் ஒதுங்காமல் அதில் நனைந்து கொண்டே அந்த மானிடன் பயணம் செய்து கொண்டிருந்ததை ஒரு மேகத்தின் மேல் நின்று பார்த்துக் கொண்டிருந்த நாரதர் கன்னத்தில் நீர் வழிந்தது. நீர் உப்புக்கரித்தது.


இன்று சனிக்கிழமை

$
0
0

முதலில் மின்னஞ்சல் வந்தது. மிக எளிதில் யார் வேண்டுமென்றாலும் மின்னஞ்சல்கள் அனுப்பிவிடுவர். அவற்றையெல்லாம் படிக்கும் பொறுப்பு பெறுநருடையது. அனுப்பியவர் தன் கடமையை செய்துவிட்டார். அவர் இளைப்பாறப் போய்விடுவார். எத்தகைய தகவல்களை அறிவுறுத்தல்களை மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவது என்ற வரையறை இல்லாமல் எல்லாவற்றையும் அஞ்சலில் எழுதிவிடல் சாதாரணமானதாகப் போய்விட்டது. அனைவருக்கும் ஓர் ஓட்டு என்பது மாதிரி அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி. மேலதிகாரிகள் நேரில் புன்னகை மன்னர்கள் ; மின்னஞ்சலில் பராசக்திகள் ; மனோகராக்கள். விடுமுறை நாட்களில் தொலைபேசியில் தொல்லை கொடுக்க மாட்டார்கள். வார இறுதி உங்களின் சொந்த நேரம் என்ற நல்வசனம் பேசுவார்கள். மின்னஞ்சலில் ஓரிரு வரிகளிலான அர்ச்சனைகள் சனி, ஞாயிறு நெடுக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். அவற்றில் ஒன்றிரண்டுக்கு கூட பதிலளிக்காவிடில் திங்கட்கிழமையன்று வேறு காரணங்களைச் சொல்லி “விமர்சிப்பார்கள்” ; எந்த காரணத்துக்கு ‘விமர்சனம்’ என்று தெரிந்துவிட்டால் அதிகாரியின் செயல் திறன் கூர்மையடையவில்லை என்று பொருள்.

மின்னஞ்சலுக்குப் பிறகு வந்த குட்டிச்சாத்தான் வாட்ஸ் அப். அனைவரின் கைத்தொலைபேசியிலும் பதுங்கிக் கொண்டு இந்த குட்டிச்சாத்தான் பண்ணும் அக்கிரமங்கள் சொல்லி மாளாது. அதிகாரிகள் சப்ஜெக்ட்டுக்கு ஒன்று என வாட்ஸப் குழுக்களை சிருஷ்டித்து கண் மூடி திறப்பதற்குள் மக்களை இட்டு நிரப்பி ‘ராஜாங்க’ விஷயங்களை கையாள்வார்கள். அதிகாலை கண் விழித்து தூக்கக் கலக்கத்தில் நண்பர்கள் யாராவது தகவல் ஏதேனும் அனுப்பியிருக்கிறார்களா என்று பார்க்கப்போனால் முந்தைய நாளிரவு தூக்கம் வராமல் நிறுவன வாட்ஸப் குழுக்களில் “ஆணை” முட்டைகளை இட்டிருப்பார் மேலதிகாரி. அந்த முட்டைகள் எல்லாம் குழு அங்கத்தினர்களின் பதில்களாக குஞ்சு பொறித்திருக்கும். எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்கலாம் என்று அமைதியாக இருக்கவே முடியாது. ஏனெனில் என்னுடைய பதில் குஞ்சை காணாமல் வாட்சப் குழுவிலேயே என் பெயரை விளித்து கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார் அதிகாரி.

நிரலிகளின் அட்டகாசம் இன்றைய சனிக்கிழமையும் தொடர்கிறது. சலிப்பு மேலிடுகிறது. மேலோட்டமான சில பதில்களை டைப்பிட்டு நிரலியை மூடி வைத்த போது மனமெங்கும் வெறுப்புணர்வு. தப்பி ஓடிவிட வேண்டும் என்பது மாதிரியான மனோநிலை. இந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேட வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாகவே நீடிக்கிறது. வாய்ப்புகள் எதுவும் கையில் சிக்கவில்லை. அவை சிக்காமலேயே போய் விடுமோ என்ற அச்சம் இபபோதெல்லாம் அடிக்கடி மனதை வாட்டுகிறது. வயது ஐம்பதை தொடுகிறது. நிறுவனங்களில் இளைஞர்களை பணியமர்த்த விரும்பும் போக்கு அதிகரித்து வரும் இந்நாட்களில் ஏற்கனெவே சீனியர் சிட்டிசன் அந்தஸ்தை அடைந்துவிட்டது மாதிரியான தாழ்வுணர்ச்சி தலை தூக்குகிறது.

