Quantcast
Channel: இலைகள், மலர்கள், மரங்கள்
Viewing all 175 articles
Browse latest View live

தாரா தாரா தாரா

$
0
0
Green Tara - Tibetan Thangka Painting by Japanese artist Yoji Nishi

Green Tara – Tibetan Thangka Painting by Japanese artist Yoji Nishi

பௌத்தர்களின் வரலாற்றுக் கதைகளைப் பதிவு செய்த திபெத்திய வரலாற்றாளர் தாரநாதர் ஒரு கதை சொன்னார். பல யுகங்கட்கு முன்னர் பன்மடங்கு ஒளி என்னும் பிரபஞ்சத்தில் ஞானசந்திரா என்னும் இளவரசி வாழ்ந்து வந்தாள். புத்தர்களின் மேல் மிகுந்த பக்தியுடைவளாக விளங்கினாள். துந்துபிஸ்வர புத்தர் என்னும் புத்தருக்கு பல வருடங்களாக காணிக்கைகள் அளித்து வந்தாள். இதன் காரணமாக ஒரு நாள் அவளுள் கருணையின் அடிப்படையிலான போதிசித்தம் எழுந்தது. உலக உயிர்கள் அனைத்தையும் உய்விக்க வைக்கும் ஞானத்தைப் பெறும் எண்ணம் வெகுஆழமாக வேரூன்றியது. பிக்குக்களை அணுகினாள். அவர்களெல்லாம் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வலியுறுத்தினர். அப்போது தான் அவள் ஒர் ஆணாக அவதரித்து போதிசத்துவ நிலையை அடைய இயலும் என்றும் அறிவுறுத்தினர். பௌத்த இலக்கியங்களில் நாம் இந்நிலைப்பாட்டை பரவலாக படிக்கலாம். ஒரு பெண் போதிசத்துவப் பாதையில் முன்னேறுவதற்கு ஒரு கட்டத்தில் ஆணாகப் பிறத்தல் அவசியம் என்றே பல்வேறு பௌத்த நூல்கள் வலியுறுத்தி வந்தன. ஞானசந்திராவுக்கு பிக்குக்கள் சொன்னது ஏற்றதாய்ப் படவில்லை. பிக்குக்கள் சொன்னதைக் கேட்ட ஞானசந்திரா பேசலுற்றாள் :

 ”இங்கு ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை
சுயமும் இல்லை, நபரும் இல்லை, பிரக்ஞை இல்லவேயில்லை.
ஆணென்றும் பெண்ணென்றும் வகைப்படுத்துதல் சாரமற்றது
தீயமனம் கொண்ட உலகை ஏமாற்றவல்லது”

பிறகு அவள் ஓர் உறுதிமொழி பூண்டாள்.

“ஆணுடலில் இருந்து
ஞானநிலையை விழைவோர் பலர் ;
பெண்ணுடலில் இருக்கும் உயிர்களின் உய்வுக்காக
உழைப்போர் யாருமிலை.
எனவே, சம்சாரவுலகம் இல்லாமல் போகும் வரை
பெண்ணுடலில் இருக்கும் உயிர்களின் உய்வுக்காக
அயராதுழைப்பேன்”

உயிர்களைக் காத்து ஆட்கொள்ளும் பணியில் வல்லமை பெற்றவளாக ஆனாள். துந்துபிஸ்வர ததாகதர் அவளுக்கு “தாரா” என்னும் புதுப்பெயர் சூட்டினார்.

தாராவின் தோற்றம் பற்றி மேலும் பல தொன்மக் கதைகள் உண்டு. சில தொன்மங்களின் படி, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுகத்தின் துவக்கத்தில் அவலோகிதேஸ்வர போதிசத்துவர் தன் தலையைச் சாய்த்து மனிதவினத்தின் துக்கங்களை நோக்கலானார். சம்சாரவுலகமெங்கிலும் துக்கம் பரவிக் கிடந்தது. உயிர்கள் துக்கத்தில் பிறந்து, நோய்கள், போர், வறட்சி இவற்றால் பீடித்து துக்கத்தில் மடிந்த வண்ணம் இருந்தன. உயிர்கள் தாம் ஆசைப்பட்டதை அடையமுடியாமலும், ஆசைப்படாததை அடைந்தும் அல்லலுற்றன. எத்துணை உயிர்கள் பயனிலா சம்சார சுழற்சியிலிருந்து விடுபட அவலோகிதர் உதவி செய்தாலும், விடுபடா உயிர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதைக் கண்டு அவர் கண்ணில் நீர் துளிர்த்தது. கண்ணீர் அவர் முகத்தில் வழிந்தோடி அவர் காலுக்கருகே ஒரு குட்டை உருவானது. குட்டையின் ஆழத்திலிருந்து ஒரு நீலத் தாமரை பூத்தெழுந்தது. நீலத் தாமரையிலிருந்து பதினாறு வயது இளம் பெண் ஒருத்தி தோன்றினாள். அவள் மென்மையான உடலைக் கொண்டிருந்தாள். அவள் உடலை மேவிய ஒளி ஊடுருவும் பச்சை நிறம் யதார்த்தத்திற்கும் யதார்த்தமின்மைக்கும் இடையே வட்டமிடுவதாய் இருந்தது. அவளிள் குடிகொண்ட ஆற்றல் புலன்களால் காண, கேட்க, உணரத் தக்கதாய் இருந்தது. பட்டுடை உடுத்தியிருந்தாள். இளவரசிகள் அணியும் நகைகளைப் பூண்டிருந்தாள். அவளின் கை அழகான நீலத்தாமரையை ஏந்தியிருந்தது. அவலோகிதேஸ்வரரின் கருணக் கண்ணீரில் இருந்து உதித்தவளை கருணையின் வடிவம் என்றே கொள்ள வேண்டும். ஒளி மயமாக, அழகான கண்களுடன், நட்சத்திரவொளியின் மறுரூபமாய் தாரா இந்த யுகத்தில் மீண்டும் தோன்றினாள்.

வேறோரு யுகத்தில் மேற்கு திசை சொர்க்கத்தில் இருக்கும் அமிதாபா புத்தரின் கண்களிலிருந்து ஒளிர்ந்த நீலக் கதிரொளியிலிருந்து தாரா தோன்றினாள்.

தாராவும் துர்க்காவும்
தாராவின் பல்வேறு அம்சங்களும் பண்புகளும் ஆரம்ப கால பிராமணிய பெண் கடவுளான துர்க்கையை ஒட்டியவாறு அமைந்திருக்கின்றன. எனவே, துர்க்கை வழிப்பாட்டிலிருந்து பௌத்தத்தின் தாரா வழிபாடு வளர்ந்திருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது. இது போன்ற இணைப்பை அவலோகிதேஸ்வரருக்கும் ஆரம்பகால சிவனுக்கும் இடையிலும் காணலாம். சுயாதீனமான பௌத்த கடவுளாக தாரா வழிபடப்பட்டதற்கு குப்தர்கள் காலத்துக்கு முந்தைய இலக்கியச் சான்றுகளோ தொல்லியல் சான்றுகளோ இல்லை. தாராவின் மிகப் பழைமையான சிற்பத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டு என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றார்கள். துர்க்கை மாதிரியான சில பெண் தெய்வங்களின் பெயர்கள் (அதிதி & ராத்ரி) வேத நூல்களில் வருகின்றன என்றாலும் வைதீக சமய பெண் தெய்வங்களின் கொள்கை ஒன்றிணைதல் (Principle Coalescence) முதன்முதலாக மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியான தேவி மகாத்மியத்தில் தான் நிகழ்கிறது. மார்க்கண்டேய புராணம் நான்காம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். சொற்பிறப்பியலின்படி (Etymologically) தாராவும் துர்காவும் ஒரே எண்ணத்தை வெளிப்படுத்தும் சொற்கள். ஒன்றுக்கிணையான இரு பெயர்கள் பரஸ்பர உறவை அர்த்தப்படுத்திக் கொள்ள இடமளிக்கிறது. தாராவின் எண்ணற்ற வடிவங்களில் ஒன்று பௌத்த நூல்களில் “துர்கோத்தரி நித்தரா” என்று வர்ணிக்கப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் மகாபாரதத்தில் ஒரு துர்க்கை ஸ்தோத்திரம் வருகிறது. அதில் துர்க்கை “தாரிணி” என்று துதிக்கப்படுகிறாள். “தாரிணி” என்றால் “கடக்கச் செய்பவள்” என்று பொருள். தாரா என்னும் பெயரின் பொருளும் அதுவே. தாராவின் 108 நாமங்களில் 44 நாமங்கள் துர்க்காவுக்கும் வழங்கப்படுகின்றன. மகாபாரதம் துர்கா என்ற பெயருக்கு “மக்கள் உன்னை துர்கா என்று துதிக்கிறார்கள் ஏனென்றால் நீயே அவர்களை கஷ்டந்தரும் வழிகளிலிருந்து மீட்கிறாய்” என்றொரு விளக்கம் அளிக்கிறது

தாரா வழிபாடு – இந்தியாவிலும் பிற நாடுகளிலும்
கிழக்கிந்தியாவில் தொடங்கிய தாரா வழிபாடு ஆறாம் நூற்றாண்டு காலத்தில் முழு வடிவம் பெற்று தக்காணக் குகைகளுக்கு, குறிப்பாக அஜந்தா – எல்லோரா குகைகளுக்கு பரவியிருக்கலாம். தாராவின் முக்கியத்துவம் வளர்ந்து கொண்டே போய், கிட்டத்தட்ட நூறாண்டுகளில் பாரதமெங்கும் பரவியது. இந்தியா மட்டுமில்லாமல் நேபாளம், திபெத், மங்கோலியா, இந்தோனேசியாவெங்கும் தாரா வழிபாடு பிரசித்தமானது. இலங்கையிலும் தாரா வழிபாடு இருந்திருக்கலாம். (திரிகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட பனிரெண்டாம் நூற்றாண்டு தாரா சிற்பம் ஒன்று பிரிட்டிஷ் மியுசியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது)  இந்தியாவில் பனிரெண்டாம் நூற்றாண்டு வரை தாரா பிரசித்தமாயிருந்தாள். முஸ்லீம் படையெடுப்புகளுக்குப் பிறகு தாரா இந்தியாவை விட்டு மறைந்து போனாள்.

திபெத்திலும் மங்கோலியாவிலும் தாரா வழிபாடு இன்றளவும் தொடர்கிறது. Stephen Beyer என்பவர் எழுதிய “The cult of Taaraa” என்ற கட்டுரையில் சொல்கிறார்: “தாராவின் வழிபாடு திபெத்திய சம்பிரதாயங்களில் பரவலாகக் காணப்படுகிறது. மற்ற தெய்வங்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு திபெத்தியர்கள் தாராவுடன் தனிப்பட்ட, நீடித்த உறவைக் கொண்டிருக்கிறார்கள்”. சீனாவிலும் ஜப்பானிலும் தாரா ஒரு குட்டி தெய்வம் தான். குவான்-யின் அல்லது கன்னொன் என்ற பெயர் கொண்ட பெண் வடிவ அவலோகிதேஸ்வரர் தாராவின் இடத்தை அங்கே நிரப்பி விடுகிறாள். குவான்-யினின் முதன்மைத் தொடர்பு அவலோகிதேஸ்வரருடன் இருந்தாலும், குவான்–யின்னின் சித்தரிப்பு தாராவைப் போன்றே அமைந்திருக்கிறது.

பயங்களைப் போக்குபவள்
மகாபயங்கள் எனப்படும் எட்டு பயங்களைப் போக்குபவளாக தாரா திகழ்கிறாள். இவ்விஷயத்திலும் இந்து சமயத்தின் துர்க்கையோடு தாராவுக்கு ஒற்றுமையுண்டு. தேவி மகாத்மிய நூலில் தேவி பக்தரை எல்லா கஷ்டங்களிலிருந்தும் கரை சேர்க்கிறாள் என்று சொல்லப்படுகிறது. கஷ்டங்களில் மகாபயங்களும் கூட சேர்க்கப்படுகின்றன. பயங்களிலிருந்து மட்டுமில்லாமல் சம்சார சாகரத்திலிருந்து கரை சேர்ப்பவள் துர்கா. சம்சார சாகரம் என்பதைக் குறிக்கும் – பவசாகரா – என்னும் சம்ஸ்கிருதச் சொற்றொடர்  தாராவின் தொடர்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் அஜந்தா குகையில் அவலோகிதேஸ்வரர் மனிதர்களை மகாபயங்களிலிருந்து விடுவிக்கிறார் என்று சித்தரிக்கப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டிலோ, எல்லோரா குகையொன்றில் அவலோகிதேஸ்வரரின் இடத்தை தாரா எடுத்துக் கொண்டு விடுகிறாள்.

எட்டு பெரும் பயங்கள் என்று சொல்லப்படுபவை – சிங்கங்கள், யானைகள், தீ, பாம்புகள், கொள்ளைக்காரர்கள், சிறைவாசம், கப்பல் கடலில் மூழ்குதல், மனிதர்களைத் திண்ணும் பிசாசுகள். இது என்ன லிஸ்ட் என்று நமக்கு தற்போதைய காலத்தில் தோன்றலாம். ஆனால், பழைய காலத்தில் நாடு விட்டு இன்னொரு நாட்டுக்குப் போகும் பயணிகள் சந்தித்த பொதுவான இடர்களாக இவை இருந்திருக்கலாம். சாதுக்கள் மற்றும் யாத்திரிகள் மட்டுமில்லாமல் வணிகர்களும் வியாபாரிகளும் கடல் கடந்து தூர தேசப் பயணம் மேற்கொள்வது அதிகமாகத் தொடங்கியது. இத்தகையோராலேயே தாரா வழிபாடு எல்லா திசைகளிலும் பரவத்தொடங்கியது.

சிங்கத்திடம் சிக்கியோர் அல்லது கடற்பிரயாணம் மேற்கொண்டு கடலில் மூழ்கியோர் தாராவின் நாமத்தை பக்தியுடன் உச்சரித்தலும் உடன் அவர்களெல்லாம் மின்னல் வேகத்தில் தாராவால் காக்கப்ப்டுவதும் என்று திபெத்தில் பல கதைகள் வழங்கப்படுகின்றன. திபெத்தில் சிங்கங்கள் இல்லை. திபெத்திய கலைஞர்கள் சித்தரிக்கும் சிங்கங்கள் இயற்கையான தோற்றம் கொண்டதாகக்கூட இருப்பதில்லை. திபெத்திய சிங்க ஓவியங்களைப் பார்த்தால் ஓவியர் சிங்கத்தைப் பார்த்ததேயில்லை என்று தான் நமக்குத் தோன்றும். திபெத்தில் யானைகளைப் பார்ப்பதும் அரிது. திபெத் கடலால் சூழப்பட்டிருக்கும் நாடல்ல. யாரந்தப் பிசாசுகள்? அவைகள் எதைக் குறிக்கின்றன? திபெத்திய ஓவியக்கலைகளில் இந்த பயங்கள் ஏன் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன? ஓவியர்களின் படைப்புகளில் ஏதேனும் குறிப்பு கிடைக்குமா? பிசாசுகள் சாதுக்களைத் தாக்குவது போலவே எல்லா ஓவியங்களிலும் சித்தரிக்கப்படுகின்றன. முழுநேரமும் உண்மையைத் தேடுவோரின் குறியீடாக சாதுவின் உருவத்தைக் கொள்ள வேண்டும். மற்ற பயங்கள் சாதுக்களையும் பாமரர்களையும் பீடிக்கும். ஆனால் பிசாசுகள் சாதுவையோ சாதுக்களின் குழுக்களையோ தாக்குவதாகவே அனைத்து கதைகளிலும் காட்டப்படுகிறது. முதலாம் தலாய் லாமா (இப்போதிருப்பவர் பதினான்காவது) தனது தாரா துதியில் தெளிவாக விளக்குகிறார் :

“இருண்ட அறியாமையின் வெளியில் திரியும் அவைகள்
வாய்மையைத் தேடுவோருக்கு கடுந்துன்பத்தை விளைவிக்கும்.
விடுதலைக்கிடையூறாக மரண ஆபத்தை தோற்றுவிக்கும்
சந்தேகம் எனும் பிசாசுகள் – இந்த பயத்திலிருந்து எம்மைக் காப்பாற்று”

சிங்கத்தின் கருவம், மயக்கமெனும் யானை, கோபத்தீ, பொறாமைப் பாம்புகள், பிழையான கருத்துகள் எனும் திருடர்கள், பேராசைச் சங்கிலி, பற்றின் வெள்ளம், சந்தேகப் பிசாசுகள் – எட்டு பெரும் பயங்கள் ஆன்மீக ஆபத்துகளையும் சாதனாவுக்கான தடைகளை குறிப்பதாக புரிந்து கொள்ள முடியும்.

+++++

துணுக்கு : (1) மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலையின் முற்பிறப்பை மணிமேகலா தெய்வம் (தாரையின் ஒரு வடிவம்?) அறியத்தருகிறது. மணிமேகலை முற்பிறப்பில் இலக்குமி என்ற பெயருடன் பிறந்தாள். இலக்குமிக்கு இரு தமக்கையர் இருந்தனர். அவர்களின் பெயர் – தாரை & வீரை. தாரையே அடுத்த ஜென்மத்தில் மணிமேகலையின் தாயார் மாதவி ; வீரையே மணிமேகலையின் செவிலித்தாயாக அன்பு செலுத்தும் உற்ற தோழி சுதமதி (2) மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சிந்தா தேவி என்று பௌத்த பெண் தெய்வங்கள் போதிசத்துவப் பாதையின் வழி நடக்கும் மணிமேகலைக்கு உற்ற துணையாய் பாதுகாப்பாய் காப்பியம் நெடுக வருகின்றன.

(தர்மாசாரி பூர்ணா என்பவர் Western Buddhist Review என்ற பத்திரிக்கையில் எழுதிய Tara : Her Origins and Development என்ற கட்டுரையில் பதிந்த பல தகவல்களை இவ்விடுகையில் பயன்படுத்தியிருக்கிறேன். Thanks to Dharmachari Purna)

Khadiravani Tara (Green Tara) 2nd Regnal Year of Ramapala, Circa 10th Century AD, Bihar, (Indian_Museum, Kolkata)

Khadiravani Tara (Green Tara) 2nd Regnal Year of Ramapala, Circa 10th Century AD, Bihar (Indian Museum, Kolkata)



புத்தவசனம்

$
0
0

pali1

புத்தர் சொன்ன சொற்களிலேயே அவரின் அறவுரைகளைக் கேட்டால்….புத்தர் எந்த மொழியில் பேசியிருப்பார்? இக்கேள்விக்கான உறுதியான விடை பற்றிய முடிவை இன்னும் வரலாற்றாளர்கள் எட்டவில்லை. கிழக்கத்திய மகதி பிராகிருதமோ அல்லது கோசல நாட்டில் பேசப்பட்டு வந்த மொழியிலோ அவர் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கிராம நாகரீகங்களின் முடிவில், நாணயங்கள் புழக்கத்துக்கு வந்த புதிதில், ஆடு-மாடு மேய்த்து சிறிய அளவிலான தோட்டப்பயிர் செய்து வாழ்ந்த பழங்குடி மக்கள் வாழ்க்கையை விடுத்து செல்வச் செழிப்பான நகரங்களில் மக்கள் வசிக்கத் தொடங்கிய காலத்தில், வணிகத்தை மையப்படுத்திய முடியரசுகள் தோன்றத் தொடங்கியிருந்த சமயத்தில் புத்தர் தன் அறவுரைகளை சொல்லிக் கொண்டிருந்தார். கங்கைச் சமவெளியின் ஒவ்வொரு நகரங்களிலும் பல வருடங்களாக (புத்தர் பரிநிர்வாணம் அடைந்த போது அவருடைய வயது எண்பது) உலவித் திரிந்து சாதுக்களுக்கு வினய வழிமுறைகளை அறிவுறுத்தினார் ; அவரை மொய்த்த வண்ணம் இருந்த இல்லறவாசிகளிடம்  பேசினார் ; ஆர்வமுள்ளோர் தொடுக்கும் வினாக்களுக்கு விடையளித்தார் ; பல்வேறு வர்க்க மக்களிடமும் உரையாடினார். நமக்கு கிடைத்திருக்கும் அவருடைய போதனைப் பதிவுகள் அவருடைய சொந்த எழுதுகோலிலினால் எழுதப்பட்டவை அல்ல ; அவருடைய பேச்சுகளைக் கேட்டவர்கள் அவர் பேசியதை பேசியவாறே படியெடுத்தவைகளுமல்ல. புத்தரின் பரிநிர்வாணத்துக்குப் பிறகு நடந்த புத்தசபைகளில் தொகுக்கப்பட்ட புத்தரின் சொற்பொழிவுகளிலிருந்தே நம்மிடையே இன்றிருக்கும் புத்தவசனங்கள் பெறப்பட்டன. வாய் வழி மரபாக புத்தரின் வசனங்கள் முன்னூறு வருடங்களுக்கு மேலாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. புத்த சபைகளில் தொகுக்கப்பட்ட போதனைகள் புத்தர் சொன்ன வார்த்தை மாறாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று எண்ண சாத்தியமில்லை. தம்மை அண்டிய மக்களின் மனப்பக்குவத்திற்கேற்றவாறு புத்தர் உரையாற்றியிருக்கக் கூடும். அவரின் சொற்பொழிவுகளை தரப்படுத்தப்பட்ட உரைகளாகப் பதிவு செய்யும் போது “edit” பண்ணப்படாமல் இருந்திருக்ககூடுமா? வாய் வழிப் பாரம்பரியம் வாயிலாக பாதுகாக்கப்படுவதற்கேற்ற பொருத்தமான முறையில் போதனைகளை வடிவமைப்பதற்கு, புத்தசபையில் கூடிய சாதுக்கள் போதனைகளை தொகுப்பாக்கம் செய்து, வாய் வழிப் பாரம்பரியத்தின் அடிப்படைக் கூறுகளான – கேட்டல், நினைவில் தக்கவைத்தல், ஓதுதல், மனனம் செய்தல், ஒப்பித்தல் – இவ்வைந்துக்கும் வழிவகை செய்யுமாறு “edit” செய்திருப்பார்கள். இந்த வழிவகையில் எளிமைப்படுத்துதலையும் தரப்படுத்துதலையும் அவர்கள் தவிர்த்திருக்க முடியாது.

புத்தர் வாழ்ந்த நாட்களிலேயே அவரின் உரைகள் இலக்கிய வகைமைகளின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டன :-

  1.  சுத்தா (Sutta) – உரைநடை வடிவிலான போதனை
  2.  கெய்யா (Geyya) – உரைநடையும் செய்யுளும் கலந்த வடிவம்
  3.  வெய்யாகரணா (Veyyakaranaa) – வினா-விடை வடிவம்
  4.  காதா (Gatha) – செய்யுள் வடிவம்
  5.  உதானா (Udana) – உரைநடை அல்லது செய்யுள் வடிவிலான புத்தரின்   சிறப்பு வாசகங்கள். (பாலி அமைப்பில் உள்ள குத்தக நிகாயத்தின் படைப்பு ஒன்றின் பெயரும் இதுவே).
  6.  இதிவுத்தகா (Itivuttaka) – “thus it is said” என்ற சொற்களின் அறிமுகத்துடன் தொடங்கும் போதனைகள். பாலி அமைப்பின் குத்தகநிகாயத்தின் இதே தலைப்பில் அமைந்திருக்கும் ஒரு படைப்பில் இவைகள் அடங்கியுள்ளன. சமஸ்கிருத அமைப்பில் சீடர்களின் முந்தைய ஜென்மங்களின் கதைகளைக் கொண்ட வகைமையாக இது “இதிவ்ரித்திகா” என்று வழங்கப்படுகிறது.
  7.  ஜாதகா (Jataka) – புத்தரின் முந்தைய ஜென்ம வாழ்க்கையைப் பேசும் வகைமை.
  8.  அப்புததம்மா (Abbhutadhamma) –  அற்புதங்களும் இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளும் அடங்கிய கதைகள்.
  9. வேதல்ல (Vedalla) – “நுண்ணிய பகுப்பாய்வு” என்ற பொருள் கொண்ட இந்த வகைமை சமய இலக்கணம் மற்றும் மறைக்கல்வியை சம்பாஷணை வடிவில் அளிக்கிறது. சமஸ்கிருத அமைப்பில் இது “வைபுல்ய” என்று குறிக்கப்படுகிறது. முக்கியமான பல மகாயான சூத்திரங்கள் – லோட்டஸ் சூத்ரா, அஷ்டசஹஸ்ரிக-பிரஜ்னபாரமித சூத்திரம், லங்காவதார சூத்திரம் முதலானவை வைபுல்ய வகைமையைச் சார்ந்தவை.

மேற்கண்ட ஒன்பது வகையோடு மூன்று இதர வகைகளும் சமஸ்கிருத அமைப்பில் காணப்படுகின்றன.

  •  நிதானா (”Cause”) – அறிமுகப்பகுதி மற்றும் வரலாற்றுச் சொல்லாடலைக் குறிக்கும் வகைமை
  • அவதானா (”Noble Deeds”) – மக்களின் முந்தைய பிறப்புகளில் புத்தர் புரிந்த நல்வினைகளும் அதன் விளைவாக அவர்களின் நிகழ் பிறப்பில் நிகழும் நல்விளைவுகளும்
  •  உபதேசா (”instructions”)

புத்தரின் பரிநிர்வாணத்துக்குப் பிறகு பழைய வகைகள் அடங்கிய அமைப்பு பெருந்தொகுதியாக ஒன்றிணைக்கப்பட்டு தேரவாத பாரம்பரியத்தில் நிகாயங்கள் என்று அழைக்கப்படலாயின.  மகாயான பௌத்தத்தின் சமஸ்கிருத அமைப்பில் பெருந்தொகுதி ஆகமங்கள் என்றழைக்கப்படுகின்றன.

பாலி நெறிமுறை
துரதிர்ஷ்டவசமாக, துவக்க கால மைய நீரோட்ட இந்திய பௌத்தப் பிரிவுகளின் நெறிமுறைத் தொகுதி நூல்கள் இன்று தொலைந்து போய்விட்டன. வட இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்புகள் பதினொன்றாம், பனிரெண்டாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த போது நடந்த அழிவுகளுக்குப் பிறகு பௌத்தம் தன் அன்னை நாட்டில் இல்லாமல் போயிற்று. ஆரம்ப கால பௌத்தப் பிரிவுகளின் தொகுதிகளில் இன்றும் நிலைத்திருக்கக் கூடிய ஒரே தொகுதி – பாலி என்று இன்று நாம் அறிந்திருக்கக் கூடிய மொழியில் இருக்கும் தொகுதியாகும். புராதன தேரவாத பௌத்தப் பிரிவுக்கான தொகுதியே அது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட தேரவாத பௌத்தம் அதன் தாய்நாட்டில் பௌத்தத்திற்கு இழைக்கப்பட்ட பேரழிவிலிருந்து தப்பித்தது. ஏறக்குறைய அதே சமயத்தில் தேரவாதம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கெல்லாம் பரவி, பிராந்தியத்தின் முக்கிய சமயமாகத் தழைக்கவும் பௌத்தத்தின் இலங்கை விஜயமே காரணமாய் அமைந்தது.

ஒரே தொகுதியாக பாலி நெறிமுறையின் எல்லாப் படைப்புகளும் ஒன்றிணைந்திருக்கின்றன என்பதாலேயே எல்லா படைப்புகளும் ஒரே சமயத்தில் இயற்றப்பட்டன என்று கருதிவிட முடியாது. மிகப் பழைமையான மொழியில் பாலி நிகாயங்களின் சில பகுதிகள் இருக்கின்றன என்பதாலேயே பிற பௌத்தப் பிரிவுகளின் நெறிமுறைத் தொகுதிகளை விட பழைமையானவை என்றும் சொல்லிவிட முடியாது. பிற பௌத்த பிரிவுகளின் பெரும்பாலான ஆகமங்கள் சீன மொழிபெயர்ப்புகளிலும் திபெத்திய மொழிபெயர்ப்புகளிலும் இன்றும் காணப்படுகின்றன. ஆனாலும், பாலி நெறிமுறைத் தொகுதியை மூன்று காரணங்களின் அடிப்படையில் சிறப்பானது என்று நாம் சொல்லலாம்.

ஒன்று, ஒற்றை பௌத்தப் பிரிவுக்குச் சொந்தமான எல்லா நெறிமுறைகளின் முழுமைத் தொகுதி என்பதால் ; நெறிமுறையின் பகுதிகள் வெவ்வேறு கால இடைவெளிகளில் இயற்றப்பட்டவை என்று கொண்டாலும், ஒற்றைப் பிரிவுடனான ஒழுங்கமைவு நிகாயங்களுக்கு ஒரு சீரமைப்பை நல்குகிறது. வெவ்வேறு காலங்களில் எழுந்த பகுதிகளுக்கிடையிலும் ஒரே சீரான உள்ளடக்கத்தை நம்மால் காண முடியும். நான்கு நிகாயங்களுக்கிடையிலும், ஐந்தாவது நிகாயத்தின் பழைய பகுதிகளுக்கிடையே காணப்படும் சீரான உள்ளடக்கம் பௌத்த இலக்கியத்தின் மிகப் பழைமையான அடுக்கை நாம் கண்டடைந்திருக்கிறோம் என்ற நம்பிக்கையை நமக்களிக்கிறது.

இரண்டு, முழுத் தொகுதியும் மத்திய இந்தோ-ஐரோப்பிய மொழியில் பேணிக் காக்கப்பட்டிருக்கிறது. இம்மொழி புத்தர் பேசியிருக்கக் கூடிய மொழி அல்லது பல்வேறு பிராந்திய வட்டார வழக்குகளுக்கு நெருக்கமானதாகக் கருதப்படக்கூடியது. நாம் இம்மொழியை பாலி என்றழைக்கிறோம். ஆனால் இப்பெயர் ஒரு தவறான புரிதலின் மூலமாக எழுந்திருக்கிறது. “பாலி” என்ற சொல்லின் அர்த்தம் “உரைமூலம்” என்பதாகும் ; இது “உரை” என்பதிலிருந்து வேறுபட்டது. உரைமூலம் பேணிக் காக்கப்பட்டு வந்த மொழியை “பாலிபாஷா” அதாவது “உரைமூலங்களின் மொழி” என்று குறிப்பிடுகின்றனர். ஒரு கட்டத்தில் இந்தச் சொற்றொடர் “பாலி மொழி” என்று தவறாகப் பொருள் கொள்ளப்பட்டது. இந்த தவறான கருத்து காலப் போக்கில் நிலைத்துவிட்டது. கி மு மூன்றாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பிராகிருத வட்டார மொழி வழக்குகளின் சிறப்பம்சங்களை கொண்ட அதே சமயம் ஒரு பகுதி சமஸ்கிருதமாக்கலுக்கு உள்ளாகி வந்த கலப்பு மொழி இதுவென்று அறிஞர்கள் கருதுகின்றனர். வாஸ்தவத்தில் புத்தர் பேசிய மொழியாக இது இல்லாமல் இருந்தாலும், அவர் பேசிய மொழியுடன் மிகவும் நெருங்கியதெனக் கருதப்படக் கூடிய மத்திய இந்திய-ஐரோப்பிய மொழியினத்தின் அம்சமாக “பாலிபாஷையை” நாம் கொள்ளலாம். எனவே, புத்தர் எண்ண-உலகத்தின்பாற் பட்ட சொற்கள் தாம் இவை ; அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய கருத்தியல்களில் பயன்படுத்தப்பட்ட சொற்களை இப்பாலி நெறிமுறைகள் கொண்டிருக்கின்றன என்பது இவற்றின் இரண்டாவது சிறப்பம்சம்.

மூன்று, அழிந்து போன பிற பௌத்தப் பிரிவுகளின் (உதாரணம், சர்வாஸ்திவாத பௌத்தம்) இன்னும் மிஞ்சியிருக்கும் நெறிமுறைகள் கல்வி ஆர்வத்தின்பாற் பட்டதாக சுருங்கிவிட்டன. ஆனால் பாலி நெறிமுறை பல லட்சம் பேர் வணங்கிப் பின்பற்ற நினைக்கும் நெறிமுறையாக இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

பாலி நெறிமுறை பொதுவாக “திபிடகம்” என்று அழைக்கப்படுகிறது. திபிடகம் என்றால் “மூன்று கூடைகள்” அல்லது “மூன்று தொகுப்புகள்” என்று பொருள். இந்த மூவகைப்பாடு தேரவாதத்துக்கு மட்டுமே உரித்தான தனியம்சம் அல்ல. பௌத்த நெறிமுறை நூல்களை மூன்றாக தொகைப்படுத்துதல் இந்திய பௌத்தப் பிரிவுகளின் பொது அம்சமாக இருந்தது. சீன மொழிபெயர்ப்பாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வரும் ஆகமங்களை சீன திரிபீடகம் என்றே அழைக்கிறார்கள்.

பாலி நெறிமுறையின் மூன்று பிரிவுகள் :-

  1. வினய பிடகம் – சாதுக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் ; இவ்விதிமுறைகள் பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கானவை. ஒத்திசைவான மடாலய ஒழுங்கை பேணுவதற்கான விதிமுறைகள் இவை.
  2. சுத்த பிடகம் – புத்தரின் அவருடைய முக்கிய சீடர்களினுடைய உரைகளின் தொகுப்பு, உத்வேகமூட்டும் செய்யுள் வடிவ படைப்புகள். செய்யுள் வடிவக் கதைகள், மற்றும் விளக்கங்கள் தரும் இயல்பினதான படைப்புகள்.
  3. அபிதம்ம பிடகம் – பௌத்த தத்துவங்களின் தொகுப்பு. புத்தரின் போதனைகளை கடுமையான மெய்யியல் மற்றும் அமைப்பியல் தருக்கங்களுக்கு உள்ளாக்கும் ஏழு ஆய்வுப் படைப்புகளின் தொகுப்பு.

மற்ற இரு பிடகங்களுடன் ஒப்பு நோக்கும் போது, அபிதம்ம பிடகம் பௌத்த சிந்தனையின் பரிமாண வளர்ச்சியில் எழுந்த பிற்கால விளைவே. பழைய போதனைகளை ஒழுங்கு படுத்தும் தேரவாதத்தின் முயற்சியே பாலி பதிப்பு. பிற ஆரம்ப கால பௌத்தப் பிரிவுகளும் தமக்கேயான அபிதம்மத்தை கொண்டிருந்தன. பாலி பதிப்பைப் போல, சர்வாஸ்திவாத பௌத்தப் பிரிவின் நெறிமுறை நூல்கள் மட்டுமே இன்றளவும் முழுமையாக உள்ளன. அவற்றின் மூலம் சமஸ்கிருதம். ஆனால் இன்று அவைகள் சீன மொழிபெயர்ப்பாக நமக்கு கிடைக்கின்றன. தேரவாத பௌத்தத்தின் நெறிமுறையுடன் உருவாக்கத்திலும் மெய்யியலிலும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுகின்றன.

புத்தரின் சொற்பொழிவுகளையும் உரையாடல்களையும் பதிவு செய்யும் சுத்தபிடகம் நிகாயங்கள் எனப்படும் ஐந்து பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. நிகாயங்களின் உரையாசிரியர்கள், வடக்கு பௌத்தத்தின் (”மகாயானம்”) சகாக்கள் போல,  அவற்றை ஆகமங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

நான்கு முக்கிய நிகாயங்கள் :-

  1. திக்க நிகாயம் : நீண்ட உரைகளின் தொகுப்பு – மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட 34 சுத்தங்கள்
  2. மஜ்ஜிம நிகாயம் : நடு அளவினதான உரைகளின் தொகுப்பு – மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட 152 சுத்தங்கள்
  3. சம்யுத்த நிகாயம் : Connected Discourses – இன் தொகுப்பு. 56 அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டு சம்யுத்தங்கள் என்றழைக்கப்படும் மூவாயிரம் குறுகிய சுத்தங்கள்.
  4. அங்குத்தர நிகாயம் : Numerical Discourses – நிபாதங்கள் எனும் பதினோரு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட 2400 குறுகிய சுத்தங்கள்.

மேற்சொன்ன நிகாயங்களைத் தவிர குத்தக நிகாயம் என்னும் ஐந்தாவது நிகாயத்தையும் சுத்த பிடகம் உள்ளடக்கியிருக்கிறது. இதன் அர்த்தம் சின்ன தொகுதி. பெயர் தான் சின்ன தொகுதி. ஆனால் பெரிய பெரிய படைப்புகளையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் நிகாயம் இது – முழுக்க செய்யுள் வடிவில் இருக்கும் தம்மபதம், தேரகாதா மற்றும் தேரிகாதா, உரைநடை மற்றும் செய்யுள் கலந்த சுத்தநிபாதம், உதானா, மற்றும் இதிவுத்தகா என்று முக்கிய, மிகப் பழமையான படைப்புகள் குத்தக நிகாயத்தில் உள்ளன.

நான்கு நிகாயங்களுக்கிணையான நான்கு ஆகமங்கள் சீன திரிபீடகத்திலும் உண்டு ; ஆரம்பப் பௌத்த பிரிவுகளிலிருந்து குறிப்பிடத் தக்க வேறுபாடுகள் சீன திரிபிடகத்தில் காணப்படுகிறது.

நான்கு நிகாயங்களுக்கிணையான நான்கு ஆகமங்கள் :-

தீர்க்காகமம் – தர்மகுப்தக பௌத்தப் பிரிவிலிருந்து முளைத்திருக்கலாம் ; பிராகிருத மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

மத்யமாகமம் – சர்வாஸ்திவாத பௌத்தத்திலிருந்து முளைத்தது. சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

சம்யுக்தாகமம் – சர்வாஸ்திவாத பௌத்தத்திலிருந்து முளைத்தது. சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

எகோத்தராகமம் – மகாசங்கிக பௌத்தப் பள்ளியிலிருந்து கிளைத்தது. பிராகிருதமும் சமஸ்கிருதமும் கலந்து கலப்பு மொழியிலிருந்து சீனத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

நான்கு நிகாயங்களின் சூத்திரங்கள் சீன திரிபிடகத்திலும் காணப்படுகின்றன, சிலபல வித்தியாசங்களுடன். குத்தகநிகாயத்தின் தனிப்படைப்புகளின் மொழிபெயர்ப்பும் சீன திரிபிடகத்தில் உள்ளது. தம்மபதத்தின் இரண்டு மொழிபெயர்ப்புகள் சீன திரிபிடகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தனிப்படைப்பாக சுத்தநிபாதம் சீன திரிபிடகத்தில் சேர்க்கப்படவில்லை.

நூல் : In the Buddha’s Words : an anthology of Discourses from the Pali Canon – Edited and introduced by Bhikku Bodhi – Wisdom Publications, Boston, 2005

CanonPicture


குரங்கு ராஜன்*

$
0
0
சாஞ்சி ஸ்தூபத்தின் மேற்கு தோரண வாயிலில் “மகாகபி ஜாதகம்” சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் தொடங்கி, பின்னர் கி மு முதலாம் நூற்றாண்டில் சுங்க வம்ச காலத்தில் தொடரப்பட்டு, இறுதியில் கி பி முதலாம் நூற்றாண்டில் ஆந்திர வம்ச காலம் வரை சாஞ்சி வளாகத்தில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. சாஞ்வி வளாக நிர்மாணம் கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருந்தது

சாஞ்சி ஸ்தூபத்தின் மேற்கு தோரண வாயிலில் “மகாகபி ஜாதகம்” சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கி மு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் தொடங்கி, பின்னர் கி மு முதலாம் நூற்றாண்டில் சுங்க வம்ச காலத்தில் தொடரப்பட்டு, இறுதியில் கி பி முதலாம் நூற்றாண்டில் ஆந்திர வம்ச காலம் வரை சாஞ்சி வளாகத்தில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. சாஞ்சி வளாக நிர்மாணம் கிட்டத்தட்ட நானூறு வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருந்தது

ஒரு முறை ஜெதாவனத்தில் சில பிக்குகள் புத்தர் தம் உறவினர்களுக்குச் செய்த நன்மைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த புத்தர் அவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டறிந்தார். ”ததாகதர் தம் உறவினர்களுக்கு நன்மைகள் செய்வதொன்றும் இது முதல் முறையல்ல” என்று சொன்ன புத்தர் இறந்த காலக் கதையொன்றைச் சொல்லத் தொடங்கினார்.

+++++

பல வித தாவரவினங்களும் விலங்கினங்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழும் அடர்ந்த காட்டுப்பகுதியில் அற்புதக் கனி மரம் ஒன்று இருந்தது. பனங்கொட்டையைவிட அளவில் பெரிதான பழங்களைக் காய்த்தது அந்த மரம். பழத்தின் சுகந்தம் மிக அபூர்வம். அதன் சுவை அதி மதுரம். அம்மரத்தில் காய்த்த பழம் போன்று உலகில் யாரும் எங்கும் கண்டிருக்க முடியாது.

அதே மரத்தில் எண்ணற்ற குரங்குகள் வாசம் செய்துவந்தன. போதிசத்துவர் குரங்குகளின் ராஜாவாக அந்த மரத்தில் பிறந்தார். குரங்கு ராஜா அதன் குரங்குப் பிரஜைகளை விட வளர்ச்சியில் ஆஜானுபாகுவாக இருந்தது. தன் பிரஜைகளின் மேல் பாசமும் பரிவும் கொண்டிருந்தது.

மரத்தின் அருகில் ஓடும் ஆற்றின் மேலாக மரக்கிளை ஒன்று வளரத் தொடங்கியதை ஒரு நாள் குரங்கு ராஜா கவனித்தது. அது அவருள் ஜாக்கிரதை உணர்வை விழித்தெழ வைத்தது. கிளையிலிருந்து பழுத்து உதிரும் பழம் ஆற்றின் மேல் விழலாம். ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பழம் காசிமாநகரை அடையலாம். அப்பழத்தை உண்ணக் கிடைத்த மனிதர்கள் பழம் எங்கு விளைகிறது என்று கண்டு பிடிக்கும் ஆர்வத்தில் இங்கு வந்து விடுவார்கள். அவர்களால் மரம் அழிபட்டு குரங்குகள் பாதிப்புக்குள்ளாகும். அந்த குறிப்பிட்ட கிளையில் ஒரு கனியும் பழுக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு குரங்குகளுக்கு கட்டளையிட்டது குரங்கு ராஜா. ராஜாவின் ஆணையின் படி ஒரு அந்தக் கிளையில் ஒரு காயும் பழுக்கா வண்ணம் குரங்குகள் பார்த்துக் கொண்டன, எனினும் ஒரு பழம் மட்டும் அவற்றின் கண்களுக்குப் படவில்லை. சில நாட்களில் அந்த ஒற்றைக் கனிக்குள் நிறம், சுவை, மணம் மற்றும் மிருதுத்தன்மை கூடி  நன்கு பழுத்து, அதன் காம்பிலிருந்து விடுபட்டு ஆற்று நீரோட்டத்தில் விழுந்தது. அரசனின் ஆட்கள் மீன்களுக்காக விரித்து வைத்திருந்த வலைக்குள் சிக்கிக் கொண்டது. பழம் வலையில் சிக்கிக் கொண்ட இடத்துக்கு மிக அருகில் அரசன் பெண்டிருடன் சல்லாபம் புரிந்து கொண்டிருந்தான். பழத்தின் அசாதாரணமான வாசம் அவ்விடமெங்கும் பரவியது. பெண்கள் அணிந்திருந்த வாசனை திரவியங்கள் வாசனை போலில்லை அது. அவர்கள் சூடியிருந்த பூமாலைகளிலிருந்து கமழும் வாசனையல்ல அது. அரசன் அருந்தும் மதுபானங்களில் இருந்து எழும் வாசனையுமல்ல அது.  அங்கு குழுமியிருந்த அனைவரும் பழத்தின் வாசனையை முகர்ந்து மதி மயங்கிப் போயினர். அனைத்து வாசனையும் தம் நாசிக்குள் வர வேண்டும் என்று ஒவ்வொரு பெண்களும் சுவாசத்தை இழுத்தவண்ணம் இருந்தனர். அப்போது அவர்களின் பாதி கண்கள் மூடின. மன்னனும் பழவாசனையில் மயங்கிப் போனான். வாசனையின் மூலம் எதுவென அறியும் ஆவலில் அனைவரும் தம் விழிகளை உருட்டி நாலா திசையிலும் தேடினர். விரைவிலேயே வலையில் சிக்கிய பழத்தை கண்டு பிடித்தனர். அரசன் சில வல்லுனர்களை அழைத்து பரிசோதித்து அது விஷப்பழமல்ல என்று உறுதி செய்து கொண்டான்.  நிறம், வாசனை, அளவு, வடிவம் – எல்லா அம்சங்களிலும் வித்தியாசமானதாக இருந்த அந்த கனியை அரசனே புசித்தான். பிறகு, “உலகின் வேறெந்த வகைக் கனியும் சுவையில் இக்கனியுடன் போட்டி போட முடியாது” என்று அரசன் குறிப்பிட்டான். ஆற்று வழியே பயணம் செய்து இக்கனியின் மரத்தை கண்டு பிடிக்குமாறு காவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மிக விரைவிலேயே தீஞ்சுவைக் கனிகள் பூத்துக் குலுங்கிய ஆற்றோர மரம் கண்டு பிடிக்கப்பட்டது. கனிகளைச் சுவைத்து மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குக் கூட்டத்தைக் கண்டதும் மனிதர்களால் பொறுக்க முடியவில்லை. குரங்களின் மேல் அம்புகளை எய்தனர்.

காவலர்கள் மரத்தை அணுகுவதை முன்னரே கவனித்து விட்ட குரங்கு ராஜா ஒரு குன்றின் உச்சியை அடைந்தது. பிற குரங்குகள் பாதுகாப்பான அந்த உச்சியை அடைய முடியாது என்பதைப் புரிந்து கொண்ட குரங்கு ராஜா, வேர்ப்பாகம் பலமாக இருந்த ஓர் உயரமான மூங்கிலைப் பிடித்துக் கொண்டு குரங்குகள் வசித்த மரத்தை நோக்கி குதித்தது. உச்சியை எளிதில் அடையும் படியாக மூங்கில் வில்லாக வளைந்தது. குரங்கு ராஜா பிற குரங்குகளை அழைத்து தன் உடலைப் பாலமாக பயன் படுத்தி மூங்கிலின் மேல் ஏறி குன்றின் உச்சியை அடைந்து விடுமாறு சொன்னது. உடனடியாக சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு குரங்குகளெல்லாம் குன்றின் மீது ஏறின. காவலர்களின் அம்புகள் வந்து விழாத குன்று உச்சியை சென்றடைந்தன. ஆனால் சகாக்களின் கால்கள் மிதித்து மோசமாக காயமுற்ற குரங்கு ராஜாவோ மூங்கிலை கை விட்டு சுருண்டு விழுந்தது. சற்றுத் தள்ளி நின்று குரங்குகள் தப்பித்த விதத்தையும் குரங்கு ராஜாவின் அவல நிலையையும் கண்ணுற்றவாறிருந்தான் அரசன். தனது குரங்குப் பிரஜைகளைக் காப்பதற்காக நுண்ணறிவு, தைரியம், வீரம் மற்றும் தியாகம் போன்ற குணங்களின் எடுத்துக்காட்டாய் குரங்கு ராஜா புரிந்த சாகசம் மன்னன் மனதை நெகிழ வைத்தது.

மயக்கத்தில் இருந்த குரங்கு ராஜாவை பத்திரமாக மரத்திலிருந்து இறக்கி, ஒரு மெத்தையில்  படுக்க வைக்குமாறு தன் காவலர்களுக்கு அரசன் கட்டளையிட்டான். குரங்கு ராஜாவுக்கு முதலுதவி செய்ய மருத்துவரொருவர் அழைக்கப்பட்டார்.

குரங்கு ராஜா கண் விழித்தவுடன் அதனருகே நின்றிருந்த அரசன் தம்முடைய பிரஜைகளைக் காப்பதற்காக சொந்தவுயிரைப் பணயம் வைத்த காரணத்தை வினவினான்.  அவனைப் பொறுத்தவரை ஆபத்துக் காலத்தில் பிரஜைகள் தான் அரசனைக் காக்க வேண்டும் அல்லது தியாகம் செய்ய வேண்டும். அரசனுக்குப் பணிவிடைகள் செய்யத் தானே சாதாரண ஜனங்கள் இருக்கிறார்கள் என்று அரசன் எண்ணினான்.

ஞானம் ததும்ப குரங்கு ராஜா சொன்னது :

அரசனே! என் உடல் நொறுங்கிவிட்டது
ஆனால் என் மனம் தெளிவாயுள்ளது
வெகுநாட்களாய் யாரிடம் அரசதிகாரத்தை காட்டினேனோ
அவர்களைத் தான் நான் தூக்கி விட்டேன்

அரசன் புகழ்ந்து சில வார்த்தைகளைச் சொல்லு முன்னமே குரங்கு ராஜாவின் உயிர் பிரிந்தது. குரங்கிற்கு ராஜமரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அரசனின் அமைச்சர்கள் குரங்கு ராஜாவின் இறுதிச் சடங்கிற்கென நூறு மாட்டு வண்டி நிறைய மரக்கட்டைகள் அனுப்பி வைத்தார்கள். சடங்குகள் முடிந்த பின்னர் குரங்கு ராஜாவின் எலும்புக்கூட்டை அமைச்சர்கள் அரசனிடம் எடுத்துச் சென்றனர். குரங்கு ராஜாவை எரித்த இடத்தில் அரசன் ஒரு கோயில் எழுப்பினான் ; கோவிலில் தீபமும் தூபமும் ஏற்றப்பட்டன. குரங்கு ராஜாவின் தலையெலும்புக் கூட்டிற்கு தங்க முலாம் பூசி ஓர் ஈட்டியில் பதித்து ஊர்வலங்களில் ஏந்திச் சென்றான். அரண்மனை வாசலில் அதை வைத்து, குரங்கு ராஜாவுக்கு மலர்களால் ஊதுபத்திச் சுடரால் அஞ்சலி செலுத்தினான். தன் வாழ்நாள் முழுதும் எலும்புக் கூட்டை நினைவுச் சின்னமாகக் கருதி வணங்கினான். குரங்கு ராஜனின் வழிப்படி மக்களுக்கு நல்லாட்சி வழங்கி சுவர்க்க பதவிக்கு தகுதி பெற்றான்.

+++++

கதையைச் சொன்ன பிறகு புத்தர் கதையின் பாத்திரங்களை நிகழ் காலத்தில் அடையாளம் காட்டினார். “அந்தப் பிறப்பில் அரசனாக இருந்தவர் ஆனந்தர் ; இங்கு கூடியிருக்கும் பிக்குகளின் குழு குரங்குகளின் பரிவாரமாக இருந்தது. நான் குரங்கு ராஜாவாக இருந்தேன்”

* – பாலி மூலத்தில் இதன் தலைப்பு – மகாகபி ஜாதகம்


ஸ்ராவஸ்தியில் நிகழ்த்திய அற்புதங்கள்

$
0
0
உலகப்புகழ் பெற்ற காந்தார சிற்பம் - புத்தர் ஸ்ராவஸ்தியில் புரிந்த இரட்டை அற்புதம் - 2 / 3ம் நூற்றாண்டு

உலகப்புகழ் பெற்ற காந்தார சிற்பம் – புத்தர் ஸ்ராவஸ்தியில் புரிந்த இரட்டை அற்புதம் –                 2 / 3ம் நூற்றாண்டு

பேசிப் பார், விவாதம் செய்து பார், மிரட்டிப் பார்…எல்லாம் பார்த்தாயிற்று. ஒன்றும் ஆகவில்லை. புத்தரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.  இரு வல்லரசுகளின் சக்கரவர்த்திகள் – மகத மன்னன் பிம்பிசாரன் மற்றும் கோசல நாட்டு மன்னன் பிரசேனஜித்தன் – இருவருமே புத்தரின் மீது அளவற்ற மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தனர். புத்தருக்கும் சங்கத்திற்கும் நல்லாதரவை வழங்கி வந்தனர். புத்தர் காலத்தில் நிலவிய பிற ஆறு சமயத்தின் தலைவர்களுக்கும் இது பொறாமையை ஏற்படுத்தியது. எப்படியாவது இரண்டு தேசத்துப் பேரரசர்களின் முன்னால் ‘புத்தர் ஒரு சக்தியும் இல்லாதவர் ; அவரால் தத்துவங்களையும் நீதிகளையும் பற்றிப் பேச மட்டுமே இயலும் ; மந்திர சக்திகள் ஏதும் இல்லாதவர் அவர் ; எனவே அரசர்கள் ஆதரவு தருமளவுக்கு அவ்வளவு முக்கியமானவரல்லர்’ என்று காட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டனர். மகத மன்னனிடம் சென்று புத்தரை மந்திர சக்திகளை நிரூபிக்கும் போட்டியில் பங்கு பெறச் செய்ய வைக்க வேண்டும் என்று விண்ணப்பித்தனர். பிம்பிசாரன் முதலில் அவர்களைக் கேலி செய்து திருப்பியனுப்பிவிட்டான். சமய குருக்கள் விடுவதாயில்லை. தொடர்ந்து மன்னனிடம் விண்ணப்பம் செய்த வண்ணமிருந்தனர். கடைசியில் பிம்பிசாரன் புத்தரிடம் பேசினான். மன்னன் சொல்வதைக் கேட்ட புத்தர் மறுதளிக்கவில்லை ; மாறாக ‘மந்திர வித்தைகளைச் செய்து காட்டும் தருணத்தை நானே தீர்மானிப்பேன்’ என்று ஒரு நிபந்தைனையை மட்டும் வைத்தார். பிம்பிசாரன் மந்திரப் போட்டிகளுக்கென்றே பிரத்யேகமான ஒரு மேடையைக் கட்டினான். புத்தர் மந்திர ஜாலங்கள் செய்யும் நாளை சீக்கிரமே அறிவிப்பார் என்று நம்பினார். ஆனால் புத்தரோ விரைவிலேயே ராஜகிருகத்திலிருந்து நீங்கி அண்டை நாடுகளின் நகரங்களுக்கு விஜயம் செய்யலானார். எதிர் மதங்களின் தலைவர்கள் புத்தர் விஜயம் செய்யும் நாடுகளின் அரசர்களையெல்லாம் அணுகி பிம்பிசாரனிடன் சொன்னது போலவே சொல்லி புத்தரிடம் கேட்கச் சொல்லித் தொந்தரவு செய்தனர். அரசர்களும் சமயத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி புத்தரிடம் மந்திர வித்தைப் போட்டியைப் பற்றி பேசுவார்கள். பிம்பிசாரனிடம் சொன்னது போலவே புத்தர் “அதற்கான தருணத்தை நானே முடிவு செய்வேன்” என்று சொல்லிவிடுவார்.

புத்தரின் வயது ஐம்பத்தியேழு ஆன போது மாற்று சமய ஆன்மீகத் தலைவர்களின் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார். அந்த சமயம் அவர் கோசல நாட்டில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அரசன் பிரசேனஜித்தன் ஏழு சிம்மாசனங்கள் கொண்ட ஒரு பெரிய மண்டபத்தை எழுப்பினான். குறித்த நாளில் ஆறு சமய குருக்களும் தத்தம் இருக்கையில் வந்தமர்ந்த பின்னும் புத்தர் வருவதாகத் தெரியவில்லை. பார்வையாளர்களாக கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆறு சமயங்களைப் பின்பற்றுபவர்கள். அவர்களெல்லாம் பொறுமை இழந்து கொண்டிருந்தார்கள். ஆறு சமய குருக்களும் தம் மனதுக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்கள். புத்தர் வராமலேயே போய் விடுவார் என்று தப்புக் கணக்கு போட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டனர். அக்கணம் அங்கே குழுமியிருந்தவர்கள் ஆகாயமார்க்கமாக தரையிறங்கிக் கொண்டிருந்த புத்தரைப் பார்த்தார்கள். ஒரு பறவையைப் போல அமைதியுடன் மண்டபத்துக்குள் நுழைந்தார் புத்தர். அவரின் அங்கவஸ்திரங்கள் அழகாக ஆடின. அவர் தம் இருக்கையில் வந்தமர்ந்தார். எல்லோரும் வாயடைத்துப் போயினர். குருமார்களின் முகத்தில் ஈயாடவில்லை. வாய் திறக்காமல் தன் பார்வையினாலேயே பூடகப் புன்னகையை வீசினார் புத்தர். சுற்றுமுற்றும் பார்த்தார். மண்டபத்துக்கருகில் மாஞ்செடியொன்று வாடிக் கிடந்தது. அதன் வேரை யாரோ பிடுங்கியெடுத்திருக்கிறார்கள். தன் ஆடையின் முடிச்சொன்றிலிருந்து பல் குத்தும் குச்சியொன்றை எடுத்தார். வாடிக்கிடந்த செடியின் ஓர் இலையைப் பிய்த்தெடுத்து பல் குத்தும் குச்சியில் குத்தினார். மாஞ்செடிக்கு மிக அருகில் மண்ணைத் தோண்டிக் குழி பறித்து இலை குத்திய குச்சியைப் புதைத்தார். மண்ணைப் போட்டு மூடினார். அங்கிருந்தோர் எல்லாரும் புத்தரை நோக்கியவாறு அமைதியாய் இருந்தனர். கண்ணை மூடி ஓரிரு நிமிடம் புத்தர் காத்திருந்தார். மண்ணைக் கீறிக் கொண்டு மாங்கன்று எழுந்தது, செடியாக மாறியது. தண்டுப் பாகம் வலுப்பெற்றது. கிளைகள் முளைத்தன. வேகவேகமாக இலைகள் தோன்றின. மாமரம் சில கணங்களில் ஆளுயரத்திற்கு வளர்ந்தது. மாம்பூக்கள் தோன்றின. மாங்கனிகள் தொங்கின. எல்லோரும் மரத்தைப் பார்த்து மலைத்து நின்றனர். ஒரு சிலர் “ஆஹா” என்று சத்தமெழுப்பினர். மரத்துக்கு மிக அருகே அது வரை நின்றிருந்த புத்தரைக் காணவில்லை. கண் அசைந்தவுடன் புத்தர் இருக்கையில் வீற்றிருப்பதைப் பார்த்தனர். அங்கே இருந்த மன்னன் பிரசேனஜித்தன் உள்பட யாருக்கும் ஒரு வார்த்தையும் எழவில்லை.

இருக்கையில் புத்தர் அமர்ந்து ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது. உட்கார்ந்த படி விண்ணில் உயர்ந்தார். பிறகு இருக்கைக்குப் பின்னர் போய் நின்று கொண்டார். இல்லை. இல்லை. அங்கு ஒரு புத்தர் போய் நிற்கவில்லை. ஐந்து புத்தர்கள் அங்கே மண்டபத்தினுள் நின்றிருந்தனர். இருக்கையிலும் ஒரு புத்தர் இருந்தார். மக்கள் எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் சந்தேகமெல்லாம் அங்கே கூடியிருக்கும் எல்லோரும் புத்தராக மாறிவிட்டனரோ என்பது. மண்டப இருக்கையில் இருந்த பிற சமய குருமார்கள் எல்லாம் வாய் பொத்தி அமர்ந்திருந்தனர். அவர்கள் தலை குனிந்திருந்தார்கள். அங்கிருந்த ஆறு புத்தர்களும் ஒருவர் பின் ஒருவராக தர்மத்தை போதிக்கத் துவங்கினர். ஆறு புத்தரும் பேசி முடித்ததும் ஐந்து புத்தர்கள் மறைந்து போய் இருக்கையில் அமர்ந்திருந்த புத்தர் மட்டும் இருந்தார்.

உட்கார்ந்திருந்த புத்தர் எழுந்து நின்றார். அவர் கால்கள் தரையிலிருந்து உயர்ந்தன. ஓரடி உயரத்தில் அந்தரத்தில் அவர் நின்றிருந்தார். அங்கே கூடியிருந்தோர் அப்போது அந்த அதிசயத்தைப் பார்த்தார்கள். புத்தரின் உடலின் மேல் பாகத்திலிருந்து ஆயிரம் அக்னி ஜுவாலைகள் பொழிந்தன. அவரின் பாதங்களிலிருந்து நீர்த்தாரைகள் விழ ஆரம்பித்தன. சில கணத்துக்குப் பிறகு கீழ் பாகத்தில் அக்னியும் மேல் பாகத்தில் தண்ணீர்த் தாரைகளும் என்று மாறி மாறி பொழிந்தன. மண்டபம் நாசமானது. கூடியிருந்தவர்கள் தூரச் சென்றுவிட்டனர். உயரமான மரங்களில் ஏறி அமர்ந்து கொண்டனர். நாசமான மண்டபம் இப்போது நீர் மாளிகை போல ஒளிஊடுருவும் தன்மையதாய் அவர்கள் கண்களுக்கு தெரிந்தது.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளுக்கும் ஒர் அற்புதம் என புத்தர் அற்புதங்கள் நிகழ்த்தியவாறிருந்தார். அவர் நிகழ்த்திய பிற அற்புதங்களாவன :

இரண்டாம் நாள் – இரண்டு இரத்தின மலைகளைத் தோற்றுவித்தார்.

மூன்றாம் நாள் – ஒர் இரத்தின ஏரியை சிருஷ்டித்தார்

நான்காம் நாள் – ஏரியிலிருந்து குரல்கள் கேட்கச் செய்தார் ; அக்குரல்கள் தருமத்தைப் போதித்தன.

ஐந்தாம் நாள் – அவர் முகத்திலிருந்து கிளம்பிய பொன்னொளி உலகத்தை நிரப்பியது. அவ்வொளி உயிர்களின் விஷவுணர்ச்சிகளைப் போக்கிச் சுத்தப்படுத்தியது.

ஆறாம் நாள் – ஒருவர் மற்றவரின் சிந்தனைகளைப் படிக்கும் திறமையை புத்தர் அங்கிருந்தோருக்கு அளித்தார்.

ஏழாம் நாள் – தன்னுடைய புரவலர்களையெல்லாம் பூலோகச் சக்கரவர்த்திகளாக்கினார்.

எட்டாம் நாள் –  தன் வலது கை விரலால் சிம்மாசனத்தை தரையில் அழுத்தினார். அப்போது தரையிலிருந்து உக்கிரமான ஆங்காரத்துடன் வஜ்ரபாணி எழுந்தான். ஜுவாலை வீசும் வஜ்ராயுதத்தால் எதிர் சமயத் தலைவர்களை பயமுறுத்தினான். வஜ்ரபாணியின் பரிவாரத்தின் நான்கு உறுப்பினர்கள் தோன்றி சமயத் தலைவர்களினுடைய இருக்கைகளை அடித்து நொறுக்கின. பீதியடைந்த சமய குருக்கள் ஆற்றில் குதித்தனர். புத்தர் தன்னுடைய ஒவ்வொரு தோல் துளையிலிலிருந்தும் என எண்பத்திநான்காயிரம் ஒளிக்கதிர்களை அனைத்து திசைகளிலும் பரவச்செய்தார். ஒவ்வொரு கதிரின் நுனியிலும் ஒரு தாமரை ; ஒவ்வொரு தாமரையிலும் தர்மத்தைப் போதிக்கும் ஒரு புத்தர். வார்த்தையில் விவரிக்கவொண்ணா இந்த அற்புதக் காட்சியைக் கண்ணுற்ற ஆறு சமய குருமார்களின் தொண்ணூற்றாராயிரம் சீடர்களும் பௌத்தத்தைத் தழுவி அருகராயினர்.