நம்பிக்கைச் சிக்கலுக்கு என்ன மருந்து? மேலதிக நம்பிக்கை. நம்மை மீறிய சக்தியின் மேலான நம்பிக்கை. நம்முடைய பிரச்னைகளுக்கு நம்முடைய திறனை நம்பாமல் வேறொன்றை – இருக்கிறதா அல்லது இல்லையா என்று தெரியாத ஒன்றை – நம்புவதா என்ற கேள்வி தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்றாலும் எப்படியோ ஒரு தெளிவு பிறந்தால் சரி – பிறக்கிறதா என்று பார்த்து விடுவோமே என்ற எண்ணத்துடன் படுக்கையின் மேல் கிடந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தேன்.

தேடல்கள் அனைத்துமே curosity-யின் குழந்தைகள். பதற்றமும் பயமும் Curiosity-யாக வடிவ மாற்றம் கொள்ளும் தருணத்தில் நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்கிற ஆன்மீக வாயிலுக்குள் நுழைந்து விட முடிகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவர் ஆத்திகராயிருக்கலாம் ; நாத்திகராயிருக்கலாம் ; யாரும் எதுவாகவேனும் இருந்து விட்டு போகலாம் ; நம்பிக்கை பூர்வ காத்திருப்பு என்னும் குணம் வயதான தளர்ந்தோரின் கையில் இருக்கும் கைத்தடி போன்றது. (இந்த குறிப்பிட்ட உவமைக்கான காரணம் கட்டுரையின் முடிவில் வரும்).

புத்தக கிரிக்கெட் விளையாடுபவன் போல் புத்தகத்தின் ஒரு பக்கத்தை குறிப்பின்றி திறந்தேன்.

+++++

ஹேமத்பந்த் இப்போது பாபா சமாதானம் நிலைநாட்டும் பாகத்தை ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக் கூறுகிறார். தாமோதர் கன்ஷ்யாம் பாபரே என்று அழைக்கப்பட்ட அன்னாசின்சினிகர் என்ற அடியவர் ஒருவர் இருந்தார். அவர் எளிமையானவர். முரடர். நேர்மையானவர். அவர் எவரையும் லட்சியம் செய்யமாட்டார். எப்போதும் கண்டிப்பாக பேசி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியிலேயே எல்லாவற்றையும் நடத்துவார். வெளிப்படையாகக் கடுமையாகவும் வசப்படாதவராகவும் இருந்த போதும் அவர் நற்பண்பாளர். கள்ளமற்றிருந்தார். எனவே சாயிபாபா அவரை நேசித்தார் (படுக்கையில் கிடந்த புத்தகம் – ஸ்ரீ சாயி சத் சரித்திரம் – ஹேமத்பந்த் என்ற புனைபெயர் கொண்ட ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தபோல்கர் அவர்கள் எழுதிய மராட்டிய மூலத்திலிருந்து இந்திரா கேர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில நூல்). ஒருநாள், ஒவ்வொருவரும் தங்கள் வழியில் சேவை செய்வதைப் போன்று, அன்னாவும் பாபாவின் கைப்பிடியை பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். அம்மா என்று பாபாவாலும் மாவிசிபாய் என்று பிறராலும் அழைக்கப்பட்ட கிழவிதவையான வேணுபாய் கௌஜால்கி வலது புறத்தில் அமர்ந்து கொண்டு அவளுக்கே உரிய விதத்தில் சேவை செய்தாள். மாவிசிபாய் தூயவுள்ளம் கொண்ட முதியவள். அவள் தன் இரு கைகளையும் கோர்த்துக்கொண்டு பாபாவின் அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாகப் பதித்துப் பிசைந்தாள். அடிவயிறே தட்டையாகிவிடும்படி வேகமாக பிசைந்தாள். பாபா இப்படியும் அப்படியுமாக அசைந்து புரண்டு கொண்டிருந்தார். மற்றொரு புறமிருந்து அன்னா நிதானத்துடன் இருந்தார். ஆனால் மாவிசி பாயின் அசைவுகளுடன் அவள் முகமும் அசைந்தது. ஒரு சமயத்தில் அவளது முகம் அன்னாவின் முகத்திற்கு வெகுஅருகே வந்துவிட்டது. வேடிக்கையான பண்பு கொண்ட மாவிசிபாய் “ஓ இந்த அன்னா ரொம்ப கெட்டவன். அவன் என்னை முத்தமிட விரும்புகிறான். அவனுக்கு தலை நரைத்தும் ஆசை நரைக்கவில்லை” என்றாள். இச்சொற்கள் அன்னாவை கோபாவேசம் கொள்ளச் செய்தன. முஷ்டியை மடக்கிவிட்டுக் கொண்டு அவர் “நான் ஒரு கெட்ட கிழவன் என்றா சொல்கிறாய். நான் அவ்வளவு முட்டாளா? ஏன் வீணே என்னுடன் சண்டையை ஆரம்பிக்கிறாய்?” என்றார். அங்கு குழுமியிருந்தவர்கள் அனைவரும் இருவரின் வாய்ச்சண்டையை வெகுவாக ரசித்தனர். அவர்கள் இருவரையுமே பாபா மிகவும் நேசித்தார். சண்டையை நிறுத்த விரும்பிய அவர் இவ்விஷயத்தை மிகத்திறமையுடன் கையாண்டார். “அன்னா, ஏன் அனாவசியமாக கூச்சலையும் குழப்பத்தையும் உண்டாக்குகிறாய்? ஒரு மகன் தாயை முத்தமிடுவதில் என்ன தவறிருக்கிறது?” என்றார். பாபாவின் இம்மொழிகளைக் கேட்டவுடன் அனைவரும் மனமகிழ்ச்சியுடன் நகைத்தனர்.