காந்தாரத்தின் இந்த கற்பாறைச் சிற்பம் ஸ்ராவஸ்தியில் நிகழ்த்திய அற்புதங்களின் இரண்டு அம்சங்களைச் சித்தரிக்கிறது. புத்தர் மாயத்தில் தோற்றுவித்த இளமாமரம் வலப்புறத்தில் காணப்படுகிறது. தன்னைப் நான்கு உடல்களாகப் பெருக்கிக் கொண்ட புத்தர் பிற நான்கு புத்தர்களுடன் சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பதை இச்சிற்பத்தில் காணலாம். முக்கியமான இந்தப் பாறைச்சிற்பத்தின் நீளம் 73 செண்டிமீட்டர் - 2 / 3ம் நூற்றாண்டு

காந்தாரத்தின் இந்த கற்பாறைச் சிற்பம் ஸ்ராவஸ்தியில் நிகழ்த்திய அற்புதங்களின் இரண்டு அம்சங்களைச் சித்தரிக்கிறது. புத்தர்  தோற்றுவித்த மாய மாமரம் வலப்புறத்தில் காணப்படுகிறது. தன்னை பல உடல்களாகப் பெருக்கிக் கொண்ட புத்தர் பிற புத்தர்களுடன் சேர்ந்து தர்ம சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பதை இச்சிற்பத்தில் காணலாம். மிக முக்கியமான இந்தப் பாறைச்சிற்பத்தின் நீளம் 73 சென்டிமீட்டர் – 2 / 3ம் நூற்றாண்டு

லக்னௌ நகரிலிருந்து 150 கி மீ தொலைவில் அமைந்துள்ள ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் சஹேத் மற்றும் மஹேத் என்றழைக்கப்படும் கிராமங்களே புத்தர் காலத்தில் ஸ்ராவஸ்தி (பாலி : சாவத்தி) என்றழைக்கப்பட்ட கோசல நாட்டுத் தலைநகரமாகும். புத்தர் இரட்டை அற்புதங்கள் நிகழ்த்தினார் என்று நம்பப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்தூபம். நன்றி : Wikipedia

லக்னௌ நகரிலிருந்து 150 கி மீ தொலைவில் அமைந்துள்ள ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் இருக்கும் சஹேத் மற்றும் மஹேத் என்றழைக்கப்படும் கிராமங்களே புத்தர் காலத்தில் ஸ்ராவஸ்தி (பாலி : சாவத்தி) என்றழைக்கப்பட்ட கோசல நாட்டுத் தலைநகரமாகும். புத்தர் 24 சாதுர்மாஸ்யங்கள் தங்கியிருந்த ஜெதாவன மடாலயமும் இங்கு தான் உள்ளது. மேலே காணப்படும் படத்தில், புத்தர் இரட்டை அற்புதங்கள் நிகழ்த்தினார் என்று நம்பப்படும் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்தூபம். நன்றி : Wikipedia


அகந்தை அழிதல்-1

$
0
0
(திக்க நிகாயத்தின் மூன்றாம் அங்கமாக வரும் அம்பத்த சுத்தம்)
இந்தோ-கிரேக்கர்களின் காந்தாரச் சிற்பக்கலையில் கிரேக்கத் தொன்ம நாயகன் ஹெர்குலிஸீன் தோற்றத்திலேயே சித்தரிக்கப்பட்ட வஜ்ரபாணியை புத்தரின் வலப்புறம் காணலாம். - குஷானர்கள் காலம், மூன்றாம் நூற்றாண்டு - காந்தாரம் (தற்போதைய வடமேற்கு எல்லைப் பிராந்தியம், பாகிஸ்தான்)

இந்தோ-கிரேக்கர்களின் காந்தாரச் சிற்பக்கலையில் கிரேக்கத் தொன்ம நாயகன் ஹெர்குலிஸீன் தோற்றத்திலேயே சித்தரிக்கப்பட்ட வஜ்ரபாணியை புத்தரின் வலப்புறம் காணலாம். – குஷானர்கள் காலம், மூன்றாம் நூற்றாண்டு – காந்தாரம் (தற்போதைய வடமேற்கு எல்லைப் பிராந்தியம், பாகிஸ்தான்)

பெரும் எண்ணிக்கையிலான பிக்குக்களின் துணையுடன் கோசல நாட்டில் புத்தர் பயணம் செய்து கொண்டிருந்தார். பிராமணர்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமத்தருகே இருந்த காட்டுப் பகுதியில் ஓரிரு நாட்கள் தங்கியிருக்கலாம் என்று முடிவு செய்தார். அந்த கிராமத்தின் பெயர் இச்சனாங்கலா. கிராமத்தின் தொட்டருகே இருந்த அடர்வனப்பகுதியில் புத்தரும் மற்ற துறவிகளும் இளைப்பாறினார்கள்.

இச்சனாங்கலாவுக்கருகே இருந்த சற்று அதிக மக்கள் தொகையுள்ள பெரிய ஊர் உக்கர்தா. அங்கு பொக்காரசதி என்ற பிராமணப் பெரியவர் வாழ்ந்து வந்தார். மூங்கிலும், மக்காச் சோளமும், புற்களும் விளையும் நிலம் பிரம்மதேயமாக கோசல நாட்டு மன்னன் பிரசேனஜித்தனால் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. பொக்காரசதி உக்கர்தாவில் இருக்கும் பிராமண இளைஞர்களுக்கெல்லாம் வேதங்கள் பயிற்றுவித்து வந்தார்.

இச்சனாங்கலாவில் கௌதம புத்தர் வந்திருக்கிறார் என்று பொக்காரசதி கேள்விப்பட்டார். புத்தர் வந்திருப்பதைப் பற்றிச் சொன்னவர்கள் அவரின் பெருமைகளையும் விரித்துச் சொன்னார்கள். அதைக் கேட்ட பொக்காரசதிக்கு அளவிலா ஆர்வம் எழுந்தது. தம்மத்தை உணர்வு பூர்வமாக அறிந்து, போதித்து, முழுமையும் தூய்மையும் கலந்த வாழ்முறையால் செயல் பூர்வமான தம்மத்தின் எடுத்துக்காட்டாக எலும்பும் சதையுமாக நடமாடும் ஒருவர் இருத்தல் சாத்தியமா என்ற வியப்புணர்ச்சி அவருள் மேலிட்டது.

தன்னுடைய பிரகாசமான மாணவன் அம்பத்தனை அழைத்தார். அம்பத்தன் அவரிடமிருந்து மூன்று வேதங்களைக் கற்று பாண்டித்தியம் பெற்றவன். வேள்விகளை நடத்தும் வழிமுறைகளை நன்கு அறிந்தவன். வாய் வழி மரபு பிறழாமல் ஸ்பஷ்டமான சொல்லுச்சரிப்புடன் மந்திரங்களை ஓதுவதில் நிபுணன். தத்துவ விசாரத்திலும் ஈடுபடுபவன். ஒரு வருடம் முன்னர் “நான் அறிந்ததை நீ அறிவாய் : நீ அறிவது எல்லாம் நான் அறிந்தது” என்ற வாக்கியங்களைச் சொல்லி மூன்று வேதங்களின் வித்தகன் அம்பத்தன் என்று ஊரார் முன்னிலையில் மற்ற மாணவர்கள் முன்னிலையில் அறிவித்திருந்தார்.

“அம்பத்தா, சாக்கிய வம்சத்திலிருந்து வந்த துறவி கௌதமர் இச்சனாங்கலாவிற்கு வந்திருக்கிறாராம். அவர் பூரண நிர்வாணம் பெற்ற துறவி என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். முழுமையான ஞானமும் பரிபூரணமான நடத்தையும் மிக்கவராம் அவர். மூவுலகின் இயல்பையும் ஐயந்திரிபற உணர்ந்தவராம் அவர். கடவுளர்களுக்கும் மனிதர்களுக்கும் போதிக்கும் போதகருங்கூட. நீ அவரைச் சென்று சந்திக்க முடியுமா என்று பார்! முடிந்தால் அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா என்பதைக் கண்டு பிடி”

“ஐயா, நீங்கள் கேள்விப்பட்டது உண்மை என்று நான் எப்படி கண்டு பிடிப்பது?”

“நம்முடைய மந்திரங்கள் சொல்லும் மரபுப்படி, முப்பத்திரெண்டு லக்ஷணங்களைக் கொண்டுள்ள ஒரு மாமனிதனுக்கு இரண்டு வழிகளே உள்ளன. அம்மனிதன் இல்லறத்தில் இருந்தால் அகிலம் போற்றும் சக்கரவர்த்தியாக உயர்வான். அவன் பார்க்கும் திசையில் உள்ள நாடுகள் எல்லாம் அவன் கைவசமாகும். ஏழு புதையல்களுக்கு அவன் சொந்தக்காரனாவான். அவனுக்குப் பிறக்கும் புத்திரர்கள் எல்லாம் வீரமிக்கவராக இருப்பார்கள். அவன் ஆட்சியில் இருக்கும் பிரதேசங்களையெல்லாம் கத்தி கொண்டும் தடியைக் கொண்டும் ஆள மாட்டான். தம்மத்தின் துணை கொண்டு ஆள்வான். அப்படி அவன் இல்லறவாசியாக இல்லாமல் துறவுப் பாதை வழி சென்றாலோ, அவன் அருகனாவான், முற்றும் உணர்ந்த புத்தனாவான். அம்பத்தா, நான் வெறும் மந்திரங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்பவன் மட்டுமே ; நீ அம்மந்திரங்களைப் பெறுபவன் மட்டுமே”

பொக்காரசதி சொன்னதைக் கேட்டதும் அம்பத்தன் எழுந்தான். “நல்லது ஐயா” என்று சொல்லி வணங்கி, வலப்புறமாக பொக்காரசதியைத் தாண்டிச் சென்று வாசலை அடைந்தான். ஒற்றைக் குதிரை பூட்டிய இரதத்தில் ஏறினான். அவனோடு பொக்காரசதியின் இளம் மாணவர்கள் சிலரும் கூட ஏறிக் கொண்டார்கள். இச்சனாங்கலாவின் வனப்பகுதிக்குள் குதிரை வண்டி போகத்தக்க இடம் வரை வண்டியிலும் பிறகு கால்நடையாகவும் புத்தர் தங்கியிருந்த குடிசை வரை சென்றார்கள். குடிசைக்கு வெளியிலிருந்த மைதானத்தில் பிக்குக்கள் பலர் நின்றிருந்தனர். அவர்களை அம்பத்தன் அணுகி, புத்தரைக் காணும் விருப்பத்தைச் சொன்னான். அம்பத்தனைக் கண்களால் எடை போட்ட பிக்குக்கள் “நன்கு படித்தவனாகத் தெரிகிறான் இந்த பிராமண இளைஞன். நல்ல குடும்பத்துப் பையன் போலத் தெரிகிறான். பிரபு இவனுடன் உரையாட விரும்புவார்” என்று நினைத்தார்கள். புத்தரின் குடிலைக் காட்டினார்கள். குடிலுக்கு முன்னர் சென்று அம்பத்தன் அமைதியாக நின்றான், பிறகு மெதுவாக இருமினான். மூடியிருந்த கதவை லேசாகத் தட்டினான். புத்தர் கதவைத் திறந்தார். அம்பத்தன் உள்ளே சென்றான். அவனுடன் வந்த இளைஞர்களும் உள்ளே நுழைந்தார்கள். புத்தருக்கு பணிவான வணக்கத்தை தெரிவித்து புத்தர் உட்கார்ந்ததும் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். அம்பத்தன் சற்றுத் தள்ளி நின்றிருந்தான். மற்றவர்கள் எல்லாம் உட்கார்ந்த பின்னும் அவன் உட்கார்வதாகத் தெரியவில்லை. அந்தச் சிறு குடிலுக்குள் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான். புத்தர் அவனைப் பார்த்து கைகளைக் கூப்பினார். அம்பத்தன் பதிலுக்கு கை கூப்பவில்லை. வெற்று வார்த்தைகளால் போலித்தனம் கலந்த குரலில் மரியாதை நிமித்தம் ஏதோ சொன்னான்.

”அம்பத்தா, ஒரு மதிப்புக்குரிய, கல்விமானான பிராமணர் ஒருவர் முன்னால் நீ என்னுடன் இப்படி நடந்து கொண்டது போல் – நான் உட்கார்ந்திருக்கும்ப் போது நீ நடந்து கொண்டும், வெறுமையான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது மாதிரி தான் நடந்துகொள்வாயா?” என்று புத்தர் அம்பத்தனைக் கேட்டார்.

”இல்லை கௌதமரே, நடந்து கொண்டிருக்கும் பிராமணனுடன் இன்னொரு பிராமணன் நடந்த படியே பேச வேண்டும் ; உட்கார்ந்திருக்கும் பிராமணனுடன் உட்கார்ந்து கொண்டும், நிற்கும் பிராமணனிடம் நின்று கொண்டும் தான் பேச வேண்டும். ஆனால், முகச்சவரம் செய்து கொண்ட சின்ன சன்னியாசிகளிடம், சிற்றேவலர்களிடம், பிரம்ம தேவனின் காலடியில் படிந்திருக்கும் அழுக்கையொத்தவர்களிடம் – நான் உம்முடன் நடந்து கொண்டிருப்பதைப் போன்று நடந்து கொள்வதே சரி”

“அம்பத்தா, நீ எதையோ தேடி என்னிடம் வந்தாய். அதைத் தக்கமுறையில் கேட்டறிந்து கொள்வதை விடுத்து உன் சிறுமையை விளம்பரம் செய்து கொள்வது சரியன்று. நீ இன்னும் பக்குவப்படவில்லை. உன் இறுமாப்பு அனுபவமின்மையிலிருந்து எழுகிறது.”

புத்தரின் பேச்சு அம்பத்தனுள் கோபத்தைக் கிளப்பிற்று. பட்டறிவில்லாதவன் என்று தான் கணிக்கபடுவது அவனை அதிருப்திப்படுத்தியது. உரத்த குரலில் புத்தரிடம் கத்தினான். “கௌதமரே, சாக்கியர்கள் மூர்க்கர்கள் ; முரட்டுத் தனமாகப் பேசுபவர்கள் ; வன்மமிக்கவர்கள். சிற்றேவலர்கள் மரபில் பிறந்த அவர்களுக்கு பிராமணர்களை எப்படி மதிப்பது, வணங்குவது, நடத்துவது என்பதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வாராது.”

“உனக்கேன் சாக்கியர்கள் மீது இத்தனை கோபம்? அவர்கள் உனக்கு என்ன தீங்கிழைத்தார்கள்?

“கௌதமரே, ஒரு முறை கபிலவாத்துவில் என் குருவுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தது. அதற்காக நான் சென்றிருந்தேன். அப்போது, சாக்கியர்கள் நிறைந்திருந்த ஒரு மண்டபத்துள் செல்ல வேண்டியிருந்தது. அங்கேயிருந்த சாக்கியர்கள் நாகரீகமில்லாமல் சத்தம் போட்டுக் கொண்டும் அடுத்தவரை விரல்களால் சீண்டிக்கொண்டும் இருந்தனர். என்னைப் பார்த்து அவர்கள் கேலி செய்தது போலிருந்தது. நான் உட்கார அவர்கள் இருக்கை கூட தரவில்லை. ஒரு பிராமணரை எப்படி நடத்த வேண்டும் என்ற பிரக்ஞையோ அறிவோ  இல்லாத ஜென்மங்கள்”

“அம்பத்தா, ஒரு சின்ன பறவை கூட தன் சொந்த கூட்டில் தனக்கு விருப்பமானதைச் செய்து கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறது. கபிலவாஸ்து சாக்கியர்கள் சொந்தவூர். ஓர் அற்பமான விஷயத்துக்காக இவ்வளவு கண்டனம் தேவையா?”

“கௌதமரே, நான்கு வர்ணங்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். – க்ஷத்திரியர்கள், பிராமணர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள். இந்த நான்கு ஜாதிகளுள், மூன்று – க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் – இவர்களெல்லோரும் பிராமணர்களைவிட மட்டமானவர்கள்”

புத்தர் சற்று மௌனமானார். “இந்த இளைஞன் அளவுக்கு மீறி சாக்கியர்களை மட்டமாகப் பேசுகிறான். இவனுடைய கோத்ரம் என்ன என்று இவனிடம் கேட்க வேண்டும்” என்று புத்தர் நினைத்தார். “அம்பத்தா, உன் கோத்திரம் என்ன? என்று கேட்டார்.

”கன்ஹா கோத்திரம்”

“மூதாதையர் வம்சாவளி சரித்திரங்களை அறிந்தவர்கள் கூறுகின்றபடி, முன்னாளில் சாக்கியர்கள் எஜமானர்களாக இருந்தார்கள். அவர்கள் பரம்பரையில் வந்த ஓர் அடிமைப் பெண்ணின் வம்சாவழியிலிருந்து வந்த குடும்பத்தில் பிறந்தவன் நீ. ஒக்காகன் எனும் ஓர் அரசன் தன் பிரியத்துக்குகந்த காதலிக்குப் பிறந்த மகனை இளவரசனாக்குவதற்காக பிற புத்திரர்களை – ஒக்கமுகன், கராண்டு, ஹத்தினியன், சினிபுரன்  என்பது அந்த புத்திரர்களின் பெயர்கள் – நாடு கடத்தினான். இமயமலைப் பிராந்தியத்தில் இருந்த, மூங்கில் மரங்கள் நெடிது வளர்ந்த காட்டுக்கு மிக அருகில் இருந்த தாமரைகள் பூத்துக் குலுங்கிய குளக்கரையில் அவர்கள் வசிக்கத் தொடங்கினர். தம் இனம் அசுத்தப்படாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம் சகோதரிகளையே புணர்ந்து வாழ்ந்தனர். ஒரு நாள் “தம் புத்திரர்கள் எங்கு இருக்கிறார்கள்?” என்று ஒக்காகன் தம் மந்திரிமாரிடம் கேட்டு தெரிந்து கொண்டான். ”சக (தேக்கு) மரங்களைப் போன்று வலிமையானவர்கள் என் பிள்ளைகள் ; அவர்கள் நிஜ சாக்கியர்கள்” என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டான். அன்றிலிருந்து தான் அவர்கள் குலத்தின் பெயர் சாக்கியர்கள் என்றானது. ஓக்காக மன்னனே சாக்கியர்களின் மூதாதையன்.”

புத்தர் மேலும் தொடர்ந்தார்.

“அரசன் ஒக்காகனின் அரண்மனையில் வேலை செய்த அடிமைப் பெண் ஒருத்தி ஒரு மகவை ஈன்றாள். அது கருப்பு நிறக் குழந்தை. அசிங்கமாக உருவம் கொண்ட அக்குழந்தை பிறந்த மறு கணமே பேச ஆரம்பித்தது. “அன்னையே, என்னைக் குளிப்பாட்டுங்கள். என்னுடைய அழுக்கைக் கழுவி ஓட்டுங்கள். அதனால் உங்களுக்கு நன்மையுண்டாகும்” என்றது. குழந்தை பேசுவதைக் கேட்டவர்கள் அடிமைப் பெண் ஒரு பிசாசைப் பெற்றெடுத்திருக்கிறாள் என்று புரளி பேசினார்கள். அந்தப் பிசாசின் பெயர் கன்ஹா (கருப்பன்) என்றும் சொன்னார்கள். ஏற்கெனவே சொன்ன படி, மூதாதையர் வம்சாவளி சரித்திர நிபுணர்கள் சாக்கியர்களைப் பற்றி சொன்ன சரித்திரம். சாக்கியர்களின் அடிமைப் பெண் ஒருத்தியின் குடும்பத்திலிருந்து வந்த குடும்பமே உன்னுடையது.”

அம்பத்தன் ஒன்றும் பேசாமல் ஒரு சிலை போல அசைவின்றி நின்றிருந்தான். அவனுடன் கூட வந்த இளம் மாணவர்கள் “மதிப்புக்குரிய கௌதமரே, அம்பத்தனை அவமதிக்காதீர்கள். அம்பத்தன் நல்குடிப்பிறப்பில் வந்தவன். மிகவும் படித்தவன், ஒரு கல்விமான், நன்கு உரையாற்றக் கூடியவன், உங்களுடனான வாதத்தில் உங்களுக்கு ஈடாக வாதம் செய்ய வல்லவன்” என்று கூறினார்கள்.

புத்தர் சொன்னார் “அம்பத்தன் நல்குடியைச் சேர்ந்தவனில்லை. மிகவும் படித்தவனில்லை, அவன் கல்விமான் கிடையாது. நன்கு உரையாற்றத் தெரியாதவன். கௌதம புத்தருடன் வாதத்தில் ஈடுபடும் திறமை இல்லாதவன் என்று நீங்கள் கருதினீர்களேயானால், அம்பத்தன் வாய் திறவாதிருக்கட்டும். என்னுடன் நீங்கள் உரையாடுங்கள். ஆனால் அம்பத்தன் நல்குடிப்பிறப்பில் வந்தவன். மிகவும் படித்தவன், ஒரு கல்விமான், நன்கு உரையாற்றக் கூடியவன், என்னுடன் வாதத்தில் ஈடுபடத் தகுதியானவன் என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், நீங்கள் அமைதியாயிருங்கள். அம்பத்தன் என்னுடன் உரையாடட்டும்.”

மாணவர்கள் அமைதியானார்கள்.

புத்தர் அம்பத்தனை நோக்கிப் பேசலானார். “அம்பத்தா, நான் உன்னிடம் ஓர் அடிப்படைக் கேள்வி கேட்கிறேன். அதற்கு நீ பதிலளிக்க விரும்பமாட்டாய். அப்படி நீ பதிலளிக்காமல் இருந்தாலோ அல்லது சுற்றிவளைத்து பதில் சொன்னாலோ அல்லது அமைதியாய் இருந்தாலோ அல்லது இவ்விடத்திலிருந்து கிளம்பிப் போனாலோ, உன் தலை ஏழு துண்டுகளாக வெடித்துச் சிதறும். கன்ஹாவின் தாயைப் பற்றியோ அல்லது அவனின் மூதாதையர்கள் பற்றியோ மூத்த பிராமண ஆசிரியர்கள் யாரேனும் உன்னிடம் சொல்லியிருக்கிறார்களா? அம்பத்தா, பதில் சொல்”

அம்பத்தன் அமைதியாய் வாய் மூடி நின்றான்.

“பதில் சொல், அம்பத்தா. அமைதியாய் இருக்கும் தருணமல்ல. மீண்டுமொருமுறை சொல்கிறேன். ததாகதர் மூன்றாவது முறையாக கேட்ட அடிப்படை கேள்விக்கு பதில் தராதவர் யாராக இருந்தாலும் அவர் தலை ஏழு துண்டுகளாக வெடித்துச் சிதறும்.”

அப்போது, புத்தரின் தலைக்கு மேல் வஜ்ரபாணி என்ற யக்ஷன் தோன்றினான். அதை அங்கு குழுமியிருந்த மாணவர்கள் பார்க்கவில்லை. அவன் கையில் பெரும் இரும்பு கதை இருந்தது. கதையின் ஒளிர்வு அம்பத்தனின் கண்களைக் கூச வைத்தன. ததாகதர் தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். வஜ்ரபாணியின் எண்ணத்தில் “பிரபு எழுப்பிய வினாவுக்கு இவ்விளைஞன் பதிலளிக்காமல் போவானாயின், என் கதையால் அவன் தலையை ஏழு துண்டாக உடைத்தெடுப்பேன்” என்ற சிந்தனை ஓடியது. அம்பத்தனின் சர்வ நாடியும் ஒடுங்கியது. பயத்தில் அவன் கைகள் நடுங்கின. நெற்றி வியர்த்தது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. பிரபுவின் காலடியில் வந்து தன் தலையை பதித்துக் கொண்டான். மெலிதான, நொறுங்கும் குரலில் “நீங்கள் கேட்டது என்னவென்று எனக்குப் புரியவில்லை. நீங்கள் கேட்ட வினாவை திரும்பக் கேட்க முடியுமா?” என்றான்.

அம்பத்த சுத்தத்தின் மீதிப்பகுதி அடுத்த இடுகையில்…..

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ள போரோபுதூருக்கு அருகில் உள்ள புராதன மெந்துத் விகாரத்தினுள் காணப்படும் வஜ்ரபாணி - ஐந்தாம் நூற்றாண்டு

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ள போரோபுதூருக்கு அருகிலிருக்கும் புராதன மெந்துத் விகாரத்தினுள் காணப்படும் வஜ்ரபாணி – ஐந்தாம் நூற்றாண்டு


அகந்தை அழிதல்-2

$
0
0
(திக்க நிகாயத்தின் மூன்றாம் அங்கமாக வரும் அம்பத்த சுத்தம்)

புத்தர் தன் குரலின் இனிமையை அதிகப்படுத்திக் கொண்டு கேள்வியை இன்னுமொருமுறை கேட்டார்.

”அம்பத்தா, நீ என்ன நினைக்கிறாய்? வணங்கத்தக்க, மூத்த பிராமணர்கள் யாராவது கன்ஹா கோத்திரக்காரர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற தகவலை உனக்குக் சொல்லியிருக்கிறார்களா?”

“ஆம் ஐயா, கன்ஹா கோத்திரக் காரர்கள் மூலம் பற்றி எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் ; நீங்கள் சொன்ன மாதிரி தான் எங்கள் கோத்திர வரலாறு”

அம்பத்தனுடன் வந்திருந்த மாணவர் குழு அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது ; ஆரவாரத்துடன் சத்தமெழுப்பியது. ஒரு மாணவன் எழுந்திருந்து ஆத்திரத்துடன் அம்பத்தனிடம் பேசினான். “இந்த அம்பத்தன் இழிகுலத்தில் பிறந்தவன் ; நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனல்லன். சாக்கியர்களின் அடிமைப் பெண்ணின் வழி கிளம்பிய குடும்பக் கோட்டின் வழி உதித்தவன் ; சாக்கியர்கள் அம்பத்தனின் எஜமானர்கள். இவனை நம்பி நாம் குரு கோதமரை அவமதித்தோம்”

புத்தர் அமைதியாக இருந்தார் ; அவர் மனதில் “இந்த இளைஞர்கள் அம்பத்தனைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார்கள் ; அம்பத்தனை இதிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டும்” என்று நினைத்தார்.

“அம்பத்தனை யாரும் ஏளனமாகப் பேச வேண்டாம். கன்ஹா பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு பராக்கிரமசாலியான முனிவர். சாக்கிய நாட்டிற்கு தெற்கிலுள்ள பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த பிராமணர்களிடமிருந்து மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். பின், சாக்கிய மன்னன் ஒக்காகனிடம் திரும்பச் சென்று அவனுடைய மகள் மத்தரூபியைத் தனக்கு மணமுடித்து வைக்குமாறு வேண்டினார். ஒக்காகனின் கோபம் எல்லை மீறியது. “அடிமைப் பெண்ணின் மகனுக்கு இளவரசி மனைவியாக கேட்கிறதா?” என்று கர்ச்சித்தான். அம்பை எடுத்து வில்லில் பூட்டினான். ஆனால் என்ன ஆனது என்று தெரியவில்லை. அவனால் அவன் கையை இயக்க முடியவில்லை. அம்பையும் வில்லையும் பிடித்தபடியே நின்றான். அவன் எத்தனித்துப் பார்த்தும் அவன் கையை நகர்த்த முடியவில்லை. மந்திரிகளும் மற்ற மூத்தவர்களும் கன்ஹாவை அணுகி “அரசரைக் காப்பாற்றுங்கள்! மதிப்புக்குரியவரே, அரசரைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டினர்.

“அரசர் பாதுகாப்பாக இருப்பார். ஆனால் அவர் நாணை கீழ்ப்புறமாக விட்டாரானால், இந்த சாம்ராஜ்யம் முழுதிலும் நிலம் அதிரும்.”

“வணக்கத்துக்குரியவரே! அரசரைக் காப்பாற்றுங்கள்! நிலத்தையும் காப்பாற்றுங்கள்”

“அரசனும் சரி, நிலமும் சரி – இருவரும் காக்கப்படுவார்கள். ஆனால் அரசரின் நாண் மேல் நோக்கிப் பாயுமானால், அவர் சாம்ராஜ்யம் முழுவதிலும் ஏழு வருடங்களுக்கு மழை பெய்யாத படி கடவுள் செய்துவிடுவார்”

“வணக்கத்துக்குரியவரே! அரசரைக் காப்பாற்றுங்கள்! நிலத்தையும் காப்பாற்றுங்கள்! கடவுளர் மழை பெய்ய வைக்கும் படி செய்யுங்கள்”

“அரசர் பாதுகாப்பாக இருப்பார் ; நிலமும் பாதுகாப்புடன் இருக்கும் ; கடவுளர் மழை அளிப்பர், ஆனால் அரசர் தன் நாணை இளவரசரை நோக்கி குறி வைத்தாரென்றால், இளவரசரும் வெகு பாதுகாப்பாக இருப்பார்”

மந்திரிகள் அரசனை இளவரசனை நோக்கி அம்பு விடும்படி கேட்டுக் கொண்டார்கள். இளவரசனுக்கு ஒன்றும் ஆகவில்லை. பயந்துபோயிருந்த அரசன், தெய்வபாவம் வந்து சேர்ந்துவிடக்கூடாது என்று இளவரசி மத்தரூபியை கன்ஹா முனிவருக்கே மணமுடித்து வைத்தார். எனவே மாணவர்களே அம்பத்தனை யாரும் இகழ வேண்டாம். பெருமை மிகு கன்ஹா முனிவரின் வழி வந்தவன் இந்த அம்பத்தன்”

புத்தர் அம்பத்தனுடனான உரையாடலைத் தொடர்ந்தார். “ஒரு க்‌ஷத்திரிய இளைஞன் ஒரு பிராமணப் பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டானெனின் அவர்களுக்குப் பிறக்கும் மகனுக்கு இருக்கையும் நீரும் பிராமணர்களால் அளிக்கப்படுமா?

”ஆம்”

“இறுதிச் சடங்குகளிலோ அல்லது சோற்றுப் படையல்களிலோ அல்லது பலிகளிலோ அல்லது விருந்துகளிலோ உணவுண்ண அவன் அனுமதிக்கப்படுவானா?”

“ஆம்”

“அவனுக்கு மந்திரம் கற்றுக் கொடுக்கப்படுமா?”

“ஆம்”

”ஆனால், க்‌ஷத்திரியர்களுக்கான பட்டாபிஷேகத்தின் போது அவன் தலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?”

“இல்லை”

“ஏன் அப்படி?”

“ஏனென்றால், அன்னை வழி நல் குடிப்பிறப்பில் அவன் பிறக்கவில்லை”

புத்தரின் கேள்விகள் தொடர்ந்தன.

“ஒரு பிராமண இளைஞன் ஒரு க்‌ஷத்திரிய குலப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றானென்றால், அம்மகனுக்கு பிராமணர்கள் இருக்கையும் நீரும் கொடுப்பார்களா?”

“ஆம்”

“இறுதிச் சடங்குகளிலோ அல்லது சோற்றுப் படையல்களிலோ அல்லது பலிகளிலோ அல்லது ஒரு விருந்துகளிலோ உணவுண்ண அவன் அனுமதிக்கப்படுவானா?”

”ஆம்”

”மந்திரங்கள் அவனுக்குக் கற்றுக் கொடுக்கப்படுமா?”

“ஆம்”

”ஆனால், க்‌ஷத்திரியர்களுக்கான பட்டாபிஷேகத்தின் போது அவன் தலையில் தண்ணீர் தெளிக்கப்படுமா?”

”இல்லை”

“ஏன் அப்படி?”

“தந்தை வழிப்படி நல்ல குடியில் அவன் பிறக்காததால்”

“ஒரு ஆண் பெண்ணை எடுத்துக் கொண்டதனாலுமோ அல்லது ஒரு பெண் ஆணை எடுத்துக் கொண்டதனாலுமோ அல்லது எப்படி வைத்துக் கொண்டாலும், க்‌ஷத்திரியர்களே பிராமணர்களை விட உயர் மட்டத்தில் இருக்கிறார்கள். ஒரு பிராமணனை எடுத்துக் கொள்வோம், அவன் செய்த செயலின் காரணமாக மற்ற பிராமணர்கள் அவன் தலையை மழித்து விடுகிறார்கள். ஒரு சாம்பல் மூட்டையை சுமக்கும் படி கொடுக்கப்பட்டு நகரிலிருந்தோ நாட்டிலிருந்தோ அவனைத் தள்ளி வைத்து விட்டார்கள். நீ என்ன நினைக்கிறாய்? பிராமணர்கள் அவனுக்கு இருக்கையும் நீரும் கொடுப்பார்களா?

“இல்லை”

“இறுதிச் சடங்குகளிலோ அல்லது சோற்றுப் படையல்களிலோ அல்லது பலிகளிலோ அல்லது ஒரு விருந்திலோ உணவுண்ண அவன் அனுமதிக்கப்படுவானா?”

”இல்லை”

”மந்திரங்கள் அவனுக்குக் கற்றுக் கொடுக்கப்படுமா?”

“இல்லை”

“அதே இடத்தில் ஒரு க்‌ஷத்திரியனை எடுத்துக் கொள்வோம். அவனையும் தலையை மழித்தெடுத்து நாட்டை விட்டோ நகரை விட்டோ தள்ளி வைத்து விடுகிறார்கள்! பிராமணர்கள் அவனுக்கு இருக்கையும் நீரும் கொடுப்பார்களா?”

“ஆம்”

“அவனுடைய மனைவியைப் பாதுகாப்புடன் தங்க வைப்பார்களா?”

“ஆம்”

“பார்த்தாயா, ஒரு க்‌ஷத்திரியன் ஒரு கேவலமான அந்தஸ்தைப் பெற்ற நிலையிலும், நாட்டிலிருந்தும் நகரிலிருந்தும் தள்ளி வைக்கப்பட்டு விட்ட நிலையிலும் அதே நிலையிலிருக்கும் இன்னொரு பிராமணனை விட உயர் நிலையானவனாகவே கருதப்படுகிறான்”

அம்பத்தா, பிரம்மனின் குமாரன் சனத்குமாரன் சொன்னான் :

“குலத்தை மதிப்பவர்களுக்கு க்‌ஷத்திரியர்களே சிறந்தவர்கள் :கடவுளர்க்கும் மனிதர்க்கும் அறிவும் நடத்தையும் கொண்டவர்களே உயர்ந்தவர்கள்”

மேற்சொன்ன செய்யுள் சொன்ன கருத்து முழுக்க முழுக்கச் சரி.”

“வணக்கத்துக்குரிய கௌதமரே, எது நடத்தை? எது அறிவு?”

“பிறப்பின் அடிப்படையில் குலத்தின் அடிப்படையில் பிரகடனம் செய்து கொள்ளப்படும் பெருமை மறுதலிக்கவியலா அறிவு மற்றும் நடத்தையை அடைந்த நோக்கு நிலையிலிருந்து பெறப்படுவதன்று. “நீ எனக்கு சரிசமம் ; நீ எனக்கு சரிசமமில்லை” என்ற இறுமாப்பும் அப்படித்தான். எங்கெல்லாம், கொடுக்கல் இருக்கிறதோ, வாங்கல் இருக்கிறதோ, கொடுக்கல்-வாங்கல் இருக்கிறதோ, அங்கெல்லாம் இதே பேச்சு இதே இறுமாப்பு….இது போன்ற விஷயங்களில் அடிமைப்பட்டோர் மறுதலிக்கவியலா அறிவு-மற்றும்-நடத்தையை அடைதலிலிருந்து வெகுதூரத்திலிருக்கிறார்கள். இது போன்ற விஷயங்களைக் கைவிடுவதானால் பட்டுமே மேலே குறிப்பிட்ட அறிவையும் நடத்தையையும் அடைய இயலும்”

”ஆனால் மதிப்புக்குரிய கௌதமரே, எது அந்த அறிவு? எது அந்த நடத்தை?”

“பூரணஞானம் அடைந்த புத்தர்
அருகர்
ஞானமும் நடத்தையும் இயற்கையாகவே கைவரப் பெற்றவர்
உலகங்களை அறிந்தவர்
வசப்படுத்தப்பட வேண்டிய மனிதர்களின் ஒப்பிடமுடியா பயிற்சியாளர்
கடவுளர்களின், மனிதர்களின் ஆசான்
உள்ளோளி பெற்றவரும்
ஆசீர்வதிக்கப்பட்டவருமான
ததாகதர்
இவ்வுலகில் எழுகிறார்.
தன்னுடைய அதீத அறிவினால் ஞானநிலையை அடைந்தவர் அவர்
தேவர்களையும், மாரர்களையும், பிரம்மர்களையும்
இவ்வுலகுக்கு
இதன் இளவரசர்களுக்கு
மனிதர்களுக்கு
பறைசாற்றுகிறார்
அவர் போதிக்கும் தம்மம்
ஆரம்பத்திலும் அருமை
நடுவிலும் அருமை
முடிவிலும் அருமை
எழுத்திலும் அருமை
ஆன்மாவிலும் அருமை
முழுப்பூரணமான
தூய
வாழ்க்கையை
எடுத்துக்காட்டும்
அவரை அடையும் மாணவன்
அறப்பயிற்சி மேற்கொள்கிறான்
புலன்களின் கதவைக் காவல் காக்கிறான்
நான்கு தியானங்களைப் புரிகிறான்
அவற்றின் வாயிலாக நடத்தையை வளர்க்கிறான்
பல்வேறு உள்நிலைத் தெளிவுகளை
ஒழுக்கக்கேடுகளின் முடிவுகளை
அடைகிறான்
இதைத் தாண்டி
அவன் பெற வேண்டிய உயர்ந்த அறிவோ
பயில வேண்டிய நடத்தை வழிமுறைகளோ ஏதுமில்லை”

”அம்பத்தா, மறுதலிக்கவியலா அறிவின் நடத்தையின் அடைதலுக்கான தேடலில் நான்கு விதமான தோல்விப்பாதைகள் உள்ளன. மறுதலிக்கவியலா இந்த அடைதலைப் பெறாதவன் –  அவன் துறவியாகவோ அல்லது பிராமணனாக இருக்கலாம் – முதற்கண் அவன் ஒரு தண்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வனப்பகுதியை சென்றடைந்து காற்றினால் கீழே விழுபவற்றை எடுத்துண்டு வாழ்வேன் என்ற பிரதிக்கினை மேற்கொள்வானாயின் இது தோல்விக்கான முதல் பாதையாக அமையும். ஏனெனில் இதன் வாயிலாக ஞானநிலையை சாதித்தவனின் ஊழியனாக மட்டுமே ஆகமுடியும். அந்தத் துறவி அல்லது பிராமணன் காற்றினால் விழுபவைகளை உண்டு வாழ முடியாமல், மண்வெட்டியையும் கூடையையும் எடுத்துக் கொண்டு “நான் வேர்களையும் கிழங்குகளையும் உண்டிருப்பேன்” என்று முடிவெடுப்பானாயின் அது இரண்டாவது தோல்விப்பாதையாக இருக்கும். அந்தத் துறவி அல்லது பிராமணன் வேர்களை கிழங்குகளை உண்டு வாழ முடியாமல் ஒரு கிராமத்தின் அல்லது சிறு ஊரின் ஓரத்தில் தீயடுப்பை நிறுவி அதில் தீ வளர்க்கத் துவங்குவானாயின்…இது தோல்விக்கான மூன்றாவது பாதை. தீ வளர்க்க முடியாத அந்தத் துறவி அல்லது பிராமணன் சாலைகளின் சந்திப்புக்கருகே நான்கு கதவுகளைக் கொண்ட சிறு வீடைக் கட்டிக் கொண்டு “நான்கு திசைகளிலிருந்து இந்த சாலைச்சந்திப்புக்கு வரும் துறவி அல்லது பிராமணருக்கு என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்” என்று முடிவெடுப்பானாயின்  இது தோல்விக்கான நான்காவது பாதை.”

”அம்பத்தா சொல்! நீயோ அல்லது உனது குருவோ மறுதலிக்கவியலா அறிவு மற்றும் நடத்தையின் படி வாழ்கிறீர்களா?

“இல்லை கௌதமரே! நானும் என் குருவும் ஒப்பீட்டளவில் வெகு தொலைவில் இருக்கிறோம்”

“ஓ..அப்படியானால், நீயும் உனது குருவும் ஞானத்தை அடையாத பட்சத்தில்…தண்டத்தை எடுத்துக் கொண்டு காற்றினால் கீழே விழுபவற்றை உண்டு வாழும் எண்ணத்தில் ஆழ்ந்த வனப்பகுதிக்குச் சென்று வாழ முடியுமா?”

“கண்டிப்பாக முடியாது கௌதமரே”

“பின்….நீயோ அல்லது உனது குருவோ…கிழங்கையும் வேரையும் உண்டு வாழ்வீர்களா?….தீ வளர்ப்பீர்களா?….அல்லது வீடு கட்டிக் கொள்வீர்களா?….”

 ”இல்லை கௌதமரே”

”பார்…நீயோ அல்லது உன் குருவோ மறுதலிக்கவியலா ஞானத்தையும் நடத்தையையும் மட்டுமல்ல, நான்கு தோல்விப் பாதைகள் கூட உங்கள் சாத்தியத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. எனினும் நீயும் உன் குரு பொக்காரசதி பிராமணரும் என்ன சொல்கிறீர்கள்? – முகச்சவரம் செய்து கொண்ட சின்ன சன்னியாசிகளும், சிற்றேவலர்களும், பிரம்ம தேவனின் காலடியில் படிந்திருக்கும் அழுக்கையொத்தவர்களும் மூன்று வேதங்களைக் கற்ற பிராமணர்களிடம் என்ன பேசி விட முடியும்? – தோல்வியுற்றவர்களின் கடமையைக் கூட செய்ய முடியாத நீங்கள் பேசும் பேச்சு இது! பார் அம்பத்தா, உன் குரு உன்னை எப்படி கை விட்டிருக்கிறாரென்று?”

”அம்பத்தா, பொக்காரசதி பிராமணர் கோசல நாட்டு மன்னன் பிரசேனஜித்தனின் தயையில் வாழ்ந்து வருபவர். இருந்தாலும் மன்னரை நேருக்கு நேர் பார்த்துப் பேச பொக்காரசதியால் முடியாது. மூடிய திரைக்குப் பின்னாலிருந்து தான் அவரால் மன்னனுடன் பேச முடியும். உத்தமமான, குற்றமிலா வாழ்வாதாரத்தை தந்தருளிய மன்னன் பிரசேனஜித்தன் நேருக்கு நேராக சந்திக்கும் அனுமதியை உன் குருவுக்கு ஏன் வழங்கக் கூடாது?”

”அம்பத்தா, முதல் துறவிகள் என்று நீங்கள் சொல்லும் ரிஷிகள் – மூல மந்திரங்களைப் பார்த்தவர்கள் – அவர்கள் பார்த்த மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டும். உச்சரிக்கப்பட்டும், இன்றளவும் பிராமணர்களால் தொகுக்கப்பட்டும் வருகின்றன. அத்ரி, வாமகர், வாமதேவர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி, ஆங்கிரஸர், பாரத்வாஜர், வசிஷ்டர், காஸ்யபர், பிருகு – போன்றோர் கண்டுபிடித்த மந்திரங்களே உனக்கும் உன் குருவுக்கும் வழங்கப்பட்ட மந்திரங்கள். ஆனாலும் இம்மந்திரங்களின் ஜெபத்தாலும், உச்சரிப்பாலும் நீயும் உன் குருவும் முனிவர்களாக முடியாது – அப்படி ஒன்று சாத்தியமே இல்லை.”

“அம்பத்தா, நீ என்ன நினைக்கிறாய்? வணங்கத்தக்க, வயதில் மூத்த, குருக்களுக்கெல்லாம் குருவானவர்களிடமிருந்து நீ என்ன கேள்விப்பட்டிருக்கிறாய்? கிட்டத்தட்ட நீயும் உன் குருவும் இருப்பது மாதிரி அந்த முதல் ரிஷிகள் – அத்தகர் முதல் பிருகு வரை – அவர்களெல்லாம் நிறைய அனுபவித்தார்களா, நன்கு குளித்தார்களா, வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டார்களா, முடியையும் தாடியையும் திருத்திக் கொண்டார்களா, மாலைகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டார்களா, வெண்ணிற ஆடைகளை அணிந்து கொண்டார்களா, ஐம்புல இன்பங்களை துய்த்து அவற்றுக்கு அடிமையானார்களா?”

“இல்லை கௌதமரே”

“நீயும் உன் குருவும் சாப்பிடுவது மாதிரி, கூட்டும், பொறியலும் சேர்த்து பட்டை தீட்டப்பட்ட அரிசியால் வடித்த சோறை அவர்கள் உண்டார்களா?”

“இல்லை கௌதமரே”

“நீயும் உன் குருவும் இப்போது இருப்பது மாதிரி, குட்டைப் பாவாடையும் பகட்டணிமணிகளும் அணிந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்தார்களா?”

“இல்லை கௌதமரே”

“நீளமான குச்சியால் லேசாக அடித்த வண்ணம், அலங்காரம் செய்யப்பட்ட குதிரைகளால் இழுக்கப்படும் ரதத்தில் அவர்கள் பயணம் செய்தார்களா?”

“இல்லை, கௌதமரே”

“வேலிகளாலும் தடுப்புகளாலும், வாளேந்திய வீரர்களால் காக்கப்படும் ஊர்களில் வசித்து அவர்கள் தம்மை காத்துக் கொண்டனரா?”

“இல்லை கௌதமரே”

“ஆகவே, அம்பத்தா, நீயோ உன் குருவோ முனிவர்களுமில்லை ; முனிவர்களாவதற்கான பயிற்சி பெற்றவர்களும் இல்லை. அது போகட்டும். இப்போது நீ என்ன சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள இங்கு வந்தாயோ அவற்றை தீர்த்து வைக்கப் போகிறேன்”

புத்தர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து அம்பத்தனை நோக்கி நடந்தார். அம்பத்தனும் புத்தரை நோக்கி நடந்தான். அவர்களிருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் நடந்து வரும் போது, மாமனிதருக்கான முப்பத்திரெண்டு லட்சணங்களை புத்தரின் உடலில் அம்பத்தன் தேடினான். எல்லா லட்சணங்களையும் அவனால் காண முடிந்தது, இரண்டைத் தவிர. அவனுடைய ஐயம் தீர்ந்தபாடில்லை. முழுக்க மூடிய ஆண் குறியையும், நீளமான நாக்கையும் அவனால் காண முடியவில்லை.

ததாகதருக்கு அம்பத்தனின் குழப்பம் புரிந்தது. தன் மனோசக்தியால் தன்னுடைய மூடிய ஆண்குறியை (Sheathed Genitals) ஞானதிருஷ்டியில் அம்பத்தனுக்கு தெரிய வைத்தார். அதன் பின், தன் நாக்கை வெளியே நீட்டி இரண்டு மூக்கையும், இரண்டு காதுகளையும் நக்க வைத்தார். பின்னர் தன் நாக்கால் முன் நெற்றியை வட்ட வளைவை முழுக்க மூடும் படிச் செய்தார்.

“துறவி கௌதமர் மாமனிதனுக்கான முப்பத்திரெண்டு லட்சணங்களையும் கொண்டிருக்கிறார் ; ஒரு லட்சணமும் குறையவில்லை” என்று அம்பத்தன் தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

“வணக்கத்துக்குரிய கௌதமரே, நான் சென்று வரட்டுமா? எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறது”

“நிச்சயமாக அம்பத்தா” என்றார் புத்தர்.

+++++

புத்தரை சந்தித்ததைப் பற்றி பொக்காரசதிக்கு அம்பத்தன் சொல்கிறான். அம்பத்தன் புத்தரை இழிவு செய்து பேசினான் என்று அறிந்தவுடன் மிகவும் வருத்தம் கொள்கிறார் பொக்காரசதி. உடனடியாக, புத்தரின் குடிலுக்குச் சென்று அம்பத்தன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். “அம்பத்தன் என்றும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” என்று புத்தர் வாழ்த்துகிறார். புத்தர் பொக்காரசதிக்கும் தன் முப்பத்திரெண்டு லட்சணங்களைக் காட்டுகிறார். பொக்காரசதியின் இல்லம் வரும் புத்தர் தம்மத்தை எடுத்துரைக்கிறார். பொக்காரசதியும், அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரின் மாணவர்களும் தம்மத்தை தழுவுகிறார்கள்.

 


பௌத்தத்தில் மகாவிஷ்ணு

$
0
0

kanavu-chirai-800x800

இலங்கை அதிபர்கள் இந்தியா வரும்போதெல்லாம் திருப்பதி மற்றும் குருவாயூர் கோயில்களுக்கு செல்வது ஏன்? ஸ்டண்டாக இருக்கும் என்று நான் நினைத்ததுண்டு. நான் நினைத்தது தவறு. இலங்கை பௌத்தத்தில் விஷ்ணு வழிபாடு இருக்கிறது.

எழுத்தாளர் தேவகாந்தனின் “கனவுச்சிறை” நாவலை வாசித்த போதுதான் எனக்கு இது தெரிய வந்தது. ஈழப்போராட்டத்தின் துவக்கத்திலிருந்து முடிவு வரையிலான காலவோட்டத்தை ஒரு குடும்ப அங்கத்தினர்களின் வாழ்வின் நோக்கில் காப்பியமாக படைத்திருக்கிறார் தேவகாந்தன். சங்கரானந்தர் என்கிற ஒரு அருமையான பாத்திரத்தை நாவலில் உருவாக்கியிருப்பார் தேவகாந்தன். அந்தப் பாத்திரம் அவருக்கு நேரெதிரான எண்ணங்களைக் கொண்ட இன்னொரு புத்தபிக்குவுடன் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும்.

+++++

”நிகழ்வின் சாத்தியம்தான் வரலாறு. இரண்டு காலங்களை…இரண்டு எல்லைகளை…இரண்டு நிகழ்வுகளை வெகு அநாயாசமாய் இணைக்கக்கூடிய காரணங்களின் சாத்தியம் அது. இந்தச் சாத்தியத்தினூடாக வரலாற்றில் முன்னனுமானமே நிகழ்ந்திருக்கிறது. எழுதிய வரலாற்றின் ஓரங்களில் இதுபோல மறைக்கப்பட்ட சம்பவங்களுக்கான ஆதாரத் துணுக்குகள், எச்சங்கள் ஒட்டியிருக்கின்றது, உண்மையில் கண்டடையப்பட்டிருக்கிறது.”

”எக்காலகட்டத்தில் நிகழ்ந்தது அது?”

“கிறித்து சகாப்தம். புத்த காலத்தின் ஐந்நூறு வருஷங்கள் கழிந்து. தென்பகுதியில் கல்யாணி ஆறு தொடங்கி மாணிக்க கங்கை ஈறாகவும், வடபகுதியில் நயினாதீவிலும் வல்லிபுரப் பகுதியிலும் தமிழர்கள் புத்தசமயிகளாக இருந்தார்கள். ஏறக்குறைய அன்றைய தமிழ்நாட்டு நிலைமையை இலங்கை பிரதிபலித்தது. ஆனால் பிற்காலத்தில் அனுராதபுரத்திலிருந்து தெற்கு நோக்கிய நம் நகர்வு வடபகுதிப் புத்த சமயத் தமிழர்களைத் தனிமைப் படுத்திற்று. மேற் கொண்டு எமது அரசியல் நடப்புகள் தமிழ்ப் பவுத்தர்களை இழக்கச் செய்தன.”

“தெற்கிலுள்ள தமிழ்ப் பவுத்தர்களுக்கு என்ன ஆனது?”

“அவர்கள் சிங்கள் பவுத்தர்களாக மாறியது நடந்தது. அதனால்தான் இந்துசமய சடங்காசாரங்கள், நம்பிக்கைகள் புத்தசமயத்திலே வந்து கலந்தன மிகுதியாகவும்.”

……….

“அது அவர்கள் தவறல்ல”

….

“நமது தவறுதான். அனாத்மவாதமென்று சொல்லிக் கொண்டோம். வேதங்களை மறுதலித்தோம். ஆனாலும் பிரம்மென்ற அம்சத்தின் அடையாளமாய் நின்றிருந்த விஷ்ணுவை புத்தரின் அவதாரமென்று சொல்லிக் கொண்டோம்”

+++++

சுவையான, ஆனால் தீவிரமான உரையாடல். ஒரு கட்டத்தில் குரூரமான பிக்கு குணாநந்த, சங்கரானந்தரிடம் தன் நிலைப்பாட்டிலிருந்து எழுந்த கருத்தை வரலாற்றுக் கூற்றின் பாவனையில் வெளிப்படுத்துவான்.

+++++

”விஷ்ணு அவதாரமான புத்தர் பற்றிய கற்பனை அவசியமான அரசியல் காரணம் பற்றியது. தேரவாதம் மதத்தில் சீலத்தையும் போதனைகளையும் கட்டிறுக்கத்துக்கு வற்புறுத்திய அதே வேளையில், சாந்தியும் அஹிம்சையும் பிரதானப்படுத்தப்பட்ட பௌத்த கிளையாகிப் போனது. அது வெகுஜன செல்வாக்குப் பெறப்பெற சிங்கள இனத்தின் மீது ஒரு மந்தமே வந்து கவிந்துவிட்டது. அந்த மந்த குணத்தைப் போக்கி அவர்களைப் போர்க்குணமுள்ள ஒரு இனமாக மாற்றுகிற ஒரு எத்தனத்தின் விளைச்சல்தான் விஷ்ணு கதை. விஷ்ணு அவதாரி. ஒன்பது அவதாரங்களை எடுத்தவர். மீதி ஒரு அவதாரத்துக்காய்க் காத்திருப்பவர். அந்த ஒன்பது அவதாரங்களும் பெரும்பாலும் அரசியல் காரணம் பற்றியவையே. ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம், நரசிம்மாவதாரம், வராகவதாரம் யாவுமே மூலத்தில் ருத்திரம் நிறைந்தவை. மூர்க்கமும் குயுக்தித்தனமும் உடையவை. அரச ஸ்தாபகங்கள் அவற்றில் நிகழ்ந்துள்ளன. அதனால் தான் விஷ்ணு வணக்கம் பவுத்தத்தில் புகுத்தப்பட்டுள்ளது. வடக்கே வல்லிபுரத்தில் மகா கலைச் செழுமையுள்ள பிரம்மாண்டமான விஷ்ணு கோயில் இருந்ததை அகழ்வாராய்ச்சி கூறுகிறது…..”

+++++

குணாநந்தரின் வாதம் மெள்ள மெள்ள சிங்களப் பேரின வாதத்தின் திசையில் சென்று விடும்.

+++++

Upulvan

விஷ்ணு வழிபாடு இந்து சமயத்தில் வேதங்களிலிருந்து பெறப்பட்டது. வேதங்களில் இந்திரனே அதிகம் குறிப்பிடப்படுகின்றான். மழையின் அதிபதி என்கிற ஸ்தானம் உடையவனாதலால் இது இருக்கலாம். சுவர்க்கத்தின் அதிபதியாகவும் இந்திரன் பேசப்படுகின்றான். ரிக் வேதத்தில் விஷ்ணுவும் வருகிறார். ஆனால் இந்திரனைப் போன்ற பெரிய கடவுள் தகுதி அவருக்களிக்கப்படுவதில்லை. விஷ்ணுவின் பெயராக வேதத்தில் உபேந்திரன் என்ற பெயரும் வருகிறது. இதன் பொருள் இந்திரனின் துணை. பின்னர் இந்து சமயக் கடவுளர் கூட்டம் பல மாறுதல்களுக்குள்ளாகிறது. ஸ்ருதிகளுக்குப் பின்னர் வந்த ஸ்மிருதிகளில் விஷ்ணு மும்மூர்த்திகளுள் ஒருவர். இந்திரன் தன் ஆணவத்தின் காரணமாக அசுரர்களிடம் அடிமைப்பட நேரிடும்போதெல்லாம் அசுரர்களை அழித்து இந்திரனின் சங்கடத்தை தீர்ப்பது விஷ்ணு தான்.

ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட இலங்கையின் நாளாகம நூலான மகாவம்சத்தில் உபுல்வன் என்ற பெயரில் ஒரு கடவுள் வருகிறார். மகாவம்சத்தின் ஆரம்பத்தில் கலிங்க இளவரசன் விஜயன் தன் நாட்டிலிருந்து விலகி இலங்கை வந்தடைகிறான். விஜயன் இலங்கை வந்தடைந்தவுடன் உபுல்வன் என்னும் கடவுள் அவனை ஆசீர்வதிக்கிறார். நான் இலங்கையின் காவல் தெய்வம் ; என் பெயர் உபுல்வன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு விஜயனுக்கும் அவனுடன் இலங்கை வந்தடைந்தோருக்கும் அவர்கள் கைகளில் பாதுகாப்பாக சரடுகளைக் கட்டிவிடுகிறார். குவெணி என்ற நாகர்களின் அரசியுடன் நடைபெறும் மோதலில் உபுல்வன் கட்டிய சரடு விஜயனையும் அவனது படைகளையும் காக்கிறது. இலக்கியச் சான்றுகளில் இந்த உபுல்வன் என்கிற கடவுள் ஏழாம் நூற்றாண்டுக் குறிப்புகளில் பின்னர் மீண்டும் வருகிறார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 13ம் நூற்றாண்டுக் குறிப்புகளில் ”உயர்ந்த கடவுள்” என்று உபுல்வன் குறிப்பிடப்படுகிறார்.

உபுல்வன் என்ற சொல் “உப்பலவண்ணா” என்கிற பாலி சொல்லில் இருந்து மருவியது. “அல்லி போன்ற நீல நிறமுடையவன்” என்பது அதன் பொருள்.

பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில், உபுல்வன் இந்து சமயக்கடவுள் விஷ்ணுவாக அடையாளம் காணப்பட்டார். இரு தெய்வங்களின் வடிவ ஒற்றுமை இதற்கு காரணமாய் இருக்கலாம். கண்டி சாம்ராஜ்யத்தின் போது நிலவிய இந்து சமயத் தாக்கமும் இதற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம். இந்த கால கட்டத்தில் புத்தரின் அருகே நிற்பது மாதிரியாக புத்தர் கோயில்களில் விஷ்ணு சித்தரிக்கப்படலானார்.

இலங்கையில் விஷ்ணு வழிபாடு மரபு பற்றி இன்றைய வரலாற்றாளர்களுக்கிடையே பல வித கருத்துகள் நிலவுகின்றன. உபுல்வனும் விஷ்ணுவும் ஒன்றல்ல என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். சில ஆதாரங்களில் உபுல்வன் வைதீகக் கடவுள் வருணனாக சுட்டப்படுகிறார். அதனாலேயே உபுல்வன் இலங்கையின் பாதுகாவல் தெய்வமாக இருக்கிறார் என்கிற ஐதீகம் தோன்றியதாகக் கருத இடமிருக்கிறது.

மகாவம்சம் போன்று தீபவம்சம் என்னும் நூலிலும் உபுல்வன் பற்றி நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. புத்தர் பரிநிர்வாணம் அடையும் முன்னரே விஜயன் என்னும் க்‌ஷத்திரியன் ஜம்புதீவிலிருந்து கிளம்பி இலங்கை வந்தடைவான் என்றும் அவன் இலங்கையை ஆள்வான் என்ற கணிப்பை வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இலங்கையின் வெற்றிகரமான, பாதுகாப்பான நிறுவுதலைப் பற்றிய கரிசனத்துடன் புத்தர் சக்கரனை அழைத்து (வேதங்களில் வரும் இந்திரன்!) உடன் அதற்காவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார். சக்கரன் உப்பலவண்ணனை அழைத்து இலங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பை அளிக்கிறான்.  சக்கரனின் ஆணையை ஏற்றுக்கொண்டு உப்பலவண்ணன் இலங்கை வந்தடைவதாக தீபவம்சம் சொல்கிறது. தீபவம்சம் சொல்லும் இதே தொன்மத்தகவலை மகாவம்சமும் வலியுறுத்துகிறது. பின்–வேத கால இந்தியத் தொன்மங்களில் காணப்படும் விஷ்ணு – இந்திரன் இருவருக்கிடையிலான நெருங்கிய நட்பு என்ற கருப்பொருளை பௌத்த தொன்மங்களிலும் ஒரு தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக இதைக் கொள்ளலாம்.

+++++

Upulvan Devale in Devinuruwa, Matara

Upulvan Devale in Devinuruwa, Matara

தேவிநுவாரா
இலங்கையின் தென்மூலையில் இருக்கும் நகரம் மாத்தரை. மாத்தரைக்கு தென்கிழக்கில் ஆறு கி மீ தொலைவில் தேவிநுவாரா இருக்கிறது. 13ம் நூற்றாண்டு வாக்கில் முக்கியமான துறைமுகமாக தேவிநுவாரா திகழ்ந்தது. தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத்தகடுகள் மூடிய கூரை கொண்ட புகழ்பெற்ற கோவிலொன்றும் அங்கிருந்தது. இராமாயணத்தில் வரும் ராவணனின் காலத்தில் மலர்ச்சியுடன் விளங்கிய நகரம் இது என்றும் நம்பப்படுகிறது. “பாரவி சந்தேஷாயா” என்னும் பதினைந்தாம் நூற்றாண்டுக் கவிதைப் படைப்பு தேவினுவாராவில் இருக்கும் தெய்வத்தை அசுரர்களின் சம்ஹாரி என்று வர்ணிக்கிறது. இராமாயணத்துடனான இந்நகரத்தின் தொடர்பை குறிக்கும் முகமாக கவிஞர் இதைக் குறிப்பிட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்றுத் தகவலின் படி முதலாம் தப்புல என்னும் அரசனால் இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1587இல் மாத்தரையைத் தாக்கிய போர்ச்சுகீசியப்படை கோயிலைத் தரைமட்டமாக்கி கொள்ளையடித்தது. ஆனால் இரண்டாம் ராஜசிங்கன் என்னும் கண்டி மன்னன் மாத்தரையை போர்ச்சுகீசியர்களிடமிருந்து மீட்டு தேவிநுவாராவில் விஷ்ணு தேவாலயத்தை மீண்டும் கட்டினான்.

Vallipuram Aazhvar Temple, Valli Puram

Vallipuram Aazhvar Temple, Valli Puram

வல்லிபுரம்
யாழ் குடா பிராந்தியத்தில் கிழக்கு வடமராச்சிப் பகுதியில் அமைந்துள்ளது வல்லிபுரம். அங்கு பவுத்தர்கள் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அங்கு ஒரு பிரம்மாண்டமான விஷ்ணு கோயில் இருந்திருக்கிறது என்றும் வரலாற்றாளர்கள் சொல்கின்றனர். இதை வைத்துக் கொண்டு இலங்கை முழுதும் சிங்களர்கள் தான் ஆதியில் வசித்தார்கள் என்ற தவறான பொருள்விளக்கம் கொடுத்துக் கொண்டு சிங்களப் பேரினவாதம் அரசியல் செய்தது வேறு கதை.