+++++

ஹேமத்பந்த் பாபாவின் லீலைகளை ஒவ்வொன்றாகச் சொல்லி ஒவ்வொரு லீலைக்கும் பின்னர் தொக்கி நின்ற அர்த்தத்தின் தன்னுடைய புரிந்து கொள்ளலை வாசகரிடம் பகிர்வார். மேற்சொன்ன சம்பவத்திற்கான அவரின் குறிப்பு என்னுள் பல திறப்புகளை ஏற்படுத்தியது.

“A person may be burst out laughing while being caned and dissolve into tears when hit by a merest flower! It is the feeling that causes these waves of emotion. Who does not have this experience?”

+++++

நிரலிகள் இன்றி ஏது வாழ்வு? மேற்பகிர்ந்த மேற்கோளின் தமிழாக்கத்தை நிலைத்தகவலாக இடும் எண்ணம் பிறந்தது. முகநூல் நிரலியைத் திறக்கவும் செய்தேன். Feeling மற்றும் Emotion – இவ்விரு சொற்களின் சரியான தமிழ் இணைச்சொல்லை நான் அறிந்திருக்கவில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு நிரலி இரண்டு சொற்களுக்கும் உணர்வு என்றும் உணர்ச்சி என்றும் தமிழ்ப்படுத்தியது. இரண்டு சொற்களையும் ஒன்றுக்கு மாற்றாகவே இத்தனை நாள் பயன்படுத்தி வந்ததால் உணர்வும் உணர்ச்சியும் ஒன்றையே குறிக்கிறது என்று இதுநாள் வரை நினைத்து வந்தேன். ஆனால் மேற்சொன்ன மேற்கோளில் Feeling என்ற சொல்லும் Emotion என்ற சொல்லும் ஒன்றைக் குறிக்கவில்லை என்பது விளங்கினாலும் இரண்டு சொற்களுக்கும் இடையிலான சரியான வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன்.

உணர்வு என்பதும் உணர்ச்சி என்பதும் வெவ்வேறாக இருக்கலாம் என்று என் மனைவி சொன்னார். தமிழ் விக்சனரி இணைய தளத்தில் இவ்விரு பதங்களின் அர்த்தத்தை நோக்கினேன்.

உணர்ச்சி – நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு.

நமக்குத் தேவையான உணர்ச்சியை அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம்

கொஞ்சம் தெளிவாவது போலிருந்தது. இணையத்தில் மேலும் என் ஆய்வுகளைத் தொடர்ந்தேன்.

உணர்ச்சிகள் பொருண்மைத் தன்மை படைத்தவை. ஒரு வெளிப்புற தூண்டுதலால் உடனடியாக ஏற்படும் மனோநிலை. உணர்ச்சிகள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் பரிணாமங்களின் வழியாக நம் ஜீன்களுக்குள் நுழைந்தவை. அவை சிக்கலானவை. பல வித பொருண்மையியல் மற்றும் அறிவார்ந்த எதிருணர்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கியவை. உதாரணத்திற்கு ஒரு வனாந்தரத்தில் உலவுகையில் ஒரு சிங்கம் நம் வழியில் வந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடன், நம்முள் பயம் தொற்றிக்கொண்டு விடுகிறது. ரத்த ஓட்டம், மூளை இயக்கம், முக பாவம் மற்றும் உடல் மொழி – இவைகள் வாயிலாக உணர்ச்சிகள் புறவயமாக அளக்கப்படக் கூடியவை. மூளையின் வெளிப்புறத்தில் ஓடும் துணை நரம்புகள் (subcortical) உணர்ச்சிகளை பதனிட்டு கடத்திச் செல்பவை. அவை முரண் தன்மை மிக்கவை ; தருக்க ஒழுங்கில் அடங்காதவை.