காஞ்சிபுரத்திலிருந்து மகாபலிபுரம் செல்லும் வழியில் இருக்கும் ஓர் ஊரின் பெயர் வல்லி புரம். திருக்கழுக்குன்றம் மற்றும் காஞ்சிபுரம் போல வல்லி புரமும் பல்லவர் காலத்தில் பௌத்தம் தழைத்த இடமாக இருந்திருக்கலாம். பல்லவர் காலத்தில் தமிழகத்துக்கும் இலங்கைக்குமிடையே நெருங்கிய வரலாற்றுத் தொடர்பு இருந்தது. வடமராச்சியில் இருந்த வல்லி புரத்திலும் பௌத்தம் தழைத்திருக்கலாம். பௌத்த மடாலயங்கள் நிரம்பியிருந்த நாகைப்பட்டினம் கரை வல்லி புரத்திலிருந்து அதிக தூரத்தில் இல்லை என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். வல்லி புரத்திலிருந்து ஆந்திரக் கரையை அடைதல் எளிது. வல்லி புரம் ஆழ்வார் கோயிலுக்கு அருகே அகழ்வாராய்ச்சியில் கிடைத்த ஆளுயர புத்தர் சிலையை சர் ஹென்றி ப்ளேக் என்கிற ஆங்கில அதிகாரி தாய்லாந்து நாட்டு மன்னருக்கு அன்பளிப்பாக 1906ல் அளித்தார். புத்தர் சிலை கிடைத்த விதம் காஞ்சி கோயில்களில் கிடைத்த புத்தர் சிலைகளையும் சின்னங்களையும் நினைவு படுத்துகிறது. அந்த சிலை பாங்காக்கில் உள்ள ஒரு கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வல்லிபுர புத்தர் சிலை ஆந்திராவின் புராதன அமராவதி நகரில் தழைத்த பௌத்த சிற்பக்கலை பாணியில் செதுக்கப்பட்டது என்பதில் வரலாற்றாசிரியர்களுக்கு நடுவே ஒருமித்த கருத்து உண்டு. ஆனால் வல்லிபுரத்தில் கிடைத்த தங்கத் தகட்டில் பொறித்த வரிகளை இலங்கை வரலாற்று வல்லுனர் பரணவிதன வேறு விதமாகப் பொருள் கொண்டமை  “யாழ்ப்பாணப் பிரதேசம் சிங்களவர்களின் கீழ்தான் இருந்தது” என்ற பேரினவாதிகளின் தியரியை வலுப்படுத்தியது. ஆனால் பரணவிதனவின் அனுமானங்களை பாகிஸ்தானிய வரலாற்று வல்லுனர் ஏ ஹெச் தானி மறுத்தார். தகட்டில் இருந்த எழுத்து வடிவங்களை வைத்து தகடு நான்காம் நூற்றாண்டுக்கு முன்னதானதாக இருக்க முடியாது என்று சொன்னார். பரணவிதன அந்தத் தகடு இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டது என்று சொல்லியிருந்தார். வல்லிபுர தகட்டின் பிராகிருத எழுத்துப் பொறிப்பு திராவிடப் பாணியைப் பின்பற்றியதாகவே இருக்கிறது என்றும் ஏ ஹெச் தானி சொன்னார். வல்லி புரத் தகட்டில் பொறிக்கப்பட்டிருப்பது ஒன்றரை அடிகள் மட்டுமே கொண்ட சிறிய வாக்கியம் என்பதால் உறுதியான, தெளிவான முடிவுக்கு வருதல் மிகக் கடினம்.

கந்தரோடையின் (இது குடா நாட்டில் சுன்னாகத்துக்கருகே இருக்கும் ஊர் ; இங்கு நடந்த அகழ்வாய்வுகளில் புராதன பௌத்த சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன) பௌத்த சின்னங்களையும், வல்லி புரப் புத்தர் சிலையையும் ஒப்பு நோக்கும் போது ஆந்திர பௌத்தத்தின் தாக்கம் யாழ்ப்பாண பௌத்தத்தில் ஆழமாக இருந்திருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியும்.

குடா நாட்டில் இருந்த தமிழ்ப்  பௌத்தர்கள்  என்னவானார்கள்? தமிழ்நாட்டில் வல்லி புரம் மற்றும் காஞ்சியில் இருந்த பௌத்தர்கள் போன்று அவர்களும் பிற்காலத்தில் தம் அடையாளத்தை தொலைத்து விட்டு இந்து சமயத்தாராகியிருக்கலாம்.

உதவிய கட்டுரைகள் :
Upulvan or Uppalavanna – the guardian deity of sri lanka – Professor Dhammavihari Thera www.sobhana.net/contact/english/dhammavihari/dv088.doc

நூல்கள் :

Buddhism among Tamils in Pre-Colonial Tamilakam and Ilam Part 1 – Edited by Peter Schalk – Uppsala University
கனவுச்சிறை – நாவல் – எழுத்தாளர் தேவகாந்தன் – காலச்சுவடு பதிப்பகம்


மேகங்களுக்கு அப்பால் நீல வானம்

$
0
0

ஹரி பார்த்திக்கு சொன்னது :

“இன்று காலை தில்லியிலிருந்து கிளம்பிய போது சுசிதாவும் அதே விமானத்தில் வருகிறாள் என்று எனக்கு தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரே தொழிற் கண்காட்சிக்கு செல்கிறோம் என்றாலும் சுசிதா என்னுடன் பயணம் செய்ய மாட்டாள் என்று தெரியும். நானும் என் பயண விவரங்களை அவளுக்கு தெரிவிக்கவில்லை. கண்காட்சித் திடலுக்கு வந்த பின்னர் போனில் தொடர்புகொள்வதாக சொல்லிவிட்டேன்.

நேர்முகத்துக்குப் பிறகு பணியமர்த்தப்படும் தகுதி சுசிதாவுக்கில்லை என்று நாம்இருவருமே பரிந்துரைத்தோம். ஆனால் நேர்முகமே கண்  துடைப்பு என்று நமக்கு பின்னால் புரிந்தது. உயர் அதிகாரி நம் பரிந்துரையை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பணியில் நியமித்ததோடு மட்டுமின்றி சுசிதாவுடைய வேலையின்  மேற்பார்வைப் பொறுப்பையும்  நான் மறுதலித்தும் என் தலையில்  திணித்தார். மேற்பார்வை எல்லாம் சும்மா பேச்சுக்காக ! அதிகாரப் படிநிலையும் இல்லை. ஒன்றும் இல்லை. சுசிதா மணிக்கணக்கில் அதிகாரியின் அறையே பழியென்று கிடக்கிறாள். மருந்துக்கும் கூட அலுவல் சம்பந்தப்பட்ட ஓர் ஆலோசனைக்கும் அவள் என்னிடம் வருவதில்லை. சொல்லப்போனால் நான் அதைப்பற்றி கவலையும் படவில்லை.

பாதுகாப்பு பரிசோதனை முடித்து புறப்பாட்டு அழைப்புக்காக காத்திருந்தேன். அதிகாலை பொழுதின் தூக்கக்கலக்கத்தை காபி குடித்து முறிக்க முயன்று கொண்டிருந்தேன். “ஹை ஹரி” என்று யாரோ என் தோளைத் தட்டினார்கள். திரும்பிப்பார்த்தால் சில வருடங்களுக்கு முன்னர் நான் டேனிஸ்கோவில் வேலை பார்த்த நாட்களில் என்னுடன் வேலை பார்த்த ஆதித்யா. அவன் இப்போது டி எஸ் எம்-மில் பெரிய பொறுப்பில் பணி புரிகிறான். பெரிதாக அனுபவமோ விஷய ஞானமோ இல்லாதிருந்தும், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கும் அதிர்ஷ்டம் அவனுக்கிருந்தது. என்னை விட மூன்று மடங்கு சம்பளம் வாங்குகிறான். பெரிய மனித தோரணை அவனுடைய உடல்மொழியில் மட்டுமில்லாமல் அவன் வாய்மொழியிலும் ஒட்டியிருந்தது.

நல விசாரிப்புகள், வணிகக் கிசுகிசுக்கள் என வழக்கமான விஷயங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு ஆதித்யா சுசிதா நம் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருப்பதைப் பற்றி கேட்டான். நான் சிறிது துணுக்குற்றேன். இவனுக்கு எப்படி அவளைத் தெரியும்? அவள் உணவுத்தொழிற்துறைக்கு புதிதாயிற்றே! என் சிந்தனையைப் படித்துவிட்டவன் மாதிரி சுசிதாவை அவன் எப்படி அறிவான் என்பதற்கு விளக்கம் கொடுத்தான். சுசிதாவின் கணவர் ஆதித்யாவின் குடும்ப நண்பராம். நான் அதிகம் எதுவும் சொல்லவில்லை. “ஆம் சுசிதாவின் என் அணியில் தான் இருக்கிறாள். சேர்ந்து இரு மாதங்கள் ஆகின்றன. எப்படி வேலை செய்கிறார் என்பது போகப்போகத் தான் தெரியும்.”

ஆதித்யாவும் நான் பயணம் செய்யவிருந்த விமானத்தில் மும்பை வருகிறானாம். இருவரும் சேர்ந்தே விமானம் ஏறினோம். எனக்கு இரு வரிசை முன்னர் ஒரு ஜன்னலோர இருக்கையில் ஆதித்யா அமர்ந்தான். அவனுக்கு பக்கத்துக்கு இருக்கை கொஞ்ச நேரம் காலியாக இருந்தது. எல்லோரும் ஏறிய பிறகு கடைசியாக விமானத்துள் சுசிதா நுழைந்தாள். நான் உட்கார்ந்திருந்ததை அவள் கவனித்ததாக தெரியவில்லை. ஆதித்யாவைப் பார்த்ததும் புன்னகை பூத்தவாறே அவனுடைய பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

என் பார்வை அவர்கள் மீதே இருந்தது. ஒருவர் மீது  ஒருவர் இழைந்த வண்ணம் அவர்கள் நெருக்கமாய் பயணித்ததை கண்ட போது இரு குடும்ப நண்பர்களின் பரிச்சயம் போல இருக்கவில்லை. சுசிதா ஆதித்யாவின் தோள் மீது சிரத்தை புதைத்துக் கொண்டாள். தன் கரத்தை ஆதித்யாவின் கரத்தோடு கோர்த்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்துக்கு ஆதியாவின் கரங்கள் சுசிதாவின் தோள்களின் மேல் இருந்த மாதிரியும் இருந்தது.

என்னை சந்தித்ததை ஆதித்யா நிச்சயம் சொல்லியிருப்பான். சுசிதா ஒருமுறை கூட தன் முகத்தை திருப்பி பின் வரிசைகளை பார்க்கவில்லை. பாத்ரூம் செல்வது மாதிரி நடந்து அவர்களைக் கடக்கும் போது அவர்கள் இருவரையும் கைத்தொலைபேசியின் காமிராவில் சிறைப்படுத்திவிடலாமா என்ற குழந்தைத்தனமான எண்ணம் தோன்றி மறைந்தது.

விமானம் தரையை தொட்டு கதவுகள் திறக்கப்பட்டனவோ இல்லையோ சுசிதா அவசர அவசரமாக முன்புறம் சென்று முதலாம் வரிசையில் உட்கார்ந்தவர்கள் இறங்கும் முன்னர் இறங்க சென்று விட்டாள். நான் மெதுவாக இறங்கி ‘கோச்சில்’ ஏறி டெர்மினலை அடைந்தேன். பயணப் பேட்டிக்காக நான் காத்திருந்த போது ‘ஹலோ சார்’ என்ற படி சுசிதா அருகே வந்தாள்.

சற்று தள்ளி நின்றிருந்த ஆதித்யா “ஸீ யூ” என்று என்னுடன் கை குலுக்க  அருகே வரவும், சுசிதா தற்செயலான சந்திப்பைப் போல “ஆதித்யா சார் நீங்களா? மும்பைல? பார்த்து எத்தனை நாளாச்சு ? ஒரு வருஷத்துக்கு மேலாச்சு!  முடியெல்லாம் கூட கொட்டிப் போயிடிச்சு…” என்று சொல்லி பல்வரிசையை காட்டினாள். என் பெட்டி பெல்ட்டில் வரவும் அதை எடுத்துக் கொண்டேன். “என்ன சுசிதா, ஆதித்யாவுக்கு முடி கொட்டிடுச்சுன்னு இப்பதான் தெரிஞ்சுதா ? ஒன்றரை மணிநேரமா அவர் பக்கத்துல உக்கார்ந்த போது பார்க்கலியா?” என்று நக்கலாகச்  சொன்னேன். இருவரும் சில கணங்களுக்கு அசட்டுப் புன்னகை புரிந்தவாறு நின்றிருந்தார்கள். ஆதித்யா அவ்விடத்திலிருந்து அகன்றான்.

விமான நிலையத்துக்கு வெளியே கருப்பு-மஞ்சள் டாக்சியைப் பிடித்து கோரேகாவ்ன்-இல் இருக்கும் தேசிய பொருட்காட்சி மையத்துக்கு செல்லும் வழியெல்லாம் சுசிதா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவளின் முகபாவம் எப்படி இருந்தது என்றும் தெரியவில்லை. அவள் முன் சீட்டில் ஓட்டுனருக்குப பக்கத்திலும் நான் பின் சீட்டிலும் உட்கார்ந்திருந்தோம்.”

பார்த்தி சொல்கிறான் :

“சுசிதாவும் ஹரியும் பொருட்காட்சி மையத்துக்கு வருவதற்கு முன்னரே நானும் இன்னொரு சக-ஊழியரும் சாவடியைத் தயார் செய்து வைத்திருந்தோம். ஹரி வந்ததும் வராததுமாக என்னை காலை சிற்றுண்டி சாப்பிட அழைத்தான். பொருட்காட்சி மையத்துக்கு வெளியே இருந்த ஓர் உடுப்பி ஓட்டலில் இட்லி சாப்பிட்டோம். ஹரி விமானப் பயண அனுபவத்தைக் சொன்னதும் உரக்க சிரித்தோம். கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் தெரிவு செய்யாத சுசிதாவை உயர் அதிகாரி நியமித்ததை ஒரு வித கசப்புணர்வுடன் சகித்துக் கொண்டிருந்த எனக்கு  ஹரி சொன்ன  சம்பவம் மலிவான மகிழ்வுணர்வை ஏற்படுத்திற்று.   புறச்செருகல்கள், இடைச்செருகல்கள், ஊகங்கள், மூர்க்கமான கற்பனைகள் என்று ஹரி சம்பவத்துக்கு கண்ணும்  காதும் இட்டு ஒரு கதாகாலட்சேபனை செய்பவன் போல் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தேன்.”

சுசிதா பார்த்திக்கு சொன்னது :

“பெண்களைக்  குறைவாக எடை போடுபவர்களை சந்திப்பது எனக்கொன்றும் புதிதல்ல. பெண்களை கையாலாகாதவர்கள் என்று நினைக்கும் மனப்போக்கு எல்லா ஆண்களிடமும் துளியேனும் இருக்கிறது. ஹரியிடம் அது கொட்டிக்கிடந்தது. அவனுடன் வேலை பார்த்த ஒரு நாளும் நான் வசதியாக உணர்ந்ததில்லை. என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக அவன் பேசி வந்தது என் காதில்  எட்டாமல் இல்லை. ஆனாலும் கண்ணியக் குறைவிலாமல் பேசியும். முடிந்த வரை மூத்த ஊழியருக்கு காட்டவேண்டிய மரியாதையுணர்வுடனும் பழகி வந்ததை ஹரி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவனுக்கு என் மேலிருந்த  வெறுப்பு அவனுடைய நிதானவுணர்ச்சியை இழந்த சம்பவம் ஒன்று சென்ற வருடம் நடந்தது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும்! போன வருடம் மும்பையில் ஒரு பொருட்காட்சியில் பங்கு கொண்டோமே, அப்போது நானும் ஹரியும் ஒரே விமானத்தில் வந்தோம். அதற்கு அடுத்த நாள் நான் உங்களிடம் அது பற்றி ஹரி ஏதும் சொன்னானா  என்று கேட்டேன். நீங்கள் ‘எதுவும் சொல்லவில்லை’ என்று சொன்னீர்கள். ஹரியும் அதே விமானத்தில் பயணம் செய்யப்போகிறான் என்று உண்மையில் எனக்கு தெரியாது.

டி எஸ்  எம்-மில் வேலை பார்க்கும் என் நண்பர் ஆதித்யாவை ஒரு முறை உங்களுக்கு அறிமுகம் செய்தி வைத்தேனில்லையா? நான் வேலை பார்த்த முதல் நிறுவனத்தில் அவர் என் அதிகாரியாக இருந்தார். நான் பிறந்து வளர்ந்த ஹரித்வார் தான் அவருக்கும் சொந்த ஊர். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் முன்னதாக ஆதித்யாவுடன் போனில் பேசுகையில் நாங்களிருவரும் ஒரே விமானத்தில் மும்பை செல்லப்போகிறோம் என்று தெரிந்தது. இருவரும் பக்கத்து இருக்கைகளில் உட்காரும் படியாக இருக்கைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

நான்கு வரிசை தள்ளி ஹரி உட்கார்ந்திருக்கிறான் என்று ஆதித்யா எனக்கு சொன்னார். அதற்குள் விமானம் கிளம்பி விட்டதால் டெர்மினலில் ஹரியை சந்திக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஹரியுடன் அவர் நடத்திய உரையாடல் பற்றியும் ஆதித்யா என்னிடம் சொன்னார்.

ஹரிக்கு நானும் ஆதித்யாவும் நண்பர்கள் என்று தெரியாது. ஒரு முன்னாள் சக-ஊழியர் என்ற அடிப்படையில் ஹரி மனந்திறந்து என்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதை ஆதித்யாவிடம் பிட்டு வைத்து விட்டான்.

‘விற்பனை முன்னனுபவமும் இல்லை ; உணவுத்துறை நிறுவனத்தில் பணி  புரிந்ததும் இல்லை. வாடிக்கையாளரிடம் எப்படிப் பேசுவது என்ற இங்கிதமும் தெரியவில்லை. இவளைப் பார்த்துக்கொள் என்று என் தலையில் கட்டி விட்டார் என் உயர் அதிகாரி. பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறாள் என்றால் தனக்கு கீழ் வைத்துக் கொள்வது தானே. ஒன்றை ஒத்துக் கொள்ள வேண்டும். கவர்ச்சியான உடை அணியும் திறமை அவளிடம் இருக்கிறது’

ஒரு செக்சிஸ்டின் வக்கிரம் மற்றும்  சமநிலைப் பார்வையுடன்  ஒருவரைக் கணிக்கும் திறமையற்று தோல்வியடைந்த ஒரு மேலாளரின் மனநிலை – இரண்டும்  கலந்த கருத்தை என் நண்பரிடமே பகிர்ந்து கொண்ட ஒரு முட்டாள் அவன். ஆதித்யா பகிர்ந்து கொண்ட விஷயம் என்னுள் சினத்தை உண்டு பண்ணிற்று. தேர்ந்தெடுத்த கெட்ட வார்த்தை உரிச்சொற்களால் ஹரிக்கு என் மனதில் அர்ச்சனை செய்தேன். என் முக வாட்டத்தை கண்ட ஆதித்யா ஆறுதல் தரும் வார்த்தைகளால் ஹரியின் அசட்டுத்தனத்தை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டார். சிறிது சமாதானமடைந்ததும் எங்கள் பேச்சு வேறு திசைகளில் திரும்பிவிட்டது.

டெர்மினலில் பெட்டிகளை சேகரிக்கும் பெல்ட்டுக்கருகில் ஹரியை சந்தித்தேன். ஹரியிடமிருந்து விடை பெற்றுக்கொள்ள அந்த சமயம் அங்கு வந்த ஆதித்யாவையும் அங்கு எதேச்சையாய் சந்தித்ததைப் போல காட்டிக்கொண்டேன். எத்தனை கோபமிருந்தாலும் கண்ணியமாக தன்  தலையை காப்பாற்றிக் கொள்ளும் வாய்ப்பை நானே அவனுக்கு வழங்கினேன். என்னுடைய நாகரிக நடத்தையை அவன் புரிந்து கொள்வான் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஏனென்றால் நாகரிகம் தெரிந்தவர்களால் தான் அதை புரிந்து கொள்ளமுடியும்.

டாக்சியில் கொரேகாவ்ன் போகும் போதும் என் எரிச்சலை வெளிக்காட்டாமல் சாதாரணமாக பேசினேன். ஆதித்யாவுக்கு வயதான தோற்றம் வந்துவிட்டது எனவும் வழுக்கைக் கோடு இன்னும் மேலேறிச்  சென்றுவிட்டது எனவும் சொல்லிக் கொண்டு வந்தான். அவன் பேசுவதை கேட்பதில் ஆர்வமில்லை என்றாலும் சிரிப்பது போல் பாவனை செய்தேன்.”

பார்த்தி சொல்கிறான் :

ஆறு மாதம் முன்பு, ஹரி வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லும் முன்பு, உடுப்பி ஓட்டலில் ஹரி சொன்ன கதையை கேட்டு உரக்க சிரித்தது எனக்கு ஞாபகம் வந்தது. சுசிதா விவரித்த சம்பவத்தில் டாக்சியில் அவள் சிரித்துக் கொண்டே வந்ததற்கும் நான் சிரித்துக்கொண்டே ஹரி சொன்னதை கேட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? ஆறு மாதத்தில் ஏற்பட்ட படிநிலை மட்ட மாறுதல்கள் இன்று நிறுவனத்தில் என்னை உயர் அதிகாரியாக ஆக்கியிருக்கிறது. அதன் காரணமாக வாடிக்கையாளரொருவரை  காண்பதற்காக சுசிதாவுடன் ருத்ரபூர் செல்லுகையில் நடந்த உரையாடலின் போது விமான சம்பவத்தின் இன்னொரு கோணம் எனக்கு தெரிய வந்தது. இதே சம்பவத்தைப் பற்றி ஆதித்யா என்ன சொல்லக்கூடும்? ஆதித்யா எனக்கு தெரிந்தவரில்லை. அவர் கோணம் எனக்கு தெரிய வாய்ப்பேயில்லை.

அவசர அவசரமாக ஹரி சிற்றுண்டிக்காக என்னை வெளியே அழைத்துக் சென்றதும், அதே பொருட்காட்சியின் போது  ‘ஹரி ஏதேனும் சொன்னாரா?’ என்று சுசிதா என்னிடம் கேட்டதும், சுசிதாவுடனான  உரையாடலின்  வழியை கற்பிதமான முக்கியத்துவத்தைக் கொண்டு நானே அடைத்துவிட்டதும், மாதங்கள் கழிந்த பின்னர் ஹரி நிறுவனத்தில் இல்லாது போன பின்னர் சுசிதாவின் கோணம் எனக்கு தெரிய வருவதும் என விமான சம்பவம் தறுவாய், சூழல் மாற்றங்களுக்கிடையில் புதுப்புது  நிறங்களுடன், புதுப்புது அர்த்தங்களுடன்  வெப்ப நீரூற்றைப்போல் கொந்தளித்தவாறிருக்கிறது.

பார்த்தி பின்னொரு சமயம் ஒரு வலைதளத்தில் வாசித்தது :

என் தோழி S-இன் வரவுக்காக விமான நிலையத்தில் காத்திருந்தேன். அதிகாலை புறப்படும் விமானத்தில் நான் மும்பை செல்கிறேன். S-ம் மும்பை செல்கிறாள். அவள்  செல்வது தன் நிறுவனம் பங்கு கொள்ளும் கண்காட்சியில் கலந்து கொள்ளச் செல்கிறாள். நான் மும்பை செல்கிறேன் என்று சொன்ன போது S-இன் கணவர் எனக்கு S மும்பை செல்லும் விஷயத்தை தெரியப்படுத்தினார். S-ம் நானும் பக்கத்து இருக்கைகளில் உட்காருமாறு  முன்பதிவும் செய்து கொடுத்தார்.

’நான் கிளம்ப தாமதமாகிவிட்டது ; நீ செக்-இன் செய்து கொள் ; சிறிது நேரத்தில் அங்கு வந்து சேருகிறேன்’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள். விமான நிலையத்துக்கு வந்து செக்-இன் செய்துவிட்டு பாதுகாப்பு பரிசோதனைக்கான வரிசையில் எனக்கு முன்னதாக H நின்றிருந்தான் ; H என் பழைய பரிச்சயம்.  சில வருடங்கள் முன்னால் நானும் H -ம்  ஒரே நிறுவனத்தில் வேலை செய்திருந்தோம். அவன் கொஞ்சம் குண்டாக கொழுகொழுவென்று இருந்தான். அவன் அங்கவளைவுகளை  அவன் வித்தியாசமாக நினைக்காத படி பார்த்துக்கொண்டே சில நிமிடங்களுக்கு பேசிக் கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்னர் என் வாழ்வில் நடந்தேறிய அதிரடி நிகழ்வுகளைப் பற்றி அவன் இன்னும் கேள்விப் படவில்லை போலும். கேள்விப் பட்டிருந்தால் என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல் கடந்து சென்றிருக்கலாம்.

“அலமாரியில்  இருப்பவர்கள்”  என்ற ஆங்கிலச் சொற்றொடர் எத்துனை பொருத்தமானது. இருண்ட அலமாரிக்குள் தாழ் போட்டுக்கொண்டு மூச்சுத் திணறியபடி பல ஆண்டுகள் இருந்துவிட்டேன். நடுவில் பெற்றோரின் வற்புறுத்தலை தட்ட முடியாமல் திருமணம் செய்து கொண்டேன். முதல் வருடம் ஒரு மாதிரி சமாளித்தேன். மனைவி ஒரு வித்தியாசத்தையும் கண்டு பிடிக்கவில்லை. அவளுக்கு பாலுறவில் விருப்பம் குறைவாக இருந்தது அல்லது நானாகவே அப்படி நினைத்துக் கொண்டேன். ஆடவர்கள் மேல் ஈர்ப்பு இருந்தாலும் திருமண உறவில் இருந்தவரை ஒழுக்கம் பிறழாமல் பற்றுறுதியுடனேயே இருந்து வந்தேன். இரண்டாவது வருடம் இடைவெளி பெருக ஆரம்பித்தது. விவாகரத்து கேட்டாள். விலகிக் கொண்டோம். விவாகரத்து பெறும் சமயத்திலும் என் (முன்னாள்) மனைவிக்கு என் பாலியல் சார்பு பற்றிய ஐயம் தோன்றவில்லை என்றே எண்ணுகிறேன். மனைவியே கண்டு பிடிக்க முடியாமல் போன போது கூட சேர்ந்து வேலை செய்த நண்பர்கள் எப்படி கண்டு பிடித்திருக்க முடியும்!

நிலையான துணை இல்லாமல் காலத்தை கழிப்பது  சொல்லொணா அவஸ்தையை உண்டு பண்ணிற்று. வறண்ட பாலைவனத்தில் பயணிப்பவனுக்கு எப்போதாவது பருகக் கிடைக்கும் நீரைப் போல இரண்டு – மூன்று தற்காலிக உறவுகள் ; ஆனால் எதுவும் நிலைக்கவில்லை. விரக்தி அதிகமான ஒரு நாளில், விளைவுகள் பற்றி யோசிக்காமல், நிதானமிழந்த தருணத்தில் ஒரு விபத்து நடந்தது. என் அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞனின் பின் பாகத்தை அவன் சம்மதமில்லாமல் தொட்டு விடவும் பிரச்னை வெடித்தது. நடந்த சம்பவத்துக்கு எல்லோர் முன்னிலையிலும் அந்த இளைஞனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.  பாலியல் சிறுபான்மையரின் உரிமைகள் பற்றிய பிரக்ஞை சிறிதேனும் இல்லாத இந்திய நிறுவனச் சூழல் ; முகத்துக்குப் பின்  கேலி செய்யும் சக ஊழியர்கள் ; அனுதாபம் காட்டிக் கொண்டே உள்ளூர மகிழும் மேலதிகாரிகள். நல்ல வேளை, அடிப்படையில் என் நிறுவனம் சர்வ தேச நிறுவனம். விஷயம் தலைமை அலுவலகத்தை எட்டியது. ‘ஹோமொபோபிக்’ மனோபாவங்கள் வெற்றி பெறா வண்ணம் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு மாத கட்டாய விடுமுறையில் இருந்த நான் கவுரவத்துடன் பணியில் திரும்பச் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

H சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான். அவன் வேலை செய்யும் நிறுவனத்தைச் சொல்லவும் எனக்கு ஆச்சர்யம். S வேலை செய்யும் அதே நிறுவனம். S -ஐப் பற்றி விசாரித்தேன். அவனும் அவளும் ஒரே அணியில் வேலை செய்வதாகச் சொன்னான்.

அவன் போர்டிங் கேட்டுக்குச்  சென்ற பிறகு S இன் வரவுக்காக காத்திருந்தேன். எப்போதும் போல் அன்ன நடை போட்டு தாமதமாக வந்தாள். விமானத்துள் சென்று நாங்கள் அமர்ந்தவுடன் H அதே விமானத்தில் வந்திருக்கிறான் என்று சொன்னேன். பின் வரிசையில் எங்கேனும் உட்கார்ந்திருப்பான் என்று  சொன்னேன். அவள் ஆர்வம் காட்டவில்லை. ”தூக்கம் வருகிறது ; இறங்கும் போது சந்தித்துக் கொள்ளலாம்” என்று சொன்னாள். விமானம் பறக்குமுன்னரே தூங்கிப் போனாள்.

சில நிமிடங்களில் அவள் தலையை என் தோள்களில் சாய்த்துக் கொண்டாள். அவள் வலக்கையை  என் தொடைப்பகுதியில் போட்டுக் கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.  டியோடரண்ட்-டின் வாசத்தை முகர முடிந்தது. அவளின் மார்புகள் அளவாக விம்மின. அவள் வலக்கையால்  என் இடக்கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள். பல வருடங்களாகக் செய்யாத ஒன்றை அப்போது நான்  செய்தேன். அவள் கையை விலக்கிக் கொண்டு  அவள் முதுகுப் புறத்தை தொட்டேன். திருமண வாழ்க்கையின் துவக்க காலம் ஞாபகத்தில் வந்தது. ஒரு வருட தாம்பத்ய வாழ்க்கையில் என்னுடைய ‘ஓரியெண்டஷனை’ என் மனைவி கண்டு பிடிக்க முடியாது போன காரணம் எனக்கு புரிந்தது. அவள் கழுத்துப் புறத்தை வருடிக்கொண்டிருந்தேன். ஒரு சமயம் என் வலக்கை அவளின் கூந்தலை தடவியது.  குற்றவுணர்வும்  ஆனந்தவுணர்வும் ஒரு சேரப் போட்டியிட்டன. அதுவரை என்னைப் பற்றி நானே அறிந்திராத ஓர் அம்சத்தை அறிய வைத்தன.

“என் கணவரின் வடிவான பின் பாகத்தை நோட்டமிடாதே” என்று என் கன்னத்தை கிள்ளியிருக்கிறாள் ; தன் இரு கைகளால் இதமாக என் தோள்களுக்கு மசாஜ் செய்திருக்கிறாள் ; டிஸ்கோ-க்களில் என்னுடன் சேர்ந்து  குதியாட்டம் போட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் தோன்றிராத உணர்வு அன்று அந்த விமானப்பயணத்தில் என்னுள் எழுந்தது. ஆனந்தவுணர்வு சரி-தவறு என்ற சமூக அளவுகோல்களுக்குள் அடங்காது என்பதை பல வருடங்களுக்கு முன்னாலேயே உணர்ந்த எனக்கு ஆனந்தானுபவத்தின் இன்னொரு புது கால்வாய் அந்த ஆகாய விமானப் பயணத்தின் போது திறந்தது.

விமானம் தரையிறங்கத்  தொடங்கியதும் S விழித்துக் கொண்டாள். விமானம் தரை தொட்டதும் ‘பை’ சொல்லிவிட்டு வேகமாக முன்னாள் சென்று முதலாவதாக விமானத்திலிருந்து இறங்கிச் சென்றாள். H-ஐ தவிர்க்கிறாளோ?   ‘டெர்மினலை’ அடைந்த நான் என் ‘லக்கேஜ்’க்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. என்னுடைய ‘லக்கேஜும்’ H-ன் ’லக்கேஜும்’ கடைசியாக வந்தன. Hம் நானும் ‘லக்கேஜ்’ வந்தபிறகும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். S-ஐ அவன் விமானத்தில் பார்க்கவில்லை என்று தோன்றியது. S விமான நிலையத்துக்கு வெளியே எனக்காகவோ H -க்காகவோ காத்திருக்கவில்லை.    என்னைத் தவிர்க்கிறாளோ? நான் S-ஐ சந்தித்தது அன்றே கடைசி.

பார்த்தி சொல்கிறான் :

வலைத்தளத்தில் எழுதுபவரின் பெயர் என்னவென்று தெரியவில்லை. அது ஆதித்யாவாக இருக்க சாத்தியமேயில்லை. ஏனெனில் உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இந்திக்காரன் ஆதித்யா தமிழில் எப்படி எழுத முடியும்? வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதி. பதில் வந்தால் கடிதத்தின் இறுதியில் எந்தப் பெயரில் ஒப்பம் இடப்பட்டிருக்கிறது என்று பார்த்து விடலாம். அது எனக்கு முக்கியமாகப் படவில்லை.  யாரோ எழுதிய கற்பனைக் கதை இது என்றே  கொண்டாலும், சில வருடங்களுக்கு முன்னர் இரு விதமாகக்  கேள்விப்பட்ட ஒரே சம்பவத்தின் நீட்சியாகவே எனக்கு தோன்றியது. ஹரியும் சுசிதாவும் என் தொடர்பில் இல்லை. ஆதித்யாவை நான் அறிந்ததில்லை. இம்மூவரின் அனுபவத்தில் ஒரு நேரடிப் பாத்திரமாக நான் பங்கு பெறவில்லை. ஒவ்வொருவரின் பார்வையிலும் சொல்லப்பட்ட  அனுபவ விவரணைகளை  (கற்பனையான மூன்றாவது விவரணையையும் சேர்த்து!) ஆணாதிக்க மனோபாவத்தில் தொடங்கி பெண் மைய நோக்கு வழியாக வேற்றுமை தாண்டிய அன்புணர்வு நோக்கிய என் உருவகப் பயணத்தின்  விவரணைகளாக எடுத்துக் கொண்டேன்.

நன்றி : வல்லினம்



வருடம் முடிகிறது

$
0
0

சக்கரவாளம் கட்டுரைத் தொடர் இருபத்தியெட்டு இடுகைகளுடன் நிற்கிறது. கடும் அலுவலகப் பணிச்சுமை காரணமாக தவிர்க்க முடியாத இடைவெளி ஏற்பட்டுவிட்டது. கட்டுரைத்தொடரை மே மாதத்துக்குள் எழுதி முடித்துவிட வேண்டும்! பார்ப்போம் நடக்கிறதா என்று!

இவ்வலையில் பதியப்பட்டிருந்த இருபது சிறுகதைகளை நீக்கி விட்டேன். அச்சிறுகதைகளை  எல்லாம் ஒரு தொகுதியாக காலச்சுவடு நிறுவனம் வெளியிடவிருக்கிறது. தொகுதியின் தலைப்பு – டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில். அச்சிடப்பட்டவுடன் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

இவ்வருடம் இரண்டே இரண்டு சிறுகதைகள் தான் எழுதினேன். வரும் வருடத்தில்  அதிக எண்ணிக்கையிலான சிறுகதைகள் எழுத வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

இரண்டு நண்பர்களுக்கு என் நன்றியை நான் அவசியம் தெரிவிக்க வேண்டும் –  நட்பாஸ் மற்றும் ஸ்ரீதர் – என் கட்டுரைகள் பற்றியும் கதைகள் பற்றியும் தம் கருத்துகளைப் பகிர்பவர்கள். மின்னஞ்சல் வாயிலாக அடிக்கடி அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். சலிப்பு காட்டாமல் ஒவ்வொரு முறையும் படைப்பு பற்றிய குறை-நிறைகளை சொல்லுவார்கள். அவர்களின் மாறாத ஊக்கம் தான் என் முதல் சிறுகதைத் தொகுதி வரை என்னை வழி நடத்தியிருக்கிறது. இத்தனைக்கும் இருவரையும் நான் சந்தித்தது கிடையாது. 2016 – இல் இவ்விரு நண்பர்களையும் சந்தித்து விட வேண்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

 

Capture


காணாமல் போனவன்

$
0
0

யார் கண்ணிலும் படாத படி காணாமல் போய் விட வேண்டும் என்று பல முறை எனக்கு தோன்றியிருக்கிறது. முன்னர் இல்லாத வகையில் இம்முறை எண்ணத்தின் தீவிரம் அதிகமாய் இருந்தது. அதைச் செயல் படுத்தாமல் இருக்க முடியாது என்று தோன்றிற்று. என் இதயத்துக்கு நெருக்கமானவர்களின் பார்வையில் நான் படுவது நின்று போய் சில காலம் ஆகியிருக்கிறது. நான் தான் அதை உணராமலேயே இருந்திருக்கிறேன். மற்றவர்கள் கண்ணில் காணாமல் போனதும் என் மனப்பரப்பில் நிம்மதி பரவிற்று. நிம்மதி மட்டுமல்ல. அசாதாரண சுகமும். இதற்கு முன்னர் உணர்ந்திராத இலேசான தன்மையையும் அடைந்தேன்.

என் தம்பி சதா பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று வீட்டில் இருந்து ஓடிய பிறகு அவன் ஒரு ஹீரோவாக ஆனான். சிறுவயதில் கடைசி பென்ச் நண்பர்களின் சகவாசத்தில் படிக்காமல் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் திரிந்து வந்தான் அவன். “அவிழ்த்து விட்ட கழுதை” “உதவாக்கறை” என்றேல்லாம் பட்டப் பெயர்கள் தாங்கி உலவினான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து விலகி எங்கோ சென்று விட்டான். அவன் காணாமல் போனதும் வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டனர். ஊரெங்கும் அவனைத் தேடி நானும் என் தந்தையாரும் அலைந்தோம். தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தோம். “பையனைக் கரித்து கொட்டியே வீட்டை விட்டு துரத்தியடிச்சுட்டீங்களே!” என்று அம்மா அப்பாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நாள் கழித்து கோயம்புத்தூர் அத்தையிடமிருந்து கடிதம் வந்தது. (பதினைந்து பைசா தபாலட்டையில் கோழிக்கிறுக்கலான கையெழுத்தில்!) சதா ஒரு வாரம் அவர்கள் வீட்டில் வந்து விட்டு போனானாம். ஊருக்கு நலமுடன் திரும்பினானா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். தொடர்ந்து இது மாதிரி உறவினர்களிடமிருந்து கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. ஹைதராபாத் மாமா, ஜபல்பூர் பெரியப்பா, சென்னை பெரிய தாத்தா – இவர்களெல்லாம் கடிதம் எழுதினார்கள். வீட்டுக்கு வரும் கடிதங்கள் எல்லாம் “சதா இப்போது எந்த ஊரில் இருக்கிறான்?” என்பதை அறியும் ஆவலில் வாசிக்கப்பட்டன. சதா பற்றிய தகவல் வருவது நின்ற போதும் கவலையுணர்ச்சி ஏதும் எஞ்சியிருக்கவில்லை. பல வருடங்கள் கழித்து ரிஷி-முனி மாதிரி காடான தாடியுடனும் கூடவே ஒரு மணிப்பூர்க் காரியுடனும் வந்து என்னை சந்தித்தான். நான் அப்போது தான் பம்பாயில் குடியேறியிருந்தேன். என்னை விட நான்கு வருடங்கள் சின்னவனான சதா அந்த மணிப்பூர்க்காரியை “உன்னுடைய பாபி” என்று அறிமுகப்படுத்தினான். அவனுக்கு அப்போது ”பாபி” வந்திருக்கவில்லை. ஒரு காகிதத்துள் பொடியை போட்டுச் சுருட்டி சிகரெட்டாக புகைத்தான் சதா. அவன் பாதி புகைத்துவிட்டு அவளிடம் தருவான். அவளும் புகைப்பாள். சதாவும் மணிப்பூர்க்காரியும் இரண்டு – மூன்று நாட்கள் என்னுடன் தங்கியிருந்தார்கள். வீட்டை விட்டு ஓடிப்போன சதா இப்போதெல்லாம் பற்றி யாரும் கேட்பதில்லை. இந்தியாவின் ஒரு மூலையில் எங்கோ மணிப்பூர்க்காரியுடன் அவன் சுற்றிக் கொண்டிருப்பான் என்ற நம்பிக்கை குடும்பத்தில் இன்றளவும் நிலவுகிறது.

சொந்தங்கள் விலகி தூரமாய்ப் போவது மாதிரி தான் காணாமல் போவதும். கொஞ்ச நேரம் தேடப்படுவோம். பின்னர் காணாமல் போன உண்மையை எல்லோரும் ஜீரணித்ததும் தேடுதல் கை விடப்படும். பாதிப்புக்குள்ளான நெருங்கிய உறவுகள் தத்தம் வாழ்க்கையைத் தொடர்ந்துவிடுவார்கள். மரணத்திற்கும் காணாமல் போதலுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே உடம்பு இருப்பதில்லை. சிலரது நினைவுகளில் காணாமல் போனவர் நிறைந்திருக்கலாம். தான் விட்டுச்சென்ற வாழ்க்கையை எண்ணி காணாமல் போனவர் மருகாத வரை, மற்றவர்களின் நினைவுகளில் வருதலும் வராமல் இருத்தலும் அவருக்கு என்ன நட்டத்தை ஏற்படுத்தி விடக்கூடும்?

வர்ஷா என்னைத் தேடுவாளா? எப்படித் தேடுவாள்? அவள் பக்க உறவு என்று யாரும் இல்லை. அவளை வளர்த்த பெரியப்பா குடும்பம் வெளிநாட்டில் இருக்கிறது. கிட்டத்தட்ட அனாதை போலத்தான். தர்மேஷ் என்னைத் தேடி அலைகிறானோ? காவல் நிலையத்து நடைமுறைகளைச் செய்து தருவது அவனுக்கு மிக எளிதாக இருக்கும். அவனே ஒரு போலீஸ் காரன் என்பதால். என் பக்கத்து ஃப்ளாட்டில் இருந்தான். ஒரு காலத்தில் என் நெருங்கிய நண்பனாக இருந்தவன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. அவன் வர்ஷாவுடன் பேசும் சமயங்களில் ஐந்தடி ஏழங்குல உயரமான நான் அவன் கண்களுக்கு காணாமல் போய் விடுகிறேன்.

நான் எங்கிருக்கிறேன் என்பதை அவர்கள் இருவராலும் கண்டு பிடிக்கவே முடியாது. அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியா தொலைவுக்குச் சென்று விடுவேன். அசைக்க முடியா நம்பிக்கை எனக்குள் வந்திருந்தது. இது வரை அப்படி நான் உணர்ந்ததில்லை. சுய ஐயம் நிரம்பிய மனிதனாய் இத்தனை காலமாய் உலவி வந்தேன். ஓர் இயந்திரம் போல. இயங்கிக் கொண்டிருத்தல் மட்டுமே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்றெண்ணிக் கொண்டிருந்தேன். வர்ஷாவின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வது, என் ஆறு வயது மகன் மகேஷை வளர்த்து பெரிய ஆளாக்குவது – இவ்விரண்டையும் தவிர வேறெதுவும் என் இலக்காக இருக்கவில்லை. வர்ஷாவின் அபிலாஷைகள் என்ன என்பதை எவ்வளவு புரிந்து வைத்திருந்தேன் என்பது என்பது வேறு விஷயம். நம் குடும்பம், சிறு தேவைகள், சின்ன திருப்திகள் என்ற நடுத்தர குடும்ப அளவுகோலில் அளக்கப்பட்ட விழைவுகள் தாம் அவளுள் ஆரம்ப காலத்தில் இருந்தன. எது அவளை மாற்றியது? பம்பாய் எனும் ராட்சத நகரமா? அதன் இயந்திரத்தனமான ஓட்டமா? அல்லது என்னுடைய ஓட்டமா? பொருளியல் பகட்டு அல்லது சமூக அந்தஸ்து என்கிற மாயவலையில் அவள் சூழ்ந்திருக்கிறாள் என்ற என் கணிப்பு சரியா எனப் புரியவில்லை. என் கணிப்பு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அவள் தரப்பு நியாயம் எனக்குப் புரியாமல் இல்லை. பெரியப்பா குடும்பத்தினரால் ஒரு வேலைக்காரி போல நடத்தப்பட்ட வாழ்க்கை ; இளம் வயதிலேயே தாய்-தந்தையரை இழந்தது என கிட்டத்தட்ட அனாதை போல் வளர்ந்த ஒருத்தி பாதுகாப்பின்மையில் தத்தளிப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. அவளுடைய பாதுகாப்பின்மையை என்னால் ஏன் போக்க முடியவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் ஒரு விடையும் இல்லை. அவளிடம் என்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்ற தூண்டுதலை என்னால் கடைசி வரை களைந்தெறிய முடியாமல் போனது தான் எங்களுடைய விலகலை வேகப்படுத்தியதோ?. நான் அவளுக்கு ஏற்றவன் என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரே இச்சை அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஓர் இயந்திரமாய் என்னை மாற்றியிருந்தது. புதுப் புது வேலைகளாக மாறிய வண்ணம் இருந்தேன். நெடுங்காலம் வேலை பார்த்த பம்பாய் நிறுவனத்தில் வழங்கப்பட்ட சம்பளம் போதவில்லையெனச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதிக சம்பளத்துக்காக அடிக்கடி வேலை மாற்றம் செய்து கொண்டேன். கோஹ்லாப்பூரில் ஒரு பால் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை செய்தேன். குடும்பம் பம்பாயிலேயே இருந்தது. பின்னர் நாசிக்கில் சமையற் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் இரண்டு வருடம். மாதம் ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கொரு முறையோ என்றுதான் பம்பாய் வந்து குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வர்ஷா என்றால் மழை. சிறு வயதிலிருந்தே கண்டிப்பும் கட்டிறுக்கமுமாக வளர்க்கப்பட்ட எனக்கு என் வாழ்வின் மழையாக அவள் வந்தாள். அவளுள் நான் ஆனந்தமாக நனைந்த நாட்கள் உண்டு. ஆனால் அவளிடமிருந்து வெகு தொலைவு வந்து விட்ட எண்ணத்தை கோஹ்லாப்பூர் – நாசிக் தினங்கள் என்னுள் தோற்றுவித்தன. பம்பாய் வரும் நாட்களில் மகேஷும் என்னிடமிருந்து விலகிப் போவதை கவனித்திருந்தேன். மகேஷுடனான தூரத்தை நீக்கி விட வேண்டும் என்ற உந்துதல் அதிகமாயிற்று. ஆனால் நாசிக் வேலையைத் தூக்கி எறியும் தைரியம் வரவில்லை. என் பழைய பம்பாய் நிறுவனத்தை மீண்டும் அணுகி வேலை கேட்டேன். சம்பளத்தில் சமரசம் செய்து கொண்டேன். வர்ஷாவுக்கு சம்பள விஷயம் அவ்வளவு திருப்தி தரவில்லை. “நீங்க சரியான ஏமாளியா இருக்கீங்க. இப்போ பம்பாய்ல ஒண்ணா சேர்ந்து இருக்கறதா முக்கியம். செலவுகள் அதிகரிச்சுகிட்டே போகுதே அது உங்களுக்குத் தெரியலியா?” ஒரு சராசரி இல்லறத்தலைவியின் புலம்பல்களாக அதை எடுத்துக் கொண்டாலும் நான் பம்பாய் வராமல் இருப்பதைத்தான் இவள் விரும்புகிறாளோ என்ற சந்தேகம் பேயாக என்னுள் ஒட்டிக்கொண்டது.

சொன்னதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே நாசிக் வேலையிலிருந்து “ரிலீவ்” ஆகி தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டு பம்பாய்க்குப் புறப்பட்ட மாலை! பேருந்தில் ஏறியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. வீடியோ டெக்கில் “ஏக் தூஜே கேலியே” படம் போட்டுக் கொண்டிருந்தார்கள். விதவையாக வரும் சந்தியா என்கிற பாத்திரம் வாசு என்கிற பாத்திரத்துக்கு நடனம் பயில்வித்துக் கொண்டிருந்தது. பஸ்சுக்கு வெளியே நான்கு மணிக்கு இருக்க வேண்டிய வெளிச்சம் தொலைந்து போயிருந்தது. பேருந்து ஓர் இருட்டான அறைக்குள் நுழைந்து விட்டதோ என்னும்படி மேகங்களின் கருமை பகலை இருட்டாக்கியிருந்தது. மனதில் அளைந்த இனம் புரியா பயவுணர்வு! அதற்கான வெளிப்படையான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. சொந்த வீட்டுக்குச் செல்லும் போது ஏற்படும் உற்சாகம் பல மாதங்களாக என்னுள் இல்லாமல் போனதை அதற்கு முன்னர் கூட அவதானித்ததுண்டு. உற்சாகமின்மை பயவுணர்வாக மாறிவிட்டதோ? ”பயமும் ஓர் எண்ணமாகத் தான் நம்முள்ளில் இருக்கிறது. எண்ணத்தை மாற்று ; உணர்வு மாறிவிடும்.” என்று சுய-உரையாடலில் ஈடுபட்டேன். கை முஷ்டியை இறுக்கிக் கொண்டேன்.

குரூரமான க்ளைமாக்ஸுடன் படம் முடிவடைந்ததும் பஸ்ஸில் கொஞ்சம் அமைதி. கஸாரா காட்-டை பஸ் கடந்து பஸ் சமவெளியில் இறங்கியது. பாதையில் மழை ஈரம் கொஞ்சமும் இல்லை. கணவாயின் அந்தப் புறம் பெய்த மழை இந்தப் புறம் இல்லை. ஈரத்தின் சுவடின்றி மண் காய்ந்து கிடந்தது. ஒரே நிலப்பரப்பு. ஆனாலும் ஓரிடத்தில் மழை. வேறோரிடத்தில் மழையில்லை. எந்த இடத்தில் ஈரத்தரை முடிந்து ஈரமற்ற தரை தொடங்கியது என்பதைக் கவனிக்கவில்லை. பயண மும்முரத்தில் பாதையைக் கவனிக்காமல் விட்டது என் யதார்த்ததை பிரதிபலித்தது. வர்ஷாவுடனான என் வாழ்க்கையிலும் எப்போது ஈரம் விலகியது?

செம்பூரில் வந்திறங்கிய போது ரொம்ப நேரமாகிவிட்டது. இரண்டொரு ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களுக்கு முலுண்ட் வரை செல்ல மனமில்லை. ஆட்டோ கிடைத்து வீடு வந்து சேர்ந்த போது காம்ப்ளெக்ஸின் எல்லா ஃப்ளாட்டுகளிலும் லைட்கள் அணைக்கப்பட்டு காரிருளில் மூழ்கியிருந்தன. வாட்ச்மேன்கள் கேபினில் மட்டும் சின்ன பேட்டரி லைட் ஒளிர்ந்தது. இரண்டு கூர்க்காக்களும் விழித்திருந்தனர். ”லிஃப்ட் ரிப்பேர் சார்…உங்க ஃப்ளொர்ல இருக்கற தர்மேஷ் சாப் அணைச்சு வச்சிருக்க சொல்லியிருக்கார்” என்றான் ஒருவன். பின்னர் இன்னொருவனைப் பார்த்து “ஆறாம் ஃப்ளோர்ல லைட் எரியுதா பாரு” என்று சொன்னான். இருவரும் கேலிப் புன்னைகை புரிந்தது போல் தெரிந்தது. ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வெளிச்சம் குறைவாக இருந்தது. கூர்க்காக்களின் புன்னகை ஒரு பிரமையாக இருக்கலாம்!.

படியேற வேண்டியதாயிற்று. கையில் இருந்த லக்கேஜ்கள் கனத்தன. தர்மேஷின் அபார்ட்மெண்ட் கதவு திறந்து கிடந்தது. அவன் எப்போதுமே ஃப்ளாட்டின் கதவை திறந்து போட்டுக் கொண்டு தான் தூங்குவான். ஏன் அப்படி என்று கேட்டால் ”போலீஸ்காரன் வீட்டுக்கு எந்த திருடன் வர்றான்னு பார்க்கறேன்” என்று பதில் சொல்வான். தர்மேஷ் ஃப்ளாட்டைத் தொட்டடுத்த என் ஃப்ளாட்டின் பஸ்ஸரை அழுத்தியதும் உடனடி கதவு திறந்தது. ஏதோ கதவுக்குப் பின்னாலேயே இத்தனை நேரம் தயாராய் நின்றிருந்த மாதிரி!

ஹால் விளக்கு போடப்படவில்லை. வர்ஷாவை இது வரை காணாத ரூபத்தில் கண்டேன். குட்டையான பாவாடை அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த பாவாடை கால்மூட்டைத் தொடவில்லை. என்னுடைய பழைய சட்டை ஒன்றை அணிந்திருந்தாள். புடைவையைத் தவிர வேறோர் உடையை அவள் அணிந்து பார்த்திராத எனக்கு ‘என் முன்னால் நிற்பது வர்ஷாவா இல்லை ; வேறு யாரோ மோகினியா’ என்ற எண்ணம் ஓடியது. பரபரப்பு உள்ளோடும் மனவெழுச்சியோடு ஃபளாட்டுக்குள் நுழைந்தேன். எப்போதும் படிய வாரி, பின்னிய கூந்தலுடன் இருப்பவள் அன்றிரவு குழலைக் கலைத்து விட்டிருந்தாள். பஸ் பயணத்தில் முகர்ந்த மழையின் வாசம் ஞாபகத்துக்கு வந்தது.

“வரப்போறீங்கன்னு முன்னாடியே சொன்னா என்ன? ஒண்ணும் சாப்பிடறதுக்கு இல்ல….படுங்க…காலையில பாக்கலாம்” – குரலில் கடுமை தெறித்தது.

அவள் ஒற்றைக் காலில் கொலுசு அணிந்திருந்தாள். இதுவும் புதிது. படுக்கையறையில் என்னிடமிருந்து கொஞ்சம் தள்ளி படுத்தாள். எங்கிருந்தோ ஜன்னலில் வந்த ஒளியில்….ஒளியா அல்லது இருட்டு பழகி விட்டதா…தெரியவில்லை…அவளின் சலவைக் கல் போன்ற வழவழு கால்கள் மின்னின. விரலால் அவள் கால்களை வருடும் ஆசை முளைவிட்டது. அவளிடம் பேச்சு கொடுத்தேன்.

“மகேஷ் எங்க…காணல”

“தர்மேஷ் வீட்டுல விளையாடிட்டிருந்தான்…அங்கயே படுத்துக் தூங்கிட்டான்….தர்மேஷ் அங்கயே தூங்கட்டும்னுட்டார்….”

அவள் கவர்ச்சி என்னுள் ஏற்படுத்திய மயக்க நிலை என் சிந்தனையை ஊமையாக்கியது. சில நிமிடங்கள் தாம். திடுக்கென ஒரு கரு நிறப் போர்வையை எடுத்து உச்சி முதல் பாதம் வரை மூடிக் கொண்டாள். நடுநிசியின் அமைதியில் கீழே கேட்டுக்கருகே வாட்ச்மேன்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

எட்டு மணி லோக்கலில் ஜனக்கடலுக்கு நடுவே நின்ற படி பயணம் செய்தேன். என் பழைய நண்பர்கள் – வைர-குரியர் படேல் பாயும் கூட்டுறவு வங்கியொன்றில் காசாளராக வேலை செய்யும் ஆரேகரும் என் கண்ணில் பட்டார்கள். என்னைப் பார்த்து கையாட்டி அவர்கள் உட்கார்ந்திருந்த கடைசி வரி இருக்கைகளுக்கருகே வரச் சொன்னார்கள். நான் தலையாட்டி “இங்கேயே நின்று கொள்கிறேன்” என்பது போல சைகை செய்தேன். வி டி ஸ்டேஷன் வந்ததும் அவர்கள் இறங்குவதற்கு முன்னமே இறங்கிச் சென்றேன். வேலையில் சேர இன்னும் ஒரு வாரம் இருந்தது. எனினும் கூட்டம் அலை மோதும் காலை எட்டு மணி ரயிலேறி “டவுனுக்கு” வருவதற்கு என்ன காரணம்? ”ஏதோ ஃபார்மாலிடிக்காக என்னை வரச் சொல்லியிருக்கிறார்கள்?” என்று பொய் சொன்னதும் “வீட்டிலேயே இருங்களேன். இன்னிக்கும் வெளியில் போகணுமா?” என்று வர்ஷா கேட்கவில்லை. முந்தைய வாரம் நண்பர்களுடன் ‘டவுனுக்குப்’ போன போது அக்பரல்லிஸுக்குப் பக்கத்தில் இருந்த ஓர் ஆடையகத்தில் உடை வாங்கியதாகவும் அதன் உயரத்தைக் குறைப்பதற்கென்று தைக்கக் கொடுத்திருப்பதாகவும், அதே ஆடையகத்துக்குப் போய் வாங்கி வருமாறும் ஒரு டோக்கனை என்னிடம் தந்தாள். வி டி ஸ்டேஷனுக்கு வெளியே டி என் ரோட்டின் இடப்புற நடைமேடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடித்துக் கொண்டும் மோதிக் கொண்டும் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நான் சாலைக்குள் இறங்கி ஓரமாக நடந்தேன். நியூ எம்பயர் தியேட்டரில் ஒன்பது மணிக்கே டிக்கெட் வாங்குவதற்காக மக்கள் காத்திருந்தனர். தியேட்டர் முகப்பில் இருந்த போஸ்டரில் அமிதாப்பச்சனின் இரு கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்தன. ஆக்ரோஷப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். போலீஸ் சீருடையிட்ட ப்ரான் கம்பீரமாய் நின்றிருந்தார். பம்பாய்க்கே உரித்தான காற்றின் வாசமும் ஈரப்பதமும் என் நாசியையும் சருமத்தையும் ஊடுருவின. காதணிகள் விற்பவர்கள், தர்பூசணிப் பழத்தையும் அன்னாசிப் பழத்தையும் வெட்டி துண்டுகளாக விற்பவர்கள், பழைய புத்தகக்காரர்கள் எல்லோரும் அதிசுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஃப்ளோரா ஃபவுண்டெனுக்கு வலப்புறம் இருந்த சாலையில் திரும்பி அக்பரல்லிஸ் பல்துறை அங்காடிக்கு இரண்டு கடைகள் தள்ளி இருந்த ஆடையகத்தை அடைந்தேன். டோக்கனைச் சரிபார்த்து திருத்திய ஆடையை என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். கூடவே துணிக்கான வவுச்சரையும் கொடுத்தார். வவுச்சருடன் பணம் செலுத்தியதற்கான கடனட்டை விற்பனை ரசிது “பின்” செய்யப்பட்டிருந்தது. வர்ஷாவிடம் கடனட்டை கிடையாது. கடனட்டைக்குச் சொந்தக்காரரின் பெயர் விற்பனை ரசீதில் ‘இம்ப்ரிண்ட்” செய்யப்பட்டிருந்தது. தர்மேஷ் வி கோரே.

என் கால்கள் இலக்கின்றி நடந்தன. தெற்கு பம்பாயில் அன்று என் கால்கள் படாத இடம் இல்லை என்று சொல்லலாம். கேட்வே ஆஃப் இந்தியாவில் கடல் சற்று தள்ளிப் போயிருந்தது. லியோபோல்ட் கஃபேயில் வழக்கமாகக் காணப்படும் கூட்டம் இல்லை. கொலாபாவின் செருப்பு கடைகள், காலாகோடாவுக்கருகே வீதியின் இரு புறங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஓட்டல் பிரெசிடெண்டின் வாசலில் காத்திருந்த கருப்பு-மஞ்சள் டாக்ஸிகள், ஒபெராய் ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்த சுற்றுலா பயணிகள், அரபிக்கடலோரத்தில் போடப்பட்ட பாறைகள், கைகளைப் பின்னிக்கொண்டும் தோள்களை உரசிக்கொண்டும் கடற்கரைச்சுவரில் உட்கார்ந்திருந்த ஜோடிகள், பிஸ்ஸா – ஆன் – தி – பே உணவகத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கைகள் – கடந்து போகும் சித்திரங்களாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன. நியூ எம்பயரில் ஓடும் திரைப்படமே ஈராஸ் தியேட்டரிலும் ஓடியது. காலியா. ஈராஸ் தியேட்டரை ஒட்டிய சிற்றுண்டி நிலையத்தில் கிஷோர் குமாரின் குரலில் “ஜஹான் தெரி யெ நஸர் ஹே” என்ற பாடல் அதிக கனபரிமாணத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சர்ச்-கேட்டுக்குப் போகும் சப்-வேயில் இருந்த மருந்துக் கடையில் நுழைந்தேன். பின்னர் ஜன சமுத்திரத்தில் ஒரு புள்ளியாகக் காணாமல் போனேன்.

+++++

மற்றவர்கள் கண்ணுக்குப் படாமல் வர்ஷாவின் வாழ்க்கையில் நிகழ்வதை அறிய ஆவல் என்னைத் தூண்டவும், மீண்டும் நான் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்க்க முடிவு செய்தேன். எண்ண ரூபமாய் அங்கு அலைந்து திரிவதில் என்ன தடை ஏற்படப் போகிறது? ஆறாம் ஃப்ளோரை அடைந்தேன். தர்மேஷ் ஃப்ளாட், என் பழைய ப்ளாட் – இரண்டின் கதவுகளும் திறந்து கிடந்தன. தர்மேஷ் வீட்டில் மகேஷ் இருக்கிறானா என்று பார்த்தேன். இல்லை. என் வீட்டின் ஹால் காலியாகஇருந்தது. அன்று வி டி போன போது நான் எடுத்துச் சென்றிருந்த தோல் கைப்பை ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜிப்பர் வழி நோக்கினேன். உடை, ரசீது, மருந்துக் கடையில் வாங்கிய மாத்திரைப் புட்டி எல்லாம் இருந்தன. புட்டி காலி. ஒரு மாத்திரை கூட மிச்சமில்லை. அறையில் ஊதுபத்தி நெடி. சுவரில் என் உருவம் தாங்கிய சட்டகத்துக்கு மாலை போடப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் மாலை. படுக்கையறையில் வர்ஷா அழும் சத்தம் கேட்டது. கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவள் அடிக்கடி அணியும் பச்சை நிறச் சேலை. அடர் சிவப்பு நிற ரவிக்கை. ரவிக்கைச் சட்டையின் கை முழங்கை வரை நீண்டிருந்தது. கட்டிலுக்கருகே தர்மேஷ் நின்றிருந்தான். அவன் கை அவள் உச்சந்தலை முடியை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. அவள் தன் முகத்தை அவன் இடுப்பில் புதைத்தவாறு அழுது கொண்டிருந்தாள். கணவாய்க்கு ஒரு புறத்தில் பெய்த மழையில் கணவாயின் மறுபுறம் நனையவில்லை. மற்றவர்கள் கண்ணுக்கு மட்டும் காணாமல் போயிருந்த நான் எனக்கும் காணாமல் போகும் சமயம் வந்து விட்டது. ஊதுபத்திப் புகைக்குள் புகுந்து காணாமல் போனேன்.