உணர்வுகள் நம் தலையில் உலவுபவை ; சொந்த, அனுபவ ரீதியாக பெற்ற உணர்ச்சியின் எதிர்க் குறிப்புகள் அவை. ஆங்கிலத்தில் 3000த்துக்கும் மேலான உணர்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக ஐநூறுக்கும் மேலான உணர்வுகளை மக்கள் எளிதில் அடையாளம் காண்பர். ஆனால் அவர்களிடம் உணர்ச்சிகளை பட்டியலிடச் சொன்னாலோ ஐந்து முதல் பத்து வகை உணர்ச்சிகள் மட்டுமே தேறும். உணர்ச்சிகள் உலகளாவிய ரீதியில் பொதுவானவை ; முதலில் வருபவை. அவை எந்த வித உணர்வாக பின்னர் மாறும் என்பது தனிப்பட்ட குணாம்சம், அனுபவம், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொறுத்தது. உதாரணத்திற்கு, ஒரு விலங்கியல் பூங்காவில் கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தை காண்கிறோம். அப்போது எழும் நமது உணர்வு ஆர்வம் மற்றும் வியப்பு முதலானவையாக இருக்கலாம் ; விலங்குகள் சிறையிலிடப்படக் கூடாது என்னும் கருத்துடையவராக இருப்போமாயின் கசப்புணர்வும் எழலாம்.

உணர்வைப் பற்றி (Feeling), உணர்ச்சியைப் பற்றி (Emotion) மேலும் யோசித்த போது ஒரு சமன்பாடு எனக்கு விளங்கியது :- Feeling = Emotion + Cognitive Input

+++++

அன்னா – மாவிசிபாய் சம்பவத்துக்குத் திரும்புவோம். ஷீர்டி பாபா அன்னாவுக்கு சொன்னது மாதிரி – அன்னாவும் மாவிசிபாயும் மகன் – தாய் உணர்வு மேவிய எண்ணங்களைக் கொண்டிருப்பாராயின் வாய்ச்சண்டை மூண்டிருக்காது. மாவிசிபாய் வாக்குவாதம் என்னும் புறத்தூண்டுதலை வெளிப்படுத்தினாலும் அதனால் தூண்டப்பெறாதவராக அன்னாவினுடைய அன்புணர்வு சண்டையைத் தவிர்த்திருக்கும்.

உணர்ச்சி உணர்வுக்கு முந்தையது என்று மனோதத்துவம் விவரித்தாலும் உணர்வு ஏற்கனவே நம் மனக்கூடத்தில் குவிந்திருப்பதால் தீயஉணர்ச்சிக்கு மாற்றாக நல்லுணர்வை அதிகமும் நாம் சேகரித்து வைக்கலாம். வெறுமனே மனக்கரையை தொட்டுப் போகும் அழகிய அலைகளாக மட்டுமே உணர்ச்சியை காணும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளலாம்.

+++++

நிரலிகள் ஏராளம் – மின்னஞ்சல், வாட்ஸப், முகநூல், இணையம் என. அவற்றில் பொறிக்கப்படும் “ஆணை” முட்டைகள் வெறும் எண்ணியல் துண்மிகள். அவற்றுக்கு பதில் சொல்லும் முறை நம் உணர்விலிருந்து எழுகிறது. அதற்கு மட்டுமே நாம் பொறுப்பாளிகள். நம் பதிலுக்கு நம் அதிகாரிகளுள் எழும் உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல.

+++++

சனிக்கிழமை மதியம் வாட்ஸ்அப்பில் அதிகம் “ஆணை” முட்டைகள் இடப்படவில்லை. மின்னஞ்சலிலும் அமைதி தவழ்ந்தது. நண்பர் சுவாமி நாதன் வாட்ஸ்அப்பில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய சமீபத்திய வலைப்பூ இடுகையை பகிர்ந்திருந்தார். கடவுளும் கைத்தடியும் – அனுபவமா புனைவா தெரியவில்லை. அது சொல்ல வந்திருக்கும் கருத்து என் உணர்வில் நிறைந்தது.

IMG_2549

Advertisements


Viewing all 175 articles
Browse latest View live