+++++

கருங்கற்கள் குவியலின் மேல் சாய்ந்த படி கண்ணயர்ந்திருந்தேன். முதுகுப் புறம் சில கற்களின் கூர்மையான முனைகள் குத்தின. கண்களைத் திறந்தேன். சமிக்ஞை கோளாறின் காரணமாக கௌஹாத்தி செல்லும் ரயில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றிருந்தது. ரெய்ப்பூர் நகரம் தாண்டி ஏறத்தாழ ஐம்பது கிலோமீட்டர் தூரம் கடந்திருந்தது. என்னைப் போலவே பொது வகுப்பில் அமர்ந்திருந்த வேறு பயணிகளு ரயிலிலிருந்து இறங்கியிருந்தனர். கிழவி ஒருத்தி கொய்யாப்பழத் துண்டுகளைக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு சின்னப் பையன் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து ஐந்து பைசாவுக்கு ஒரு கோப்பை தண்ணீர் வாங்கி முகம் கழுவிக் கொண்டேன். ரயில் இப்போதைக்கு கிளம்பாது போலிருந்தது. அந்த ரயிலை விட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். தண்டவாளத்தை ஒட்டிய வயலில் மெதுவாக இறங்கினேன். வரப்பு வழியாக நடந்து ஒரு கிராமத்தை அடைந்தேன். கிராமத்தினுள் மூடிக்கிடந்த தபாலாபீஸைக் கடக்கையில் எனக்கு சதாவின் ஞாபகம் வந்தது. அவன் போய்ச் சென்று தங்கிய இடங்களிலிருந்தெல்லாம் எங்கள் உறவினர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். வர்ஷாவுக்கு கடிதம் போட்டு என் நலத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.

நன்றி : சொல்வனம்


விரியும் காட்சி

$
0
0

ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து

சிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது,  ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமான போது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான்  மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “ என்று என் மூத்த அண்ணன் சொன்னார். ஆனால் யாரும் கேட்கவில்லை. முட்டி மோதிக்கொண்டு எல்லோரும் ஏறினார்கள். என் அம்மா முன் வாயில் வழியாக பஸ்சில் ஏறினார். நாங்களெல்லாம் பின் வழியாக. என்னால் முதல் படியிலிருந்து இரண்டாவது படிக்கு முன்னேற முடியவில்லை. கண்டக்டர் என்னை பஸ்சுக்குள் இழுத்துவிட்டார்.

இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. ஏற்கெனவே பல பேர் நின்றிருந்தனர். பஸ்சின் நடுப்பாகம் வரை முக்கி முக்கி முன்னேறினேன். வலப்புறம் ஜன்னல் இருக்கையொன்றில் அமர்ந்திருந்த பெரியவர் “வா தம்பி” என்று அழைத்தார். இருக்கைகளுக்குள் நுழைந்து பெரியவரின் மடியில் உட்கார்ந்து கொண்டேன். வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை வெட்டியும் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையும் சந்தனப் போட்டும் இட்டிருந்தார். நரைத்த மீசையின் ஒரு சில முடிகளை அவரின் விரல்கள் நீவிய வண்ணம் இருந்தன. “ஓவர் லோடு ஏத்தறான் பாரு” என்று சலித்துக் கொண்டார். என் தாய், தந்தை, சகோதரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பஸ்சில் எல்லோரும் ஏறியிருப்பார்களா என்ற ஐயம் அவ்வப்போது வந்து என் பயவுணர்வை அதிகப்படுத்தியவாறிருந்தது. மனதில் “முருகா முருகா” என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன். பஸ் நகர ஆரம்பித்து கொஞ்ச தூரம் போனதும் பழகிவிட்டது. பயம் இல்லை. பெரியவர் தன்  பாக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் காகிதம் சுற்றிய மிட்டாய் ஒன்றைக் கொடுத்தார். புளிப்பு ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாயை மெல்லுகையில் நாக்கின் பின்பகுதி சற்று உலர்ந்து போகும். தாகமெடுக்கும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் நான் மெல்லத் தொடங்கினேன். என் தம்பியின் தலை இரண்டு வரிசை முன்னதாக தெரிந்தது. அப்பா பின் வரிசைகளுக்கருகே நின்று கொண்டிருப்பார். கூட்டம் குறைந்ததும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் எங்கு உட்கார்ந்திருக்கின்றனர் என்று தெரிந்து விடும் என்ற சிந்தனை சுமைத்தணிவை ஏற்படுத்தியது.

பஸ் வாலாஜாபாத் டவுனுக்குள் நுழையும் போது பெரியவரின் மாடியிலிருந்து இறங்கி, அவர் காலுக்கு நடுவே நின்று கொண்டேன். “பரவாயில்லே தம்பி…உட்கார்ந்துக்கோ” என்றார். பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகே  முன்னும் பின்னுமாக  பஸ்கள். என் பார்வை கடைகளையும் சாலையில் நகரும் மனிதர்களையும் வாகனங்களையும் நோக்கிக் கொண்டிருந்தது. எதிரில் ஒரு வீதி கடை வீதியுடன் இணைந்தது. அந்த வீதியில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. தார் ரோட்டின் இரு மருங்கிலும் சாக்கடைகளுக்கு முன்னர் மண் தரை. ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. அப்போது தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு சிறுவன் முஷ்டிக்குள் ஏதோவொன்றை இறுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால்  வந்த மாட்டின் பின்புறத்தை கிள்ளியதும் மாடு ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டது. அந்த பையன் அரை நிஜார் அணிந்திருந்தான். சட்டை அணியவில்லை. இரு பட்டிகள் அவன் அரை நிஜாரை தாங்கிப் பிடித்தன. சிறுவனின் முகத்தில் பவுடரா அல்லது சுண்ணாம்புப் பொடியா தெரியவில்லை. முகத்தில் திட்டுத்திட்டாக வெண்மை. அவன் தனியே ஓடிக்கொண்டிருக்கவில்லை. அவனை யாரோ துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனிக்க சில வினாடிகள் பிடித்தன. அவனை துரத்துபவர் ஒரு  முதியவர். அவர் ஓட்டத்தில் முதுமை தெரியவில்லை. ஓர் இளைஞனின் வேகம் அவர் கால்களில். வேட்டி அணிந்திருந்தார். அவரும் சட்டை அணியவில்லை. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அவர் தலைமுடி செம்பட்டை நிறத்தினதாக இருந்தது. அவர் ஏதோ கத்திக்கொண்டே வந்தார். பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைவதற்காக காத்து நின்றிருந்த பஸ்களின் ஹார்ன்  சத்தம் காரணமாக துரத்துபவர் என்ன கத்தினார் என்று எனக்கு கேட்கவில்லை. தள்ளு வண்டிக்காரன் ஒருவன் இடையில் வந்ததால் பையன் ஓடும் வேகத்தை குறைக்க வேண்டியதாய் போயிற்று. செம்பட்டை முடிக்காரர் மிகவும் நெருங்கிவிட்டார். பையனின் தோள் பட்டியை பிடித்திழுத்தார். பையன் அவரிடமிருந்து சில தப்படிகள் தள்ளி ஓடினான். ஆனால் துரத்தி வந்தவர் மிக அருகில் வந்து விட்டார். பையனின் முதுகில் கையை வைத்து தள்ளினார். பையன் தொபுக்கடீறேன்று தரையில் விழுந்தான். சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மேல் தான் பையன் விழுந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நான் கவனிக்கவில்லை. தள்ளிவிட்ட செம்பட்டை முடிக்காரர் ஓரு  சலனமுமின்றி, எதுவுமே நடக்காதது போல  முதுகைத் திருப்பிக் கொண்டு  எந்த திசையிலிருந்து ஓடி வந்தாரோ அந்த திசை நோக்கி திரும்பி நடக்கலானார். அதற்குள் என் பஸ் நகர்ந்து வாலாஜா பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்துவிட்டது.

பஸ்சில் இருக்கும் வேறு யாரும் சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சியை பார்க்கவில்லை என்று தோன்றியது. என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்த பெரியவரும் பார்க்கவில்லையென்றே தோன்றியது. ரோட்டுக்கு நடுவில் எல்லோருக்கும் மத்தியில் நடந்த நிகழ்ச்சியை எப்படி பார்க்காமல் இருந்திருக்க முடியும். ஸ்தலத்தை விட்டு பஸ் நகர்ந்த பிறகு அங்கு என்ன நடந்திருக்கும்? சிறுவனுக்கு என்ன ஆயிற்று? ரத்தக் காயம் பட்டிருக்குமா? ஜல்லிக் கல் அவன் கண்ணை பதம் பார்த்திருக்குமா? ஒரு பலமான கல்லின் மேல் அவன் தலை மோதியிருக்குமா? அந்த ஆள் அப்படி ஏன் சிறுவனை மூர்க்கமாக தள்ளி விட வேண்டும்? யார் அந்த ஆள்? அந்த சிறுவன் என்ன பண்ணினான்? அவரிடமிருந்து சிறுவன் ஏதாவது திருடினானா? வன்முறைக் காட்சி என் மனதில் ஏற்படுத்திய அதிர்விலிருந்து எளிதில் மீளக் கூடியதாய் இல்லை. யாரோ துரத்திக் கொண்டு வருவது மாதிரியான கெட்ட கனவுகள், சிறுவனின் இடத்தில் என்னை கற்பனை கொண்டு சிறுவன் பட்டிருக்கக் கூடிய வலியை கற்பனை செய்து பார்த்தல் என்றவாறெல்லாம் என் கண்ணில் கண்ட காட்சியை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் இன்று அக்காட்சியை நினைத்துப் பார்த்து தருக்க பூர்வ கற்பனையுடன்  காட்சியின் சூழலை பகுத்தாய்ந்து விரித்துக் கூறிவிட முடியும். ஆனால் அது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும். அந்த வயதில் எனக்கிருந்த முதிர்ச்சியில்  காட்சி என்னுள் ஏற்படுத்திய உணர்வலைகள் என்னைப் பொறுத்தவரையில் மட்டுமான நிஜம். கிண்டியில் வந்து நான் இறங்கும்  போது பிற பயணிகளும் என்னுடைய குடும்பத்தாரும் அவரவருக்கான யதார்த்தத்தில் தோய்ந்து  ஒரு பொது யதார்த்த உலகில் இருப்பதான  கற்பிதத்துடன் இறங்கியிருப்பார்கள்.           

காட்சிகள் நம்முள் உச்ச பட்ச தாக்கத்தை உண்டு பண்ண வல்லன. காட்சிகளின் பொருள்படுத்தல் காட்சிக்கு முன்னதான சம்பவங்களின், பின்னதான சம்பவங்களின் பாற்பட்டது. காட்சி சார்ந்த சூழல் பற்றிய அறிதல் இல்லாமல் போகும் பொழுது நம்முள் வெவ்வேறு உணர்வு நிலைகள்  தோன்றியவாறு  இருக்கின்றன. அளவற்ற ஊகங்கள் வாயிலாகவும் அறிவார்ந்த ஆனால் போதிய தகவல்கள் இல்லாத பகுப்பாய்வுகள் வாயிலாகவும், அக்காட்சியைக் கண்ட போது நமக்கிருந்த மனநிலை நம்முள் எழுப்புவித்த உணர்வுகள் வாயிலாகவும், அக்காட்சி நெடுநாள் நம் மனக்கண்ணிலிருந்து நீங்காமல் இருக்கிறது. காலப்போக்கில் அக்காட்சியை நாம் மறந்துவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நினைவில் திரும்ப வரும் போது ஒரு சில நிமிடங்களுக்காவது முன்னர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை அதே உணர்வலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. காட்சியைக் கண்ட காலத்திற்குப் பிறகு நம் அனுபவ அறிவு எவ்வளவு முதிர்ந்திருந்தாலும் காட்சியின் பிண்ணனி பற்றிய அறியாமை ஒரு வித இயலாமைக்குள் நம்மைத் தள்ளி விடுவதை உணராமல் இருக்க முடிவதில்லை.

+++++

ஜூலியோ கொர்த்தசார் எழுதிய “Blow-up” சிறுகதையை நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். முதன்முறை படித்த போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி இருந்தது. சரியாகப் புரியவில்லை. ஆனாலும் கதை மேலும் படிக்கும் படி என்னைத் தூண்டியது. இரண்டாம் முறை படித்தேன். இணையத்தில் “Blow-up’ பற்றிக் கிடைத்த “reader”-களையும் வாசித்தேன். அவைகள் உதவிகரமாக இருக்கவில்லை.   நான்காவது வாசிப்பில் கதைப்பிரதியுடனான உறவு நெருக்கமானது. முழுமையான புரிதலை எட்டினேன் என்று சொல்ல முடியாது.  “முழுமையான  புரிதல் என்பதே ஒரு கற்பிதம் ; யதார்த்தம் பன்மைத் தன்மை பூண்டு பலவாறாக பிரிந்து கிடக்கிறது. ஒற்றைத் தன்மையும் தெளிவும் அதற்கில்லை” – இதைத்தான் கதை சொல்கிறதோ?

வாலாஜாவின் வீதியொன்றில் ஒரு சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சி முதிரா மனநிலையில் என்னுள் ஏற்படுத்திய கொந்தளிப்பு மாதிரி கதைசொல்லி மிக்கேலுக்கும் நிகழ்கிறது. கொந்தளிப்பு அவன் கண்ணுற்ற சம்பவத்தாலா என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. மிக்கேல் சம்பவத்தை  கண்ணுற்ற நாள் வேறு ; அவன் அதை நமக்கு சொல்லும் நாள் வேறு. இரண்டு நாட்களுக்குமிடையில் ஒரு மாத இடைவெளி இருக்கலாம் என்ற குறிப்பு கதையில் வருகிறது.  மிக்கேல்   தான் புகைப்படமெடுத்து என்லார்ஜ் செய்த ஒரு ஸ்டில்லைப் பார்த்துக் கொண்டே சம்பவத்தை விரித்துக் சொல்லும்  பாங்கில் அவனுக்கிருக்கும்   மனக்குழப்பம் வாசகரால் உணரத்தக்கதாய் இருக்கிறது. மிக்கேல் மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்திலும் தன்மை நோக்கிலும் மாற்றி மாற்றி கதையைக் சொல்கிறான்.  ஒரு மாத இடைவெளியில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஏதோ நடந்திருக்க வேண்டும் – ஒரு விபத்து அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக மிக்கேலின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவன் சொல்லும் சம்பவத்துக்கும் அவன் மனக்குழப்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

ஒரு ஞாயிற்றுகிழமை காலை பாரீஸ் நகரில் இருக்கும் பூங்காவுக்கு கால்நடையாகச் செல்லும் மிக்கேல் அங்கே ஒரு சம்பவத்தை காண நேரிடுகிறது. மாது ஒருத்தி ஒரு  இளம் வாலிபனைப்   படுக்க அழைக்கும் காட்சி போல மிக்கேலுக்கு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பதை ஆர்வத்துடன் உற்று நோக்குகிறான். கையில் கொண்டு வந்த காமிராவையும் தயார் நிலையில் வைத்துக்கொள்கிறான். சாவித்துளையினூடாக குளியலறையை உற்று நோக்குபவனின் மனநிலைதான் அவனிடம். சம்பவம் நிகழுகையில் அவன் மனநிலை மாறுகிறது. அதை அவன் காட்சியின் மாற்றத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறான். வலிமையான அந்தஸ்தில் எளிமையானவற்றின் மேல் எடுத்துக் கொள்ளப்படும் உரிமைகள் சுரண்டல் என்றே கருதப்படும் என்கிறான் மிக்கேல். புகைப்படக் கருவியில்  அங்கு நிகழ்வதைப் படம் பிடிக்கும் போது ஏற்படும் “க்ளிக்” சத்தத்தைக் கேட்டவுடன் மாது சுதாரித்துக் கொள்கிறாள். கோபப்பார்வையுடன் மிக்கேலுடன் சண்டை போடுவதற்காக அவனை நெருங்குகிறாள். இவற்றையெல்லாம் காருக்குள் செய்தித்தாளொன்றை வாசித்தவாறு ஓர் ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மிக்கேல் புகைப்படம் எடுக்குமுன்னரே அவரைக் கவனித்திருந்தாலும் கேமராவின் குவியத்தில் காரையும் அந்த ஆளையும் நிரப்பவில்லை. தன்னைப் போலவே பூங்காவின் காதற்காட்சிகளை பார்க்கும் ஒருவர் என்றே காரில் இருப்பவரைப் பற்றி மிக்கேல் எண்ணுகிறான். மாது மிக்கேலுடன் சண்டையிடும் நேரத்தில் காரிலிருந்து இறங்கி மிக்கேலை நோக்கி கார்க்காரரும் வருகிறார். அனுமதியில்லாமல் ஃபோட்டோ எடுத்தது தவறு என்று வாக்குவாதம் செய்கிறாள் மாது. இதற்குள் மாதுவின் வற்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த இளைஞன் “விட்டால் போதும்” என்பது மாதிரி அங்கிருந்து ஓடிவிடுகிறான்.  இளைஞனின் ஓட்டம் மிக்கேலுக்கு  திருப்தி தருகிறது. இளைஞனை தாம் காப்பாற்றிவிட்டோம் என்ற உவகை அவனுள்.

மேற்கண்ட பத்தியில் உள்ளது போல மிக்கேலின் விவரிப்பு அத்தனை தெளிவாக இல்லை. விவரிப்பின் நடுவில் மேகங்கள் செல்வதையும் புறாக்கள் பறந்து செல்வதையும் குறிப்பிட்ட வண்ணம் இருக்கிறான். புறாக்கள் எங்கு பறக்கின்றன? அவன் பூங்காவில் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மாதுவும் இளைஞனும் நின்றிருந்த மரத்தடிக்கு மேலே பரந்திருந்த ஆகாயத்திலா? ஒரு மாதம் கழித்து மிக்கேல் மொழிபெயர்ப்பு வேலையில்  மூழ்கியிருக்கும் போது மிக்கேலின் அறை ஜன்னலுக்கு வெளியே விரியும் வானத்திலா? “என்லார்ஜ்” செய்த புகைப்படம் உயிர்பெற்று அதில் தெரியும் வானத்தில் பறக்கும் புறாக்களா அவை?

பெரிய “போஸ்டர்” அளவிற்கு “என்லார்ஜ்” செய்த பூங்கா சம்பவப் புகைப்படம் மிக்கேலின் அறையில்  தொங்குகிறது. ஒரு கடினமான “ஸ்பானிய” வார்த்தைக்குப் பொருத்தமான பிரெஞ்ச் மொழியாக்கத்தை யோசிக்கையில் அவன் கவனம் சிதறி “போஸ்டர்” புகைப்படத்தின் மேல் பதிகிறது.

“புகைப்படத்தில் இருப்பவர்கள் தம் எதிர்காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். நான் ஐந்தாம் மட்டத்தில் இருந்த  ஓர் அறையில் இன்னொரு காலத்தின் கைதியாய்  இருந்தேன். அவர்கள் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. அந்த மாது, அந்த மனிதன், அந்தப் பையன். அவர்கள் என் கேமராவின் கண்கள் படம் பிடித்த உறைந்த, இடையீடு செய்யவியலா  உருவங்கள் மட்டுமே” என்று மிக்கேல் நிர்க்கதியான மனநிலையில் கூறுகிறான்.

காட்சி விரிகிறது. மிக்கேலின் முந்தைய விவரிப்பில் இல்லாத காட்சிகள் ஓடுகின்றன. புகைப்படத்தில் காட்சிகள் திரைப்படகாட்சிகள் போன்று ஓடுதல் கற்பனையா? அல்லது ஒரு மாத இடைவெளியில் மிக்கேலுக்கு ஏற்பட்ட ஏதோவோர் அதிர்ச்சியில்  குழம்பிப் போன  மன நிலையா? மேகங்களும் புறாக்களும் கதை நெடுக பறந்து கொண்டிருத்தல் யதார்த்தத்தை தாண்டி வெகுதூரம்  மிக்கேல் வந்து விட்டதை சுட்டுகிறதோ? மிக்கேல் புகைப்படத்தினுள் பிரவேசிக்கிறான்.

அரைகுறை அணைப்பில் இருப்பதாக முந்தைய விவரிப்பில் சொல்லப்பட்ட மாது வாலிபனை மயக்குவது போல் இப்போது தோன்றவில்லை. அவளின் பார்வை காருக்குள் இருப்பவரின் மேல் படிந்திருப்பதை மிக்கேல் கவனிக்கிறான். அவர் ஏவியதால்  தான்  வாலிபனுடன் அவள் ஏதோ பேசுகிறாளோ? அவர் எதற்காக மாதுவை வாலிபனிடம் எவியிருப்பார்? மிக்கேலின் கேமராவின் “க்ளிக்” சத்தம் கேட்டவுடன் இந்த முறை அவனை நோக்கி வருவது அந்த மாது அல்ல. காரில் இருப்பவர். அவர் அருகில் வரும் போது மிக்கேல் அதிர்ந்து போகிறான். அவரின் கண்கள் மறைந்து கருங்குழியாகத் தெரிகிறது. கறுத்துப் போன அவரின் நாக்கு அசைகிறது. உருவங்கள் மறைந்து காட்சி கருங்குழம்பாகி….மிக்கேல் கண்களை மூடிக் கொள்கிறான்.

பார்க்கும் விழைவு  மேலிட காட்சியைப் உற்றுப் பார்க்கத்  துவங்கிய மிக்கேல் விவரிப்பின் முடிவில் பார்ப்பதில் உவப்பில்லாதவனாகிறான். அவன் எதைப் பார்த்தான்? அவன் பார்த்ததை தெளிவாக சொல்ல முடியாமல் போனதன் காரணமென்ன? அவனால் சொல்ல முடியாது என்பதல்ல. அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன். மொழி அவன் வசப்படும். எனினும் இரண்டு விவரிப்பிற்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை எப்படி விளக்குவது? புறாக்கள் பறந்த வண்ணம்,  மேகங்கள் மிதந்த வண்ணம் இருக்கின்றன.

பனி கவிந்த சாலையில் தெரியும் வாகன முன்விளக்குகள் உமிழும் ஒளிக்கற்றை கோடுகளாகப்  பிரிவதைப் போன்று  காட்சி இரு வேறு விதத்தில் பொருள் கொள்ளப்பட எது காரணம்? மிக்கேலின் மாறும் மனநிலையா? மன நிலை குழம்பிக் கிடப்பது தான் காரணமா? உறுதியாகக் சொல்லிவிட முடியாது. எதையோ பார்த்து விட்டு அதை ஜீரணிக்காமல் போனதன் விளைவாகவும் இருக்கலாம். முதல் விவரிப்பில் காரில் உட்கார்ந்திருந்தவர் பற்றி அதிகம் பேசப்படாமல், இரண்டாம் விவரிப்பில் அவரைப் பற்றி எதிர் மறையான சித்தரிப்பு வருகிறது. சாத்தானின் குறியீடாக அவர் கண்களும் நாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. “blow – up” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கதையின் ஸ்பானிய மூலத்தின் தலைப்பு “Las babas del diablo”. இதன் அர்த்தம் “சாத்தானின் உமிழ்நீர்”. இதில் சாத்தான் யார்? புகைப்படத்தின் ஓரத்தில் தெரியும் காருக்குள் செய்தித்தாளுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவரா? அல்லது பெரிதாக்கப்பட்ட புகைப்படமா?

பலவித, இணையான யதார்த்தங்களின் சாத்தியக்கூறை சிறுகதை பேசுகிறது. அந்த யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அல்லது புனைவாக இருக்கலாம். கொர்த்தசாரின் புகழ் மிக்க சிறுகதைகள் எல்லாவற்றிலும் இந்த கருப்பொருள் காணப்படுவதாக சில இணையக்கட்டுரைகள் தெரிவித்தன. போட்டோவுக்குள்   உருவங்கள் நகர்வதை சித்தரித்தல் “முதன்மையான” யதார்த்தத்தின் சார்பின்றி ஒரு மாற்று யதார்த்தம் இருக்கிறது என்ற கருவை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம்.  இந்த மாற்று யதார்த்தத்தில் அவனும் அவனுடைய கேமராவும் பங்கு பெற்றிருக்கின்றன. இதில்  சமமுக்கியத்துவம் பெறும் இன்னோர் அம்சம்  மிக்கேலின் கண் முன்னம் நடந்த சம்பவத்தின் இருவிதமான பொருள் கொள்ளல். உதாரணமாக, ஒரே சமயத்தில் கவர்ச்சிக்காரி தன் முயற்சியில் வெல்வதாகவும் தோற்பதாகவும் மிக்கேல் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு குறைந்த பட்சம் இரண்டு வெவ்வேறு யதார்த்தங்களை (அதில் ஒன்று கற்பனையே என்றாலும்!) மிக்கேல் நிறுவிவிடுகிறான்.  ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியக்கூறை, ஒன்றுக்கு மேர்ப்பட்டதான “உண்மையை” பரிந்துரைப்பதன் வாயிலாக, தருக்கபூர்வமாக நாம் நினைப்பது போல,  “உண்மையான” யதார்த்தம் என்பதை நிலைநிறுத்துதல் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை கொர்த்தஸார் எடுத்துக் காட்டுகிறார். வாலாஜாவில் நடந்த நிகழ்வில் தனித்தனி யதார்த்தங்களில்  மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற குறிப்பு கிட்டியதைப் போல அதே மனிதன் பல்வேறு யதார்த்த நிலைகளில் இருப்பதற்கான சாத்தியக்கூறை “blow-up” எனக்கு சொற்களால் படம் பிடித்துக் காட்டியது.

நன்றி : பதாகை


முதல் புத்தகம்

$
0
0

சில இணைய இதழ்களில் வெளிவந்து பின்னர் இந்த வலைதளத்தில் வலையேற்றிய 23 சிறுகதைகளை காலச்சுவடு நிறுவனம் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது.

பக்கங்கள் : 208
விலை : ரூ 190

 

Book Cover

 


புதுசு –கொஞ்சம் பழசு –ரொம்ப பழசு

$
0
0

fan-6

ஃபேன்

பாலிவுட் தனம் கலந்திருந்தாலும் “Fan” ஒரு டெம்ப்லேட்-டில் அடங்கும் படமல்ல. படத்தின் பல்வேறு காட்சிகள் அற்புதமாக கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. சுருக்கங்கள் தோன்றிய கண்ணுக்குக் கீழான சதைப்பகுதியை தடவிப்பார்த்துவிட்டு “நட்சத்திரம்” என்னும் கட்டுக்கதையை நிகழ்த்துவதற்காய் மேடையை அணுகுதல், இரசிகர்கள் ஒருவரும் இல்லா அரங்கை மேடையிலிருந்து காணும் காட்சி, மேடம் டூசாடில் ஆர்யனின் பொம்மைக்கருகே கௌரவ் செய்யும் குழப்பத்தை சல்மான் கான் பொம்மை பார்த்துக் கொண்டிருப்பதாக காட்டுதல் என்று பல உதாரணங்கள். கௌரவ் – ஆர்யன் பாத்திரங்களுக்கிடையிலான உடல் மொழி வித்தியாசத்தை நுணுக்கமாக வெளிப்படுத்தி மீண்டும் “ஃபார்முக்கு” வந்திருக்கிறார் ஷாருக். இரசிகனிடமிருந்து தள்ளி ஓடும் நட்சத்திரம் ; இறுதியில் இரசிகனுடன் கட்டிடத்தின் விளிம்பில் தொங்கும் நட்சத்திரம். இரசிகன் மரணமடைந்ததும் நட்சத்திரத்தின் தொழில் வாழ்க்கை முடிந்து போவதாக காட்டியிருந்தால் நட்சத்திரம் – இரசிகன் இடையிலான இயங்கியலை சித்தரிக்கும் உருவகமாக அமைந்திருக்கும்.  பாலிவுட் ரகத்திலான  லண்டன், டுப்ரோனிக் நிகழ்வுகளை மாற்றி திரைக்கதையை வேறு மாதிரி செய்திருந்தால் “Fan” சிறப்பான படமாக இருந்திருக்கும்.

1427865764_birdman-final-scene

பேர்ட் மேன்

நிக்கொலாய் கோகோல் 1836 இல் எழுதிய ரஷ்யச் சிறுகதை “மூக்கு” மிகப் பிரசித்தமானது. அரசாங்க அதிகாரி காவலோவ்-வுடைய மூக்கு ஒருநாள் காணாமல் போய் விடுகிறது. அது அவனுக்கு திரும்பக் கிடைத்தாலும் அவன் முகத்தில் பொருந்தாத அளவுக்கு அதன் அளவு பெரிதாகப் போய்விட்டது. பிறகு எப்படியோ மூக்கு அவன் முகத்தில் பொருந்திவிடுகிறது. இழந்து போன முக்கியத்துவம் திரும்பக் கிடைத்த நிம்மதி! கோகோலின் இந்தச் சிறுகதையின் பாதிப்பில் ஜப்பானிய சிறுகதை எழுத்தாளர் ர்யுனொசுகெ அகுடகவா “மூக்கு” என்ற தலைப்பில்  ஒரு சிறுகதை எழுதினார். அகுடகவா யார்?  இவர் எழுதிய இரண்டு சிறுகதைகளைப் பின்னிப் புனைந்து  திரைக்கதையாக்கித்  தான் அகிரா குரோசவா “ரஷமோனை” உருவாக்கி உலகப்புகழ் பெற்றுக் கொண்டார்.   கோகோலின் மூக்கு சிறுகதையில் வரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜார் மன்னராட்சிக் கால அரசாங்க அதிகாரியின் இடத்தை அகுடகவாவின் கதையில் மத்திய கால ஜப்பானின் பௌத்த மடாலய பிக்கு ஒருவர் நிரப்பி இருப்பார். அவர் மூக்கு விகாரமாக மிக நீளமாய் வளர்ந்திருக்கும். அதிகாரமும் கருவமும் மிகுந்த பிக்கு தன் மூக்கை சரி செய்து விட மிகவும் பிரயத்தனப்படுவார். அவருடைய உதவியாளன் ஒருவன் அசுர சிகிச்சை ஒன்றை செய்யும் போதும் அதை பொறுத்துக் கொள்வார். சிகிச்சைக்குப் பின்னால் அவர் மூக்கு சுருங்கி சரியாகிவிடும். எனினும் பிக்கு விகாரமாக இருந்த மூக்கை “மிஸ்” செய்வார். நல்ல வேளையாக அவர் மூக்கு தானாகவே பழையது மாதிரி ஆகி விடும். அதிகாரம் மற்றும் சமூக அந்தஸ்து – இவற்றின் அடையாளமாக இச்சிறுகதைகளில்குறிக்கப்படும் மூக்கு என்னும் படிமம் அலேஹான்றோ இன்யாரிட்டு இயக்கிய “Bird Man” படத்தின் இறுதியில் சுயமதிப்பின் குறியீடாக வருகிறது. தத்ருபமாக நடிக்கும் முயற்சியில் நாடகத்தின் இறுதிக்காட்சியில் உண்மை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு நடிக்கும் ரிக்கன் பாத்திரம் (நடிகர் மைக்கேல் கீட்டன் நடித்திருப்பார்) மூக்கை இழந்து விடும். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவனுக்கு மூக்கு திரும்பக் கிடைத்துவிடும். முகக்கட்டை அவிழ்த்து விட்டு கண்ணாடியில் தன் மூக்கை நோக்குவான் ரிக்கன். புதிதாக முளைத்த மூக்கை நோக்குவது போல அவன் பார்வையில் ஒரு பெருமிதம். அறையின் ஜன்னல் வழியாக வெளிக்குதித்து பறவை மனிதனாக அவன் பறந்ததற்கு அவன் புது மூக்கு தான் காரணமோ! கருடன் மூக்கு என்று சிறுவயதில் என்னைக் கேலி செய்த நண்பர்கள் என் நினைவில் வந்து போனார்கள்.

Ugetsu

உகேட்சு

குரோசவாவின் சமகால இயக்குனர் மிசொகுச்சி. குரோசவாவின் “ரஷமோனைப்” போலவே மிசொகுச்சியின் “உகேட்சு”வும் மேலை நாட்டு திரைப்பட ரசிகர்களுக்கிடையே ஜப்பானிய திரைப்படங்களை பிரபலப்படுத்தியது. மௌனத்திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவந்த 1923 இல் தன் திரைப்பட வாழ்வை துவக்கியவர் மிசொகுச்சி. தனது 58ம் வயதில் அவர் இறக்கும் போது கிட்டத்தட்ட 75 திரைப்படங்களை அவர் இயக்கியிருந்தார். குரோசவா, யசுஜிரோ ஒசு – இவர்களோடு சேர்த்து மிசொகுச்சியும் ஜப்பானிய சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். அகினாரி என்னும் ஜப்பானிய எழுத்தாளரின் “உகேட்சு” எனும் நாவலின் ஒரு பகுதியே  உகேட்சு திரைப்படத்தின் அடிப்படை. மத்திய கால ஜப்பானில் நடப்பதாக சித்தரிக்கப்படும் நிகழ்வுகள் மக்கள் படும் அல்லலைப் பேசுவதாக இருக்கிறது ; வரலாற்று நிகழ்வுகளை மிகுபுனைவாக சித்தரிக்கும் பழக்கம் இல்லாதவர் மிசொகுச்சி. படத்தில் வரும் இரு ஆண் பாத்திரங்களின் பொறுப்பற்ற சாகசவுணர்வு அவர் தம் மனைவியருக்கு எத்தகைய கஷ்டங்களை ஏற்படுத்தின என்பது தான் கதை முடிச்சு. நிலப்பிரபுத்துவ உலகின் வாழ்க்கை எத்துனை துன்பகரமானது என்பதை உகேட்சு காட்சிப்படுத்துகிறது. அதனாலேயே கதையின் ஆண் பாத்திரங்கள்  சில்லறைத் தனமாக  கனவுகளில் தம்மை அமிழ்த்திக்கொண்டு துன்பகரமான வாழ்வில் இருந்து தப்பிக்க வழி தேடுகிறார்கள். பெண் பாத்திரங்கள் ஜாக்கிரதையுணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள். போர்க்காலத்தில் வியாபாரம் செய்து பொருள் குவிப்பேன் என்று அடம் பிடிக்கும் கதையின் நாயகன் கென்ஜூரோ மனைவியை குழந்தையை கிராமத்தில் விட்டுவிட்டு நகர சந்தையில் கடை விரிக்கிறான். சந்தைக்கு வரும் ஒரு பணக்காரப் பெண்ணினால் கவரப்படுகிறான். அவளுடன் குடும்பம் நடத்துகிறான். பணக்கார மாது வகாஸா – வாக ரஷமோனில்  பெண் பாத்திரமாக நடித்த மச்சிகோ க்யோ நடித்திருக்கிறார். வகாஸா ஒர் ஆவி. இது புரிபட கென்ஜூரோவுக்கு சில காலம் ஆகிறது.  பேயிடமிருந்து தப்பி திரும்பி வரும் கென்ஜூரோவுக்கு கிராமத்தில் ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதிர்ச்சி வெளிப்படும்  கதையின் முடிவு கென்ஜூரோவின் பிராயச்சித்தமாக அமைந்து நம்மை நெகிழ்விக்கிறது.

டோபே எனும் பாத்திரம் சமுராய் ஆகும் கனவில் மனைவியை நட்டாற்றில் விட்டுவிட்டு, சிரிப்பு போலிஸ் கணக்காய் ஒரு விபத்தென சமுராய் அந்தஸ்தை அடைந்து, பெருமிதத்துடன் தன் பரிவாரம் புடை சூழ ஒரு கெய்ஷா வீட்டுக்கு செல்ல அங்கு தன்  மனைவியை ஒரு கெய்ஷாவாக சந்திக்கும் கட்டம் நம்மை நெகிழ்விக்கும் இன்னோர் உச்சம்.  இச்சம்பவம் மிசொகுச்சியின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்தின் தாக்கம் என்று சொல்கிறார்கள்.

தச்சராக வேலை பார்த்த மிசொகுச்சியின் தந்தையின் சில பொறுப்பற்ற வியாபார முயற்சிகளால் வறுமைக்கு தள்ளப்பட்டது  அவரின் குடும்பம். அதன் காரணமாக மிசொகுச்சியின் சகோதரியை மிசொகுச்சியின் தந்தை ஒரு கெய்ஷாவுக்கு “தத்து” கொடுத்துவிட்டார். அந்த வலி மிசொகுச்சியின் வாழ்நாள் முழுதும் அவரிடம் எஞ்சியிருந்தது. அவர் தன்னுடைய  பல படங்களில் கெய்ஷா ‘தீம்’ஐ சித்தரித்ததன் காரணம் இது தான் என்று சொல்லப்படுகிறது.

best-kenji-mizoguchi-films

கென்ஜி மிசொகுச்சி

 


“எதற்காக எழுதுகிறேன்?”

$
0
0

“எதற்காக எழுதுகிறேன்?”

நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் பேரன் அவரிடம் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்பானல்லவா? அப்போது வேலு நாயக்கர் சொன்னது போல “தெரியலியேப்பா” என்று தான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இதற்கு முன்னரும் இந்த கேள்வி என்னுடைய சில நண்பர்களால் கேட்கப்பட்டது. ஒருவன் “என்ன அல்டெர்னெடிவ் கேரியரா?” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவு தான் அதிகமாயிருக்கு!” என்று திருமதியார் சில முறை புலம்பி இருக்கிறார்.

“ஆத்ம திருப்தி” என்ற ஒன்றா ? என்னுடைய எழுத்தில் எனக்கு திருப்தி கிட்ட வேண்டுமென்றால் பல தசாப்தங்கள் பிடிக்கும். இல்லை அவ்வளவு நிச்சயமாக சொல்லி விட முடியாது. “திருப்தி” என்பது நம் கையில் கிடைக்காமல், நழுவித் தப்பித்துப் போய்க் கொண்டிருக்கும் ஒன்று என்றுதான் நான் கருதுகிறேன்.

“புகழ் பெற வேண்டும்” என்ற ஆசையா? ஆரம்ப காலத்தில் அப்படி இருந்திருக்கலாம்! முப்பது வருடங்களாக கடும் உழைப்பின் உதவியால் எழுத்துத்திறத்தின் உச்சியை என்றோ எட்டிவிட்ட சில எழுத்தாள நண்பர்கள் இன்னும் புகழடையாமல் இருப்பதைப் பார்க்கும் போது “புகழ்” என்ற ஒன்று கானல் நீர்த் தன்மையது என்பது விளங்குகிறது. ஒருவன் புகழை அடைவதற்கென சில ஆளுமை சார்ந்த குணாதிசயங்கள் தேவைப்படுகின்றன என்று எனக்கு தோன்றுகிறது. இணைய காலத்தில், சரியான நபர்களின் கண்ணில் பட்டு, விருப்பக் குறிகளும் கமெண்டுகளும் பெற்று சில கணங்களுக்குள் தற்காலிக ‘புகழை’ யார் வேண்டுமானாலும் அடைந்து விடலாம். ஜனத் தொடர்பு மூலோபாயங்களால் (கூகுள் மொழிபெயர்ப்பு நிரலியில் இன்று என்கண்ணில் பட்ட சொல்!) சில வாரங்களுக்கு சில மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு என “புகழில்” நிலை நிறுத்த வைக்கும்  ஜனத் தொடர்பு முகவர்கள் இருக்கிறார்கள். “புகழ்” என்பது வாங்கக் கூடிய பொருளாகிவிட்டது.

“நான் மக்களுக்கு சில கருத்துகளைச் சொல்ல வேண்டும்” என்ற இலட்சியம்?…இந்த வாக்கியத்தைப் படிக்கும் போது யாரேனும் ஒருவருக்கு சிரிப்பு வராவிடில் அவரின் தமிழ் அரைகுறை என்று அர்த்தம்!

பணம், திருப்தி, புகழ், இலட்சியம் – இவைகளெல்லாம் ஒருவரை எழுதத் தூண்டுகின்றன என்று உறுதியாக சொல்ல முடியாது. இறையருள், வரப்பிரசாதம் – என்றெல்லாம் சொல்லப்படும் விஷயங்களும் தொன்மங்கள் மட்டுமே.

கவிதை எழுதுவதற்கும் ஒரு புது வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கும் அல்லது சிறுகதை எழுதுவதற்கும் மாதாந்திர விற்பனை இலக்குகளை அடைவதற்கும் அல்லது நாவல் எழுதுவதற்கும் இரண்டு வருடங்களில் விற்பனையை இரட்டிப்பாக்குவதற்கும்  அடிப்படையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. திறன்,  ஆர்வம் – இவற்றைப் பொறுத்தே சாதனைகள் அமைகின்றன.

சலிப்பு அல்லது அலுப்பு? என்னைப் பொறுத்தவரை என்னை எழுத வைத்த காரணிகளில் (மற்ற காரணிகள் என்ன என்று கேட்டு விடாதீர்கள்) மிக முக்கியமானவை இவைதான். பல வருடங்களாக விற்பனைத் துறையில் ஈடுபட்டிருப்பதாலோ என்னவோ என்னை விட்டு நான் தூரமாகப் போகிறேன் என்ற எண்ணம் அடிக்கடி என்னை படுத்திக் கொண்டிருந்தது. அந்த எண்ணத்தை  நான் சலிப்பு  என்று தான் பெயரிடுவேன். இயங்கி வரும் துறையில் நான் கண்ட அபத்தங்கள் மற்றும் பாசாங்குத்தனங்கள் – இவைகள் தாம் அந்த சலிப்பை எனக்கு தந்ததாய் புரிந்து கொண்டேன். அந்த அபத்தங்களையும் பாசாங்குத்தனங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் தான் என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது என்று சொல்லலாம்.

மொழியை காதலிப்பவனுக்கு எழுத்தே “Orgasm” – என்று டிவிட்டரில் யாரோ எழுதியிருந்தார்கள்! உந்துதல், மொழி வாயிலாக எண்ணத்தை வெளிப்படுத்துவதில் கிட்டும் ஆனந்தம் – இவ்விரண்டுமே  எழுத்தின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள்.

அபத்தங்கள், பாசாங்குத்தனங்கள் – இவற்றை மட்டுமே எழுதுதல் எழுத்தை புலம்பல்களாக மாற்றிவிடுகின்றன என்பதை சீக்கிரமே புரிந்து கொண்டேன். புலம்பல் தன்மையை மீறிய ஒன்றை – ஒரு செய்தியை உணர்வை – பகிர்வதும் நல்ல எழுத்தின் இலக்கணம் எனப்  புரிந்தது. அந்தப் பகிரல் நீதிக்கதையின் தொனியில் கூறப்படாமல் அழகியல் துணை கொண்டு நுட்பத்துடன் கூறப்படவேண்டும். பகிரப்படும் செய்தி அல்லது உணர்வு மனிதநேயத்தை வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் ; சார்பு மற்றும் பாரபட்சங்களை விலக்கியதாகவும் இருக்க வேண்டும். இவையெல்லாம் நான் எழுதத் தொடங்கிய பிறகு கற்றுக்கொண்டவை.

அடுத்தவரின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது என்பது பயிற்சியின் பாற்பட்டது என்று எழுத ஆரம்பித்த பின் விளங்கியது. என்னுள்ளில் இருக்கும்  வலுவான விருப்பு வெறுப்புகளைக் களைவதில் எழுதும் பழக்கம் எனக்கு உதவி செய்கிறது.

இதுவரை நான் எழுதியவற்றில் அதிகமும் பயணங்கள் பற்றிய கதைகள். பயணங்கள் தொடரும். பயணத்தின்  முடிவிலக்கு என்று ஏதும் கிடையாது. பயணத்தின் சுவையை அனுபவித்தலே நாம் அறிய வேண்டியது.

நன்றி : பதாகை


மரக்கோயில்

$
0
0
IMG_2559

Ta Prohm (an ancient Buddhist temple, nearer to Angkor Wat Complex in Cambodia, built during the reign of  Jayavarman VII). The major sequences of the Angelina Jolie starrer Lara Croft : Tomb Rider was shot here.  This temple is known among the tourists as Tomb Rider Temple.

கோயிலில் இருந்த மரம்   

தனக்குள் கோயிலை அடக்கி வளர்கிறது   

பாம்பென வேர்கள் படர்ந்து  

இறுகின சன்னிதிகள்

காலியான சந்நிதானத்துள்

பிரதிஷ்டை கொள்ள வேண்டி

ஓடின வேரின் கீழ் நின்று

புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்

மரங்கள் கோயில்களுக்குள் புகுந்து

கடவுளாகி மறைந்த பின்னர்

சட்டகத்துள் வைத்து தொங்க விட

 



மோகமும் முக்தியும்

$
0
0

Rab2

ஒரு கலைப்படைப்பை ரசிப்பதோ கணிப்பதோ அதை நாம் புரிந்துகொள்ளும் விதத்தில் இருக்கிறது. புரிந்து கொள்ளும் விதம் மாறும் போது அப்படைப்பை பற்றிய நம் முந்தைய கணிப்பும் மாறும். இதன் செயல் முறை விளக்கம் ஒன்று சமீபத்தில் நடந்தேறியது. 2008-இல் பார்த்த திரைப்படம். பார்த்துவிட்டு பொருளற்ற பொழுதுபோக்குப் படம் என்று நான் நிராகரித்த படம். மீசை மாற்றினால் ஆளே மாறிவிடுகிறானாக்கும்! நாயகிக்கு இரண்டு பெரும் ஒருவர் தான் என்று புரிந்து கொள்ளமுடியவில்லையாக்கும்! காதுல பூ! என்று குறை சொல்லிக் கொண்டே rab ne bana di jodi படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து வெளியே வந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

2009 இலிருந்து பஞ்சாபி பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம் மற்றும் வரலாறு பற்றிய சில புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. சுஃபி இஸ்லாம் பற்றி இத்ரிஸ் ஷா எழுதிய புத்தகங்கள், புல்ஹே ஷாவின் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள், சீக்கியர்களின் புனித கிரந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள சுபி மகானின்  பாடல்கள் போன்றவையும்  அறியக் கிடைத்தன.

இரண்டொரு மாதங்கள் முன்னம் 2008 இல் பார்த்த  rab ne bana di jodi திரைப்படம் பற்றி நினைத்துக்கொண்டிருந்த போது “உருவகக்காதல் வழி தெய்வக் காதலைச் சொல்லும் படம்” என்று அப்படத்தை புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் மின்னல் வெட்டாக தோன்றி மறைந்தது. படத்தை இன்னொரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இந்தப் புரிதலை சரி பார்த்து விட முடியும் என்றிருந்தேன். அந்த வாய்ப்பு நேற்று அமைந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

+++++

எதிர்பாராத விபத்தில் காதலித்தவர் இறந்து போதல், திருமணம் நின்று விட்ட அதிர்ச்சியில் மரணப்படுக்கையில் தந்தை என ஒன்றன் பின் ஒன்றாக வாழ்க்கையின் அதிர்வுகளில் தனிமைப் பட்டுப் போன தானி (அனுஷ்கா ஷர்மா) தந்தையின் கடைசி ஆசைக்கிணங்கி சுரி (ஷாரூக் கான்) யைத் திருமணம் செய்து கொள்கிறாள். சுரி நல்லவன். சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அவன் ஹீரோ இல்லை. தூர நின்று அவளுக்கு வேண்டியதைச் செய்து பரிவு காட்டுகிறான். சுரிக்கு அவள் மேல் காதல். ஏனென்று கேட்டால் அவனுக்கு தானியின் முகத்தில் rabb (இறைவன்) தெரிகிறார். தானி அவன் உலகுக்குள் வந்த பிறகு இறைவனைக் கண்டால் தோன்றும் பரவச நிலையைப் போன்ற ஓர் ஆனந்த உணர்வை அவன் அடைகிறான். அவளுக்கு அவன் மீது காதல் இல்லை. அவனிடம் அன்பைக் காட்ட தன்னிடம் அன்புணர்வேதும் எஞ்சியிருக்கவில்லை என்று தானி சொல்கிறாள். சிறிது காலம் காத்திருந்தால் தன்னை முற்றிலும் மாற்றிக் கொண்டு பழைய தானியை அழித்துக் கொண்டு ஒரு புதிய மனுஷியாய் அவனுடைய மனைவியாய் வலம் வருவேன் என்கிறாள். சுரி காதலிப்பதோ பழைய தானியை ; அவள் ஏன் மாற வேண்டும்? அவள் மாறாமல் முன்னம் அவளுள் இருந்த உற்சாகத்துடன் வளைய வர வேண்டும் என்று விரும்புகிறான் சுரி. அவள் மேல் தனக்கிருக்கும் அன்பை பிரியத்தை வார்த்தைகளால் காட்டாமல் ஒரு விளையாட்டில் சுரி ஈடுபடுகிறான். தன்னுடைய முடியை திருத்திக் கொண்டு, இருக்கமான கால்சட்டை மாட்டிக் கொண்டு தானி நடனம் கற்றுக் கொள்ளும் இடத்துக்கு ராஜ் என்கிற பெயரில் செல்கிறான். சுரியின் குணங்கள் எதுவும் இல்லாமல் ஒரு Macho personality யாக, ஆட்டமும் உல்லாசமும் கேளிக்கையுமாக  தானியிடம் நட்பு கொள்கிறான். நட்பு வளர்கிறது. ராஜ் தான் சுரி என்ற உண்மை தானிக்கு தெரியவிடாமல் அவன் நாடகம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் ராஜ் அவளிடம் தான் காதலை தெரிவிக்கிறான். தானி சஞ்சலமுறுகிறாள். ராஜின் காதலை ஏற்பதா? அல்லது கணவர் சுரியுடனேயே இருப்பதா என்ற  குழப்பம்! படம் நெடுக மூன்று முறை பொற்கோயில் வருகிறது. அங்குதான் வள் குழப்பத்துக்கு விடை கிடைக்கிறது. பொற்கோயிலின் குளத்துக்கருகே இறைவனை பிரார்த்தனை செய்தவாறு மூடியிருக்கையில் சுரியின் முகத்தில் இறை தெரிவதாக உணர்கிறாள். அவளை அழைத்துப் போவதற்காக வரும் ராஜிடம் “உன்னுடன் ஓடினால் சுரியிடமிருந்து சென்று விடலாம் ; ஆனால் இறைவனிடமிருந்து சென்றுவிட முடியுமா? சுரியின் முகத்தில் எனக்கு இறைவன் தெரிகிறான்” என்று சொல்கிறாள். படத்தின் இறுதிக்காட்சியில்  தானியிடம் சேர்ந்து ஆடுவதற்காக அழைக்கப்படும் ராஜின் இடத்தில் இப்போது சுரி. தானியிடம் சேர்ந்து சுரி ஆடுகிறான். தானிக்கு எல்லாம் தெளிவாகிறது.

அன்பின் சமயமே இறைவனின் ஒரே சமயம் என்னும் பொருள் படும் “மத்தபி இஷ்க்” என்ற கருதுகோள் பாரசீக இலக்கியத்தில் நான்காம் நூற்றாண்டிலிருந்தே வலியுறுத்தப்பட்டு வந்தது. இரு வகை அன்பு அல்லது காதல் பற்றி பேசின சுபி இலக்கியங்கள் – இஷ்க் – இ – ஹகிகி மற்றும் இஷ்க்-இ-மஜாஸி. முன்னது இறை மேல் கொண்ட காதல், பின்னது பிற உயிர்கள் மேல் கொண்ட காதல். பக்திக்காதலை அலசிய சுபி ஞானிகள் மனிதர்களின் பிற உயிர்களின் காதலை இறைக்காதலின் படிமமாக்கிக் கொண்டார்கள்.  கண்ணுக்கெட்டா இறைவனை கொடூரக் காதலி எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்கள் ;  காதலை வருத்தம் தரும் நோய் என வர்ணித்தார்கள். “ப்யார் ஏக் தர்த்” – “காதல் ஒரு வலி” என்று தானி பல இடங்களில்  கூறுவதை படத்தில் பார்க்கலாம்.     

தெய்வீகத்தைப் பேசுகையில் அழகை (“ஜமால்”) காதலியின் முக்கியமானதொரு வெளிப்பாடாக சுபி ஞானிகள் சித்தரித்தார்கள். இது ஒரு பித்து நிலை. இந்த நிலையில் சில மனிதர்களை அவர்கள் தெய்வீகத்தின் மறுவடிவமாக ஏற்றிப் பார்க்கவும் செய்தார்கள். இஸ்லாமிய இறையியல் மறுக்கின்ற “அவதாரம்” என்ற நோக்கில் அவர்கள்  பார்க்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சுபி ஞானியின் பித்த நிலையை சித்தரிப்பாக சுரியின் முகத்தில் இறையைக் காண்பதாக தானி உணர்வதைக் கொள்ளலாம். இறைக்காதலை நாடும் சுபி தத்துவத்தின் படிமமாக மனிதக் காதலாகிய ராஜுடனான காதலை   நிராகரித்து இறைக்காதலின் படிமமாகிய சுரியுடனான காதலை உறுதி செய்யும் தானியின் இறுதித் தேர்வாகக் காண முடியும்.

புல்ஹே ஷா, வாரிஸ் ஷா போன்ற சுஃபிக் கவிஞர்களால் ஞானிகளால் செறிவுற்றது பஞ்சாபி இலக்கியம். சுபிக் கருத்துகளின் தாக்கம்  சீக்கிய சமயத்திலும் விரவியிருக்கிறது. சுபியின் அடிப்படைக்  கருத்தான உண்மை ஒன்றே என்பதை குரு நானக் சீக்கியர்களின் புனிதச் சின்னமான “ஓர் ஓங்காரம்” என்ற எழுத்திலக்கத்தில் பதிவு செய்கிறார். சுபிக்களைப் போன்றே சீக்கியர்களின் வழிபாடும் இசையையொட்டியே அமைந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த செவ்வியல் பஞ்சாபி இலக்கியத்தின் முன்னோடியும் சுபி ஞானியுமாகிய பாபா பரீத்-தின் 112 ஈரடிகளை 4 செய்யுட்களை சிக்கிய மதத்தின் ஐந்தாம் குரு – குரு அர்ஜன் – புனித கிரந்தத்தின் அங்கமாக்கியதும் சுபி இஸ்லாமுடன் சீக்கிய மதத்துடனான நெருங்கிய கருத்தியல் தொடர்பைக் காட்டுகிறது.

Rab ne bana di  jodi – படத்தில் பொற்கோயில் மூன்று இடங்களில் வருவதாக முன்னரே சொன்னேன்.  உயிர் நண்பன் பாபியின் சலூனில் ராஜின் மேக்-அப்பை போட்டுக்கொள்கிறான். சுரியின் மனசாட்சி போல கூடவே இருந்து துணையாகவும் அவனுடைய நெஞ்சின் குரல் போன்றும் வருபவன்  பாபி (வினய் பாடக்). சலூன் காட்சிகள் அனைத்திலும் சுவரில்  தொங்கும் குருநானக்-கின் திருவுருவம் பின்னணியாக இருக்கிறது.

பஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார்  :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)   

தெய்வக்காதலை மனிதக்காதலிலிருந்து பிரித்துப் பார்க்கும் கண்ணை இன்னும் பெற்றிராத தானி வெறும் மீசையை மட்டும் எடுத்து விட்டு ராஜ்-ஆக மாறும் சுரியைக் கண்டு பிடிக்காமல் இருப்பது கதையின் நிகழ்த்து அம்சம்  என்பதைப் படத்தைப் பார்த்த முதல் முறை பார்த்த அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

என்னைப் பொறுத்த வரையில், இரண்டு – மூன்று காட்சிகளை நீக்கியிருந்தால் இந்தப்படம் இன்னும் சிறப்புற்றிருக்கும். சுமோ பயில்வானுடன் சுரி பொருட்காட்சியில் சண்டையிட்டு தானியைக் கவர நினைப்பது, பிறகு, தானி “Macho” அல்ல தான் நாடுவது என்று தெளிவுபடுத்துவது, இறுதியாக ஜப்பானில் தேனிலவு கொண்டாட சென்று வந்ததாக சுரி கொடுக்கும் நகைச்சுவை வர்ணனைகள் – இவையெல்லாம் தேவையற்ற காட்சிகள். ஜப்பான் சுற்றுலாவை விளம்பரம் செய்வதற்காக  ஸ்க்ரிப்ட்டை நீர்க்கச் செய்திருக்கவேண்டாம்!

Rab ne


இபா-வின் மதிப்புரை

$
0
0

 இபா தன்னுடைய வலைதளத்தில் என் சிறுகதை தொகுப்பு – “டைசுங் நகரில் புத்தர் கோயிலுக்கு” மதிப்புரை எழுதியிருக்கிறார். முதுபெரும் எழுத்தாளருக்கு என் நன்றிகள்.  என் கால்கள் தரையில் மேவாமல் சற்று அந்தரத்திலேயே நிற்கின்றன.

டைசுங் நகரில் ஒரு புத்தர் சிலை

 

EEPAA


மழைநீர்ச்சுவை

$
0
0

அரட்டை கச்சேரி
முடிய
நள்ளிரவானது
முன்னறிவிப்பின்றி
கொட்டியது மழை
ஐந்து நிமிட
நடைத் தொலைவில் வீடு
ஸ்லிப்பர் தூக்கியிறைத்து
தோற்றுவித்த நீரூற்று பின் வர
வேகமாய் நடந்தேன்
தலையை நனைத்த நீர்
உதட்டில் பட்டு
உப்புக்கரித்தது
வீட்டை அடைந்து
தலை துவட்டி
வழிந்த துளிகளும்
உப்புகரித்தன
களைந்த சட்டையை
பிழிகையில் உருவாகியதோர்
அறைக் குட்டை
அரட்டையில்
வயது என்னவென்று கேட்ட நண்பரிடம் சொன்ன பொய்யின்
எண்ணுரு வடிவில்
உப்புக்கறையுடன்
வற்றிப் போனதந்த குட்டை
என் மூச்சிரைச்சல் நிற்கும் முன்னமே


என்ன முடிவு!

$
0
0

 

 

எங்கிருந்தாய் இதுவரை?

விடையற்ற வினாவின்  

சுவாரஸ்யம் விரியும்   

 

இது சரியா?

விடை தேடும் பிரயத்தனம்  

விடுதலே மிகச்சரி  

 

எங்கு செல்கிறோம்?

இலக்குகள் தொலைத்து  

நிகழ்வுகள்  லயித்து  

வினாக்களில் திளைக்கிறோம்

 

என்ன முடிவு?

வினாக்குறி விலகி  

வியப்புக்குறி விழுந்து  

விடை  நிகழும்  


சமீபத்தில் ரசித்தவை

$
0
0

Taxi Driver

Taxi Driver

மிகவும் கொண்டாடப்படும் ஸ்கார்ஸீசியின் படம் – Taxi Driver. பார்த்து முடித்த பின் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில்? மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில், முன் கண்ணாடி வழியாக படத்தின் காமிரா இயங்குகிறதல்லவா? அது போலவே முழுக்க முழுக்க அவன் கண்ணோட்டத்திலேயே ”டாக்ஸி ட்ரைவர்” படமாக்கப்பட்டிருக்கிறது. அவன் போகும் சாலைகள் எல்லாம் குப்பை கூளங்களாக இருக்கின்றன. நகரமெங்கும் விலை மாதர்கள் சாலையோரங்களில் குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். ஒரு பெண் தோழியை சினிமா அழைத்துச் செல்லலாம் என்றால் கூட நீலத்திரைப் படம் தான் நியூயார்க் நகரில் திரையிடப்படுகிறது. அவன் சந்திக்கும் அரசியல்வாதிக்கு அவன் சொல்லும் பிரசினைகள் பற்றிக் கேட்பதில் ஆர்வம் இருப்பதில்லை. இத்தனையையும் விடுங்கள். ஓர் இள வயது விலைமாதுவை அவன் விடுவிக்கப்பார்க்கிறான். அந்தப் பெண்ணுக்கு அதில் இஷ்டமில்லை. எத்தனை கொடூரமான உலகம் இது! இதைச் சரி செய்தாக வேண்டும்! ஓர் ஆயுதக் கிடங்கையே உடைகளுக்கு நடுவில் மறைத்து வைத்துக் கொண்டு உலவ வேண்டும். அந்த இளம் வயது விலை மாதுவின் ”பிம்ப்”பை, அவள் அடிக்கடி செல்லும் விடுதியின் முதலாளியை, அவளின் வாடிக்கையாளர்களை….எல்லோரையும் போட்டுத் தள்ள வேண்டும்….விடுதியில் நடக்கும் “ஷுட் அவுட்டில்” அவன் இறந்தானா பிழைத்தானா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் மீண்டும் டாக்ஸி ஓட்டும் காட்சி வருகிறது. இம்முறை டாக்ஸியின் முன் கண்ணாடி ஈரமாகாமல் சுத்தமாக இருக்கிறது. அவன் நீலப்படத்துக்கு அழைத்துச் சென்ற தோழி அவன் டாக்ஸியில் பயணிக்கிறாள். அவள் கொடுத்த பணத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவன் டாக்ஸியை ஓட்டிச் செல்கிறான். அவன் இறந்திருந்தானென்றால் கடைசிக் காட்சி அவன் மனதின் கனவாக இருந்திருக்கும். அவன் விழைந்திருக்கக் கூடிய மீட்பின் காட்சிகளாக இருக்கலாம் அவை. அவன் இறக்காமல் இருந்திருந்தால் அவன் இப்போது “நார்மல்” ஆகி விட்டான். தனிமைவயப்படுதலின், பிறருடன் சமூகத் தொடர்பு வைத்துக் கொள்ளும் திறம் இல்லாமையின் விளைவுகள் மீண்டும் அவனுள் எழக்கூடும்.

Bridge on the River Kwai

The Bridge on the River Kwai

The Bridge on the River Kwai  திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரம் – கர்னல் நிக்கல்ஸன். ராணுவ ஆஃபீசர்கள் போர்க்கைதிகளாக இருக்கும்போது அவர்களை உடலுழைப்பில் ஈடுபடுத்தலாகாது என்ற ஜெனீவா மாநாட்டு விதிமுறைகளை மீற இடங்கொடுக்காதிருக்கும் பாத்திரம். ஜப்பானிய ராணுவ கர்னல் சைடோ கர்னல் நிக்கல்ஸனை ஓர் இரும்புக் குடிசைக்குள் அடைக்கிறார். பாலத்தை கட்டி முடித்தல் நிக்கல்ஸனின் உதவியில்லாமல் சாத்தியமில்லை என்றறிந்த பின்னர் நிக்கல்ஸனின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு எப்படியேனும் பாலத்தைக் கட்டிக் கொடுக்குமாறு வேண்டுகிறார் சைடோ. நிக்கல்ஸனின்  தலைமையில் அர்ப்பணிப்புடன் செயல்திறத்துடன் போர்க்கைதிகளால் பாலம் செவ்வனே கட்டி முடிக்கப்படுகிறது. இதற்கு நடுவே, பாலத்தை உடைப்பதற்காக ஓர் அணி கூட்டணிப் படைகளால் ரகசியமாக அனுப்பி வைக்கப்படுகின்றது. பாலத்தை உடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு பாலத்தை முதல் ரயில் கடந்து போகும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். இதற்குள், கர்னல் நிக்கல்ஸன் ஏதோ சதித்திட்டம் நடப்பதாக உணர்ந்து அதைக் கண்டுபிடிப்பதற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நடக்க அவர் பின்னால் சைடோவும் பின் தொடர்ந்து வருகிறார். கட்டுப்பாடும், கடமையுணர்வும், பெருமிதமும் மிக்க நிக்கல்ஸன் தான் எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்தவராய் பாலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே மேலோங்கியவராய் சதித்திட்டத்தை கிட்டத்தட்ட வெளிப்படுத்திவிடும் படத்தின் உச்சகட்டம் பாத்திரங்களின் அவற்றின் நோக்கங்களின் ஊடாட்டமாக விரிகிறது. இறுதியில் பாத்திரங்கள் தத்தம் தன்மையில் நிலைத்தனவாய் வெறும் நிகழ்வுகளின் வரிசையாக படம் அபத்தமாக முடிவடையும் போது பால-உடைப்பை மறைந்திருந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் கிளிப்டன் சொல்லும் வசனம் மிகப் பொருத்தம் – “Madness! … Madness!”


Viewing all 175 articles
Browse latest View live